Skip to main content

இசை கவிதைகள்

 




1


மேலோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு


ஒரு உடையிலிருந்து

இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல

ட்ரவுசருக்கு மாறுவது


ட்ரவுசருக்கு மாறுகையில்

நான் தயாராகிறேன்

எதற்கென்றால்

எல்லாவற்றிற்கும்


உறக்கத்திற்கு

போர்க்களத்திற்கு

எல்லாவற்றிற்கும்


ட்ரவுசர் அணிந்தவுடன்

சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள்

மேலோட்டமான நம்பிக்கைகளில்

வாழ்ந்து வருபவர்கள்

அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை


சுற்றுலா செல்கையில்

ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு

ட்ரவுசர் ஒரு சுற்றுலா

என்பாரும் உண்டு


ட்ரவுசரில் இருக்கையில்

நான் என் காதலி


அதை அளக்க முடியாது

என்பது போலவே

சுருக்கவும் முடியாது


ட்ரவுசரை காற்றோட்டம் என்பது

மூடர் தம் சுருக்கம்



2


ங்கு


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிடும் போது

உருவாகும் தாளமே!

நீ

அங்கென்னைக் கூட்டிச்செல்!



3


மிழ் மலர்கள்


அது ஒரு சின்னத் தோட்டம்


அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள்.


இன்று

புதிதாக

அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள்


“அருமலர் எழிலகம்”


அதில்

இனிமேல்தான் பூக்கள் வர இருக்கின்றன.


அதற்குள்

பூத்துக் குலுங்கிவிட்டன.



4


தேங்கெண்ணெய்


“அம்மா…” என்று கூவியபடி

முதல் முட்டிக் காயத்துடன்

தெருவிலிருந்து

வீட்டுக்குள் ஓடி வந்த போது

மாரோடணைத்துக் கொண்டு

கொஞ்சம் தேங்கெண்ணெய்

பூசி விட்டாள்.


உதடு வெடிப்புக்கும், வயித்துச் சூட்டுக்கும்

அதே தேங்கெண்ணெய்யேதான்


படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு

ஞாபக மறதிக்கு

முகப்பருவுக்கும்

அதேதான்


எது குறைந்தாலும்

தேங்கெண்ணெயால்

அவள் அதைக் கூட்டி விடுவாள்


மகன்

வீதியில் வாந்தி மீது விழுந்து கிடந்தமைக்கு

மண்டைச்சூடுதான் காரணம் என்பாள்


உள்ளங்கையில் தேங்கி நிற்கும்

நான்கு சொட்டால்

உலகத்துக் கோணல்களையெல்லாம்

வழித்தெடுத்து விடுவாள்


“ஒரு வாரத்துல சுக்கா காஞ்சிடும்….”என்று

ஒரு கட்டி மீது ஊற்றுகிறாள்

அவளது அருமருந்தை


கட்டி சொன்னது…


“நான் கேன்சர்கட்டி வந்திருக்கிறேன், உன் தேங்கெண்ணெயைக் கொல்வதற்காக…”


5


சிறிதே!


அவ்வளவு பெரிய வானம் என்பது

அதைக் காணும்

சின்னஞ்சிறிய

நீ தான்.




ஓவியம் : சேது வேலுமணி

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான