நெ டுஞ்சாலை ஓரத்தில் இன்னும் வெட்டப்படாதிருக்கும் ஒரு புளியமர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன இரு காதல் உள்ளங்கள் இருசக்கர வாகனத்து இருக்கையின் மீது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது ஒரு எளிய உணவு. அவள் அதை ஸ்பூனால் எடுத்து அவனுக்கு ஊட்டுகிறாள். அவன் மென்று மென்று விழுங்குகிறான் அவள் நாணத்துச் சிவப்பை. சிலர் அதைக் கண்டும் காணாதது போல் முகம் திருப்பிச் செல்கிறார்கள் சிலர் உற்றுக் கவனித்து ஏசிப் போகிறார்கள். அந்த விருந்தைக் கடக்கையில் அவளும் அறியாது அவனும் அறியாது நானும் உண்டேன் ஒரு வாய். .
இ ந்தநாள் ரொம்பவே சலித்துவிட்டது. பல்லாண்டுகள் தொடர்பற்றுப் போன பழைய நண்பர் ஒருவரை போனில் அழைத்தேன். நண்பர் 15 விநாடிகளுக்குள் சலித்துவிட்டார். அவரது பின்னணியில் இதுவரை கேட்டறியாத குருவியொன்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது. நானும் அதுவும் உரையாடத் துவங்கிவிட்டோம். அதன் ஒவ்வொரு பாடலுக்கும் என் தலைக்கு மேலே கிளைகள் தழைத்து மரமாகி மலராகி வனமொன்று அடர்ந்து வந்தது. மறுமுனையில் நெடு நேரம் பேச்சற்று இருப்பதை உணர்ந்த பழைய நண்பர் சற்றே உரக்கக் கத்தினார்.. “கேட்கிறதா...?” “கேட்கிறதா...?” “நன்றாகக் கேட்கிறது” என்றேன்.