ஒரு முத்தம் பிறக்கிறது வளர்கிறது வளர்ந்து கொண்டே இருப்பது எதுவோ அதுவே முத்தம் ஒரு முத்தம் நினைத்துக் கொள்ளும் போது இரட்டிப்பாகிறது முத்தமிட்டுக் கொண்டவர்கள் துடைத்தெறியப் படுகிறார்கள் முத்தம் இன்னும் அங்கேயே அப்படியே மின்னிக் கொண்டிருக்கிறது. பிறந்ததனைத்தும் அழிகின்றன முத்தங்களைத் தவிர தித்திக்காத ஒன்று முத்தமாவதில்லை ஒரு போதும் நாம் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறோம் ஊழி தூங்கிக் கொண்டிருக்கிறது ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் மாறி மாறி கடித்துக் கொள்ளும் சம்பவத்திற்கு வேறு பெயர் சூட்டலாமே? |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments