Skip to main content

Posts

Showing posts from 2012

இன்னொருவன் சொல்கிறான்...

அதிகாலை நடை உடம்புக்கு நல்லது. அது கொழுப்பை குறைத்து இதய நோய்கள் நம்மை அண்டாமல் காக்கிறது. சர்க்கரை அளவை பராமரிக்கிறது. இளங்காற்றை சுவாசிக்கத் தருகிறது. கரும்பச்சை மரங்கள் காண அழகு. புள்ளொலி கேட்டு புதுமலர் பார்க்கலாம் தூணிலும் துரும்பிலும் இருக்கிறாரோ என்னவோ கடவுள் மிருதங்கத்தில் இருக்கவே செய்கிறார். அள்ளி முடியாத வனிதையர் கோலம் அது திருக்கோலம். இன்னொருவன் சொல்கிறான்.... "அதிகாலையிலேயே வீட்டை விட்டு ஓடிப்போவதற்குத் தான் வாக்கிங் போவதென்று பெயர்".

மூதேவி அருளியவை

                                         மூதேவியால் அருளப்பட்ட எல்லா சொற்களுக்கும்     சரஸ்வதியின் பூரண நல்லாசியுண்டு.                                               இசை  : 0:00                 உண்மையில் எனக்கு முன்னுரையில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை.என் கவிதையை திறந்து கொள்ள திறவுகோல் ஒன்றை வாசகர்களுக்கு வழங்கலாம்.ஆனால் அது வலிய ராட்சதர்கள் காவல் புரியும் அதீத மர்மங்களால் மூடிய குகையல்ல. எனவே அது அவசியமற்றது.இக்கவிதைகள் எழுதப்பட்ட சூழலைப் பற்றிப் பேசலாம். கவிதைகளையும் எழுதி விட்டு பிறகு அதைப் பற்றியும் எழுதுவது அலுப்பாக இருக்கிறது.இக்கட்டுரையின் தலைப்பொன்றே போதும் என்று தோன்றுகிறது.அது கூட கொஞ்சம் அதிகமாகத் தான் பேசி விட்டது என்று தோன்றுகிறது. ”கவிதை என்பது “ என்று துவங்கி எதாவது சொல்லலாம். உங்களுக்கு போர் அடிக்கும். நீங்கள் தான் எத்தனை ”கவிதை என்பது” வை கேட்டு விட்டீர்கள்.எத்தனை எத்தனையோ பேர் என்னென்னவோ சொன்ன பிறகும் இன்னும் சொல்ல ஏதேனும் மிச்சமிருப்பது தான் கவிதையின் அழகா?           தாடி மண்டிய லும்பனாகவோ, மீசை வழித்த சீலனாகவோ இல்லாமல் இருப்பது எவ்வளவு தவறு என்று ஒரு

தோத்தகாலிகளின் பாடல் வருகிறது....

ரஜினிசார், அந்த ஏரி இப்போது கடலாகிவிட்டது. பொங்குமறிகடல்.... இன்று நீங்கள் தனியனுமல்லன் தொடுவானம் முட்டி நிற்கும் எண்ணற்ற படகுகளில் அமர்ந்திருக்கும் எல்லோரும் நீங்கள்தான். நமது பரட்டைத்தலைகளை காற்றில் சிலுப்பிக்கொள்வோம் நாமெதற்கும் பொறுப்பல்ல.. நம்மை துடுப்புவலிக்க வைத்தவன் எவனோ அவனே அவர்களை நீருக்குள் பிடித்து தள்ளினான் கண்களை மூடி ஒருமுறை காண்போம் அந்த முத்தன்ன வெண்நகையை.. பிறகு பாடுபோம் நம் பாடலை... கண்டம் கருக்கடிக்கும் அப்பாடலை... வஞ்சத்தில் கமறும் பலநூறு குரல்களின் ஒத்திசையா ஊளையிது. நாம்  இக்கடலின் கர்ணத்தில் கடூரத்தை ஊதுவோம். ஊழி எழுந்து நீள்விசும்பலைந்து ஊர்புகுந்தாட, நம் ஆளுயரப்  பெருமூச்சில் நீதியின் மலைதீபம் பொசுக்கென்று அணைகிறது

கோணங்கி, வே.பாபு, எழுத்தாளர் பைரவன்

உதயகுமார் பேய்

யாரது .. ? பேயது !           நான் 30,000 ரூபாய் செலவு செய்து சுவரோடு ஒட்டிக் கொள்ளுமாறு ஒரு ப்ளாஸ்மா டீவி வாங்கிவைத்தேன். சனியன், அது வழியாகத்தான் ஒரு பேய் வந்து குதிக்கிறது என் வீட்டில்.            உன்னோட் சேனல் மூனு அங்கு மட்டும் இரு. தொன்னூறு சேனல்களுக்கும் வந்து தொலைக்காதே.        எனக்குத்தான் லீவ் கிடைக்கலியே அதான் எழுத்தாளர் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறேனே ?     ஆமாம்.. நேற்று ஏ.சி பாரில்தான் பீர் குடித்தேன். அதுக்கு...?    அரசொருபக்கம் கண்காணிக்கிறது பேயொருபக்கம் கண்காணிக்கிறது        என் கைச்சரசத்தில் இடை நுழைந்து தடைசெய்ய உனக்கு வெட்கமாக இல்லையா?         தம்பி, என்ன எழுதுகிறீர்? கவிதை... அரசியல் கவிதை..

கொக்கு பறக்குதடி பாப்பா !

ஐயன்மீர் , தங்கள் விமானங்கள் இன்னும் கொஞ்சம் தாள வாராதா ? வந்தால் தாவி நானதன் இறக்கையில் தொத்திக்கொள்வேன் போகிற வழியில் வால்மார்டில் குதித்துக் கொள்வேன்

கானம்- ரவிசுப்பிரமணியன் கவிதை

ம்... ஸ... விரல்களால் காது மடல்மூடி கூட்டும் சுருதியில் ரீங்காரம் கட்டுக்குள் வருகுது சகலமும் மண்கிளறி உரமிட்டு விதைவிதைத்து நீர் ஊற்றி தளிர் கிளைத்து மேலெழும்ப செடியாகி மரமாகி பூத்துக் குலுங்கும் ஸ்வரராக விருட்சங்கள்  பாடகி உருகி ராகத்தில் கரைகிறாள் தோப்பாகிறது அரங்கம் தோப்பில் திரியும் கவலைகளை தேர்ந்த இடையனாய் மெல்ல மேய்த்து வெளியில் நிறுத்திக் கதவைச் சாத்தி இன்னொரு அற்புதம் செய்கிறாள் அவள்

எனக்கினி ஒரு ஜன்மும் கூடி...

                                                                                                                              -  சாம்ராஜ் - எனக்குத் திலகனை "பெருந்தச்சனாகத்" தான் அறிமுகம். 89 அல்லது 90 என்று நினைக்கிறேன். அந்த உருவமும் குரலும் மிகையில்லாத நடிப்பும் என்னவோ செய்தது. "கிரீடம்" தான் என்னைத் திலகனின் தீவிர ரசிகனாக மாற்றியது. (தமிழில் அஜித்தை வைத்து அக்கிரமம் செய்தார்களே அந்தப் படம் தான். அசலுக்கும் போலிக்கும் என்ன வித்தியாசம் என்று இன்று வரை உங்களுக்கு வாழ்வில் விளங்கவில்லை எனில் இது இரண்டையும் அடுத்தடுத்து பார்த்து விடுங்கள்.)மலையாள சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிற படங்களில் ஒன்று கிரீடம். ஒரு அச்சன் - மகனைப் பற்றியான கதை. வண்ணதாசனின் வரியில் சொன்னால் ஒரு அச்சனின் கதை அது.  ஒரு தந்தையாக, சாதாரண போலீஸ்காரனாக, மகனை எஸ்ஐ - யாக      பார்க்க வேண்டும் என்ற விடாப்பிடியான கனவு கொண்டவனாக அந்த    கனவுகள் நொறுங்கிப் போனவனாக அபாரமாக செய்திருப்பார். எங்கேனும் ஒரு வயதான, உண்மையான, கீழ்ப்படிதலான போலீஸ்காரரை காணும் பொழுது தி

துயரத்தின் கழுத்துச் சதை மார்பில் துவள்கிறது

   காலையில் எழுந்ததும் டீ குடிக்கப் போவேன்    பாதி டீ வரை சும்மாதான் குடிப்பேன்    பிறகு  "மயிரப்புடுங்கியுடு"  என்று    இரண்டு வறுக்கிகளை வாங்கி நனைத்துத் தின்பேன்.    ஒரு ஜிலேபியை தின்னும்    அந்த இரண்டு நிமிடங்களில்     இந்த வாழ்வு இனித்துச் சொட்டுகிறது    இனித்துச் சொட்டும் வாழ்வை     விட்டுவிடக்  கூடாதென்பதற்காகத்தான்    காலையிலும், மதியத்திலும், இரவிலும்    இடையிடையும்    ஜிலேபிகளைத் தின்கிறேன்.    பால்யத்தை மீட்டுரு செய்யவே    கம்பர்கட்டுகளையும், கொடல் வத்தல் பாக்கெட்டுகளையும்   தின்கிறேன்.   ப்ரூ காஃபியும், பூண்டு மிக்சர் தட்டோடும்   நான் மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில்  மந்தமாருதம் என்னை  விட்டெங்கோடிப்போகும்?  நான் ஒழுங்காக கோப்புகளை பார்க்கவே ஆசைப்படுகிறேன்  இந்த கேண்டீன் முதலாளி மணிக்கொருதரம் காற்றில் சமோசாவை ஏவி விடுகிறான் அது என் காதோரம் வந்து பார்த்து பார்த்து என்னைத்தை கிழித்தாய் என்று கேட்கிறது இந்த நாட்டில் எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன ”இருசக்கர வாகனங்களில் காதலர்கள் இறுக்கி அணைத்தபடியே  பயணிக்கலாகாது

வீட்டிலிருந்து கிளம்பி வீட்டிற்கு போவது...

தூரநிலத்தில் என்னை வரவேற்க காத்திருக்கும் நண்பன் நான் அவசியம் அவன் வீட்டிற்கு வரவேண்டுமென்றும் அங்கு அவன் மனைவியும் குழந்தைகளும் என் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பதாகவும் சொன்னான் நான் அவன் முதுகிற்கு பின் இறங்கி ஒரு ஆட்டோவைப் பிடித்து ஓடினேன் இந்த மொட்டை வெய்யிலில் நின்றுகொண்டு எடுக்கவே எடுக்காத என் எண்னை திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டிருக்காதே... போய்க்கோடா நண்பா !

கவிஞர் விக்ரமாதித்தன் அம்ருதா செப்டெம்பர் இதழில்

ஒரு கழிவிரக்க கவிதை

ஒரு கழிவிரக்க கவிதை கண்ணை கசிக்கிக் கொண்டு என் முன்னே வந்து நிற்கிறது அதன் மேனியெங்கும் கந்தலின் துர்நாற்றம் ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதை கண்டாலே எரிச்சலெனக்கு. “ போய்த்தொலை சனியனே.. கண்ணெதிரே இருக்காதே..” கடுஞ்சொல்லால் விரட்டினேன். காலைத் தூக்கிக் கொண்டு உதைக்கப் போனேன். அது தெருமுக்கில் நின்றுகொண்டு ஒருமுறை திரும்பிப் பார்த்தது நான் ஓடோடிப் போய் கட்டிக்கொண்டேன்.

லூஸ்ஹேருக்கு மயங்குதல் அல்லது காமம் செப்பாது கண்டது மொழிதல்

நான் எளியனில் எளியன். லூஸ்ஹேருக்கு      மயங்குபவன். மனம் போன போக்கில் தான் போகிறேன் மனம் போகிறது அதனால் போகிறேன். லூஸ்ஹேரில்   பரலூஸ்ஹேர் என்றொன்றில்லை. என் உடலொரு கருவண்டுக் கூட்டம். ஒவ்வொரு லூஸ்ஹேரின் பின்னும் ஒரு வண்டு பறக்கிறது. எப்போதும் என் முன்னே ஒரு சுழித்தோடும் காட்டாறு. காட்டாற்றைக் கடக்க உதவும் ஆல்விழுதே… உன்னை சிக்கெனப் பற்றினேன். எனக்குத் தெரியும். லூஸ்ஹேரை மயிரென்றெழுதி கெக்கலித்த ஓர் அறிவிலி கடைசியில் அதிலேயே தூக்கிட்டு மாண்டகதை. ஈரும் பேனும் நாறும் இடமென தவநெறி முனிந்தால், லூஸ்ஹேரின் நுனியில் தொங்கிச் சொட்டும் துளிநீரில் இவ்வுலகு உய்கிறது என்பேன் .                                        ( யாத்ராவிற்கு )

க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்

நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு பந்துவீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன் எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார் அணித்தலைவர் ஓடிவந்து பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று மறுபடியும் வலப்பக்கம் சுழன்று விழுமாறு வீசச்சொன்னார் நான் அவரது முகத்தையே பார்த்தேன் அவர் திரும்பி ஓடிவிட்டார் எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார் அவரின் சடாமுடி ருத்ரதாண்டவனை குறித்து நிற்கிறது அடேய் சுடலையப்பா…. இந்த பந்தை வானத்திற்கு அடி… திரும்பி வரவே வராத படிக்கு வானத்திற்கு அடி.

கடுவளிக்காலம்

                                                                                    நான் இப்போது                                             குடித்தே ஆக வேண்டும்                                             என்னிடம் நாலு பேரல்                                             சாராயம் இருக்கிறது                                             என் ஊறுகாய் மட்டை                                             திருவனந்தபுரத்திலிருக்கிறது.

கணேசகுமாரன் கவிதை

  சாகும்வரை சிரிப்பவன் அவன் ஆரம்பகால நாடகங்களில் கதாநாயகனாக நடித்தவன்தான் கைதட்டி ரசித்த மக்கள் உச்சந்தலையில் முத்தமிட்டு வாழ்த்தினார்கள் கலைஞன் வீடு முழுவதும் விருதுகள் குவித்தான் மேலும் சில நாடகங்களில் வில்லனாக அவனே விரும்பி நடித்தான் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் சபித்தபடி விருதுகளையும் பரிசுகளையும் அவன் கையில் திணித்தனர் ஒரு நாளில் நிர்பந்திக்கப்பட்டான் கோமாளியாக நடிக்கும்படி சிரிப்பாய் சிரித்தது வாழ்க்கை அவ்வளவு பெரிதாக அவ்வளவு வலியாக அவ்வளவு கொடூரமாக எல்லோர் துயரங்களையும் விரட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தது மேலும் மேலும் அவனாலும் ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை சிரித்து சிரித்துக் கண்ணீர் பெருகி ஆறாக ஓடி மேடையும் மக்களும் மிதக்கத் தொடங்கியபின்னும் நிறுத்துவதாயில்லை அவன் அத்தனை அச்சாகப் பொருந்திவிட்டது கோமாளித் தொப்பி பழைய கிரீடங்களைத் துறந்து ஆட்டம் தொடர்கிறது இனி மேடையிலிருந்து வீழும் வரை கோமாளியின் தர்பார்தான்.

எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம்

எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம் இன்றைய விஜயவாணி கன்னட தினசரியில் வந்துள்ளன. மொழியாக்கம் செய்த கன்னட கவி கார்பென்டருக்கும், உதவிய நண்பர் சீனிக்கும் சிவாஜிகணேசனின் முத்தங்கள்.. ತಮಿಳು ಕವಿ ಇಸೈ ( Isai Karukkal ) ಅವರ ಎರಡು ಪದ್ಯಗಳ ಅನುವಾದ ಇಂದಿನ ವಿಜಯವಾಣಿ ಪತ್ರಿಕೆಯಲ್ಲಿ ಪ್ರಕಟಗೊಂಡಿದೆ. ಅನುವಾದವನ್ನು  Srinivasan Kannan  ಅವರ ನೆರವಿನಿಂದ ಮಾಡಿದ್ದೇನೆ. please watch today's Vijayavani daily. Tamil poet Isai's Kannada translated poems have published (translation:  VR Carpenter )

என் கழுத்துநரம்பு முறுக்குக் கம்பியாலானது

என் பள்ளித்தோழன் தன் உள்ளங்கைக்குள் ஐந்து தேன்முட்டாய்களை காட்டிமறைத்த போது நான் முதன்முதலாக என் தலையைத் திருப்பிக்கொண்டேன் என்று நினைவு பிறகு எத்தனையோ முறை வெடுக் வெடுக்கென்று திருப்பிக் கொண்டேன் என் காளைப் பருவம் முழுவதும் வெட்டி வெட்டி இழுத்தேன் எத்தனை திருப்பிற்கும் அறுந்து போகாத என் கழுத்து நரம்பு ஒரு மருத்துவ அதிசயம் நாம் என்னவோ கடவுளை கண்டபடி திட்டுகிறோம் உண்மையில் அவர் ஒரு பேருபகாரி இந்த வாழ்வில் ஒரு முறை கூட தலையைத் திருப்பிக் கொள்ளாதவர் தவிர மற்ற எல்லோரும் ஒரு சேர எழுந்துநின்று அவர்க்கு நன்றி சொல்லுங்கள் அவர் நம் தலையை திருப்பிக் கொள்ளுமாறு வைத்ததின் மூலம் அதை வெடித்துவிடுவதினின்று காத்தார்.

ஓட்டைவாளியில் நீர்சுமப்பவன்

இசையின் “ சிவாஜிகணேசனின் முத்தங்கள் “ ஐ முன் வைத்து...                                                                                                                             - சாம்ராஜ்- பத்து மணிக்கெல்லாம் நடைசாத்தப் பழகியவர்களின் பாழ்நிலத்தை நாம் பாதுகாக்கத்தான்  வேண்டுமா ?  என்று கவிஞன் லிபிஆரண்யாவின் கவிதையொன்று முடியும். அப்படியான நிலம்தான் இது. முரன்பாட்டின் முக்கோணம் இந்நிலம், அன்றாடம் அந்த முரன்பாடு நம் சட்டைபிடித்து உலுக்குகிறது. சமயங்களில் நம்மைப் பார்த்து கேலியாய் நகைக்கிறது.. பேண்ட்களையோ, உள்ளாடைகளையோ நனைக்கிறது. பாலத்திலிருந்து குதிக்கச் சொல்கிறது. கொலை செய்யச் சொல்கிறது. கேவலப்படுத்துகிறது. பின்னிரவில் எழுப்புகிறது. பேயாய் பகலில் அலைய வைக்கிறது. பிரேதங்களை வாஞ்சையோடு பார்க்க வைக்கிறது. மிருகக்காட்சிசாலை கூண்டுக்கெதிரே வெகுநேரம் நம்மை நிறுத்தி வைக்கிறது. அன்பை  நல்ல பாம்பின் நாகரத்தின கல்லாக்குகிறது. இந்தக் கொடடூர வாழ்வை எப்படி எதிர்கொள்வது? கூட்டு தியானம் போல கூட்டு தற்கொலை சாத்தியமா?, அல்லது அன்றாடம் செத்துச் செத்து பிழைக்கலாமா?” ஊரும் சதமல

இரண்டு கவிதைகள்

1.நம் பூனைக்குட்டியைப் பார்த்தேன் கோடாக இளைத்து மேலெல்லாம் புண்ணாக முடைவீசும் குப்பைமேட்டில் எதையோ மோந்துபார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியை பார்த்தேன் அதற்கு என் உதட்டிற்கும் உன் கழுத்திற்குமான முனகலில் பிறந்ததின் அதே சாயல் என் பழைய பூனைக்குட்டியே.. பழைய ப்புச்சுக்குட்டியே.. பழைய வெல்லக்கட்டியே.. பழைய மொசக்குட்டியே.. 2. ரிசல்ட் பயாப்ஸி டெஸ்டுக்கான முடிவுகள் வந்துவிட்டன மருத்துவர் மூக்கு கண்ணாடியை கழற்றிவிட்டு கருணையின் கண்களைக் காட்டினார் தோளைத் தட்டித் தந்து தைரியமாக இருக்கச்சொன்னார் நான் காதியில் ஒரு நீலக்கலர் சால்வை வாங்கிப் போத்திக்கொண்டேன்.

உனக்கு நீயே தான்

உனக்கு நீயே தான் சொக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் மிஸ்டுகாலில் விளையாடிக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் மறந்த பொருட்களை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் பின்னால் வந்து கட்டிக் கொள்ள வேண்டும் உனக்கு நீயே தான் நிலா காட்டிக் கொள்ள வேண்டும் நீயே தான் உன் காதில் கிசுகிசுத்துக் கொள்ளவேண்டும் நாலாவது ரெளண்டில் உனக்கு நீயே தான் கண்டித்துக் கொள்ளவேண்டும் உன் கண்ணில் நீர் வழிந்து உன் நெஞ்சிலேயே தான் உதிரமும் கொட்டவேண்டும் உன் தலையை அரிந்து உன் மடியில் போட்டுக் கொண்டு நீயே தான் கோதிவிட வேண்டும்.

வாளோடும் வயலினோடும் அலைபவன்....

லிபி ஆரண்யாவின் “ தப்புகிறவன் குறித்த பாடல்’ --- - சாம்ராஜ்- தமிழில் அரசியல் கவிதை எழுதுபவர்கள் மிக குறைவு. இங்கு இயங்கும் “கவிதையின் அரசியல்” அரசியல் கவிதைகளுக்கு எதிரானது. இடதுசாரிகளிடமே எப்பொழுதும் ”அரசியல் கவிதை” எழுதும் பேதமைமிக்க பொறுப்பு ஓப்படைக்கபடும். அவர்களும் கோஷங்களின் பிரேத குழியில் வார்தைகளின் சவங்களை அள்ளி அள்ளி புதைப்பார்கள். பிறகு பிறகென்ன சவங்களில் முளைத்த சொற்கள் மயானமெங்கும் மரத்தில் தொங்கும் விக்கிரமாதித்யன் வேதாளமாய் மிக அரிதாக அந்த காட்டில் மலர் பூப்பதுண்டு. என்பதுகளின் நடுபகுதியில் நக்சல்பாரி இயக்கங்களின் வெகுசன பத்திரிக்கைகளில் அப்படி மலர்கள் பூத்தன. உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் கலைநேச பிரபு, புதிய ஜிவா, பாரதிபுத்திரன், நிஷா என. இவர்களில் மிக முக்கியமானவர் பாரதிபுத்திரன். ”மாரிக்கால இரவுகள்” என்று ஓரு தொகுப்பு மாத்திரமே அவருக்குண்டு. அதுவும் 95 பிறகு மறுபதிப்பு வராத தொகுப்பு. மிக அரிதான குரல் பாரதி புத்திரனுடையது. கோஷங்கள் இல்லா

நாம்

எனக்கு காலையிலும் மாலையிலும் தன்னையே பிழிந்து சூஸ் போட்டு கொடுக்கும் ஒரு அம்மா.. வட்டவட்ட சிப்ஸ் துண்டுகளாக தன் சதை அரிந்து தரும் ஒரு அப்பா.. இரண்டு இரத்தத்தின் இரத்தங்கள்.. என்றாலும் அவர்களின் வயிற்றுக் கடுப்பின் போது நான் கழிவறைக்கு உடன் போவதில்லை. என் மழைக்காலத்து ஆஸ்துமா இரவுகளில் அவர்கள் குறட்டை விட்டு தூங்குகிறார்கள் " அங்க இருக்க முடியல.. வீட்டுக்குள் புகுந்து பெட்டைகள சிதைக்கிறாங்க.." என்று அகதியொருத்தி பேட்டி தருகையில் நான் பாயசம் அருந்திக் கொண்டிருந்தேன் விழிக்கடை நீரை உதறி எறிந்து விட்டு மீதி பாயசத்தை உண்டேன் நண்பனை சிமெண்னெய் ஊற்றி எரித்து விட்டு வந்த இரவு கால முறைப்படி மனைவியை புணர்ந்தாக வேண்டிய நாளாக இருக்கிறது "தம்பி.... ! எழந்திரு...." நாமுக்குள் எட்டிப் பார்த்தால் நானும், நீயும் தனித்தனியாக தெரிகிறது. இந்த "ஓருடல் ஈருயிரை ' சுடுவதென்றால் எத்தனை முறை சுட வேண்டும் குத்துவதென்றால் எத்தனை முறை குத்தவேண்டும்..

திசேராவின் “ வெள்ளைத்தோல் வீரர்கள் “- ஒரு வாசிப்பனுபவம்

இந்த கட்டுரை சார்ந்து உங்களின் பொருட்படுத்தலுக்காக முதலிலேயே சில விஷயங்களை சொல்லி விடுவது உத்தமம். நான் கவிதைகள் எழுதி வருகிறேன். ஆனால் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் பத்தைத் தாண்டாது. நான் சிறுகதைகள் எழுதுவதில்லை. உலகின் தலைசிறந்த பத்துகதைகளுள் ஒன்று என்கிற நினைப்பில் என்னால் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகள் பிரசுர வாய்ப்பை பெறவில்லை.தவிர கொலைக்களத்திலிருந்து எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளை தின்று கொழுத்து, ஊதிப்பெருத்திருக்கும் சுகவாசியான நான் விமர்ச்சிக்கப் போகிறேன்.மேலும் இது என் முதல் சிறுகதை விமர்சனம். இக்கதைகள் தொகுப்பாக்கப் பட்ட ஆண்டு 2004. இதில் இருக்கும் சில கதைகள் 2000 ல் எழுதப்பட்ட்வை. ஆக சுமார் 10 வருட இடைவெளியில் நமது மண்டையை கொஞ்சம் பெரிதாக்கிக் கொண்டு 2012 இக்கதைகளை விமர்சிக்கப் போகிறோம். திசேராவின் கதை சொல்லல் முறை ரொம்பவும் நிதானமானது.உணர்வெழுச்சியால் பீடிக்கப்பட்டு பீறிட்டெழும் மொழிதல் அனேகமாக எந்தக் கதைகளிலும் இல்லை. ”குண்டுகள் எங்காகிலும் வெடித்துக் கொண்டே இருக்கின்றது” என்று துவங்கும் கதையிலும் கூட. இந்த நிதானமான மொழிதலோடு ஒரு மென் அங்கதம் தொகுப்பின் எல்லா கதைக

இன்றைய மாலை நடை எடையற்றிருக்கிறது

எனக்கு கடை வாயில் மூன்று பற்கள் சொத்தை இரண்டால் இப்போதைக்கொன்றும் பாதகமில்லை கடந்த சில நாட்களாக அந்த கடைசி பல்லின் ஊழிக் கூத்து... அதிலிருந்து சல்லொழுகும் வேட்டைநாயொன்று வெளியே குதித்தது. அதன் குதிரை உயரத்திற்கு கீழே கிடந்தேன் என் இத்துனூன்டு நெஞ்சில் க‌னத்த குளம்படிகள் விடிய விடிய ஓடின‌ அப்பாவி நண்பர்கள் வேட்டை நாயிற்கு கிராம்பு தைலம் பூசச் சொன்னார்கள் வலி தாளாத நான் வாயிற்குள் ஒரு ஊசியைப் போட்டு நேற்றதைப் பிடுங்கி எறிந்தேன். இப்போது அங்கொரு சின்ன ஓட்டை. காற்றை அள்ளி வாய் முழுக்க கொப்பளித்தேன் இன்றைய மாலை நடை எடையற்றிருக்கிறது. என் ஊரை விட்டு வெகு தூரம் வந்துவிட்டேன் பாழாய்ப் போன என்னை விட்டு வெகுதூரம் கடந்து விட்டேன் நான் சொல்கிறேன்.. இன்று நிறைந்த பெளர்ணமி. வான் சொல்லும் சிறுபிறையை ஒரு வளைவளைத்து முழுமதியாக்கி நடக்கிறேன்

நெடுவெங்கோடை

சாலையின் தார் உருகி வழிந்து வாகனங்கள் வழுக்கி விழுந்தன‌‌ தர்ப்பூசணிப் பழத்தில் தீ பிடித்துக் கொண்டது என் உடலில் இருந்து கல் உப்புகளை வழித்தெடுத்தேன் பதினோரு ஆண்டுகள் கழித்து மின்சாரம் வந்திருக்கிறது நண்பா அந்த ஃபேனை 20 ல் வை !

ஆதவன் தீட்சண்யா கவிதை

இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு.. சுவற்றின் இந்தப்பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி நானெருவன் எத்தனைக்காலம்தான் காத்திருப்பது? உங்களில் ஒருவருக்கேனும் எனது குரல் காதில் விழுகிறதா? என்னோடு உரையாடுவதை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு உங்களது குரல்வளையை நீங்கள் இன்னும் அறுத்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில் மறுமொழி சொல்லுங்கள் யாரேனும் குலுக்குவதற்கு நீட்டப்பட்டிருக்கும் எனது கரங்கள் மரத்துப்போய் தானே தொய்ந்துவிழ வேண்டுமென்று காலந்தாழ்த்தும் தந்திரத்தை கைக்கொண்டிருக்கிறீர்களா அல்லது, இதோ நானிருக்கிருக்கிறேன் என்று பதில் கூற யாருமேயில்லாத பாழ்வெளியாய் கிடக்கிறதா அந்தப்பக்கம் சுவர் உங்களைக் காப்பதாய் சொல்லிக்கொண்டு சுவற்றை நீங்கள் காக்கும் இழிகாலத்தில் எந்தப்பக்கம் இருபவர் யார் என்ற வழக்கில் இப்போது எழுதப்பட வேண்டியது தீர்ப்பு மட்டுமேயாதலால் சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன் அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா? உஸ்பார் கொய் ஹை க்யா? ஆக்கடே யாரு இதாரே? திக்கடே பாஜீ கோன் ஆஹே..? அக்கட எவுரு உண்ணாரு

கருணையின் ராஜா

பல நாள் திருடன் நான் இறந்துக் கிடக்கிறேன் என்னை ஒரு நாளும் அகப்படாமல் இறக்கச் செய்தீர் ஸ்தோத்ரம் ஆண்டவரே சில ஈக்களை அனுப்பி என் முகத்தின் திருட்டு களையை பறந்து போகப்பண்ணினீரே ஸ்தோத்ரம் ஆண்டவரே யோக்கியத்தின் கல்லிலிருந்து என்னை தப்புவித்தீர் கருணையின் ராஜா ! உமக்கு நன்றி ஐயா

ஏக்கத்தின் தேன்

நள்ளிரவில் விழித்துக்கொண்டு பாலுக்கழுகிறது என் குழந்தை. ஒரு வாய் சோறதற்குப் போதவில்லை அள்ளிஅள்ளிக் கொட்ட எனக்குத் துப்பில்லை. கிறீச்சிடா வண்ணம் கதவு திறப்பதில் அது சமத்தெனினும் கொஞ்சம் கிறீச்சிட்டுத் தான் விடுகிறது. அப்போது நான் கண்மூடிக் கிடப்பது போல் கிடப்பேன். தெரியும், அது மண் தின்னப்போகிறது. போகட்டும். கையிரண்டில் அள்ளி வாய் முழுக்கத் தின்னட்டும். சதா ஏக்கத்தின் தேனூறும் அதன் கட்டை விரல் சுண்டச் சூம்பி விட்டது சீக்கரத்தில் மறைந்து விடும். கண்நுதல் நெருப்பில் தப்பிப்பிழைத்த ஒரு துளியிலிருந்து பிறந்து வளரும் குழந்தையிது, சிவனேன்னு கிடப்பதில்லை ஒரு பொழுதும்

தம்பி

ஒவ்வொரு அதிகாலையிலும் அவசர அவசரமாக பல்துலக்கி முடிக்கையில் ஒரு நினைப்பு இன்று எவளோ ஒருத்தியின் இதழ்கடித்து தின்போமென. தம்பி இன்னும் கொஞ்சம் பேஸ்டை பிதுக்கி இன்னும் கொஞ்சம் துலக்குகிறான்.