Skip to main content

எனக்கினி ஒரு ஜன்மும் கூடி...




                                                     
                                                                       -  சாம்ராஜ் -

எனக்குத் திலகனை "பெருந்தச்சனாகத்" தான் அறிமுகம். 89 அல்லது 90 என்று நினைக்கிறேன். அந்த உருவமும் குரலும் மிகையில்லாத நடிப்பும் என்னவோ செய்தது. "கிரீடம்" தான் என்னைத் திலகனின் தீவிர ரசிகனாக மாற்றியது. (தமிழில் அஜித்தை வைத்து அக்கிரமம் செய்தார்களே அந்தப் படம் தான். அசலுக்கும் போலிக்கும் என்ன வித்தியாசம் என்று இன்று வரை உங்களுக்கு வாழ்வில் விளங்கவில்லை எனில் இது இரண்டையும் அடுத்தடுத்து பார்த்து விடுங்கள்.)மலையாள சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிற படங்களில் ஒன்று கிரீடம். ஒரு அச்சன் - மகனைப் பற்றியான கதை. வண்ணதாசனின் வரியில் சொன்னால் ஒரு அச்சனின் கதை அது.

 ஒரு தந்தையாக, சாதாரண போலீஸ்காரனாக, மகனை எஸ்ஐ - யாக    
 பார்க்க வேண்டும் என்ற விடாப்பிடியான கனவு கொண்டவனாக அந்த    கனவுகள் நொறுங்கிப் போனவனாக அபாரமாக செய்திருப்பார்.
எங்கேனும் ஒரு வயதான, உண்மையான, கீழ்ப்படிதலான போலீஸ்காரரை காணும் பொழுது திலகனின் அந்தப் பாத்திரம் ஓர்மையில் வராமல் கடப்பது சாத்தியமில்லை. ரௌடியாக ஆகி விட்ட மகனை கடைத் தெருவில் இரவு ரோந்தின் பொழுது டார்ச் வெளிச்சத்தில் அப்பனும் மகனும் பார்த்துக் கொள்கிற தருணம் வாழ்வின் துயரம் அறிந்தவர்களுக்கு ஒருபொழுதும் மறக்க முடியாத தருணமது.

கிரீடத்தின் இரண்டாம் பாகமான " செங்கோல்" அதில் மகளைக் கூட்டிக் கொடுப்பவராக, அதை மகன் கண்டு பிடிக்கும் பொழுது தற்கொலை செய்து கொள்ளவதாக திலகனின் பாத்திரம். மகளை நாடகத்திற்கு நடிக்க அழைத்துப் போகும் தந்தை, அந்தப் பயணத்திற்கு "வேறு நோக்கங்களும்" உண்டு. அந்த நோக்கங்களை ஒரு சிறிய பெட்டியைக் கையில் பிடித்தபடி மகளோடு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து போவதில் திலகனால் கொண்டு வந்து விட முடியும்.

குணச்சித்திரம், எதிர்மறை, நகைச்சுவை என எல்லாத் தளத்திலும் அவரால் இயங்க முடியும். கிலுக்கம், மூக்கற்ற ராஜ்ஜியம், சில குடும்பச் சித்திரங்கள் போன்ற படங்களில் அவரது அபாரமான நகைச்சுவை நடிப்பை உணர முடியும். அவரது விருப்பமான நடிப்பு குணச்சித்திரமும், எதிர்மறை பாத்திரங்களுமாகவே இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. "காட்டுக் குதிரா" என்றொரு படமுண்டு. அது முழுக்க எதிர்மறையான பாத்திரம். திலகன் மீது நமக்கு வெறுப்பு வராமல் நாம் அரங்கத்தை விட்டு வெளிவர முடியாது.

சிறிய பாத்திரங்களில் கூட அவரால் நுட்பங்களை கொண்டுவந்து விட முடியும். " நாடு வாழிகள்" படத்தில் பெரிய முதலாளிகளின் வீட்டில், முதலாளிகள் வளரத் தொடங்கிய காலத்திலிருந்தே, அவரோடு கூடவே இருக்கும், பெரிய திறமையற்ற விசுவாசமிக்க ஊழியனின் பாத்திரத்தை அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார். தமிழில் சொன்னால் கொஞ்சம் அல்லக்கை பாத்திரம் அது. ஆனால் அதை திலகனால் தான் அப்படிச் செய்ய முடியும். " வரவேழ்ப்பில்" ஆர் டி ஓ அதிகாரி, "சதயத்தில்" நீதிபதி, "பிங்காமி" யில் சமூக சேவகன், "பஞ்சாக்கினி" -யில் பத்திரிக்கையாளன் என ஒருபாடு நல்ல பாத்திரங்கள் அவருக்கு உண்டு. அவரை மட்டுமே நம்பி எழுதப்பட்ட எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நிறைய உண்டு. பத்மராஜனின் மூணாம் பக்கம், லோகியின் கண்ணெழுதி பொட்டும் இட்டு, ரஞ்சித்தின் இந்தியன் ருபீ, அன்வர் ரஷீத்தின் உஸ்தாத் ஹோட்டல் என.

எதிலும் அடங்காதவராக இருந்தார் திலகன். தமிழில் வெறும் "பன்னீர்ஷெல்வம் " என்ற விளியின் மூலம் அறியப்பட்டவராகவே அவர் இருந்தார். அது அவரது ஒரு பக்கம் மட்டுமே!

எனக்கு ஒரு ஆறேழு வருடங்களாய் தொலைபேசியில் அவரோடு பேசிக்கொள்கிற அளவிற்கான நட்பிருந்தது. தொலைபேசியில் மிஸ்டு-காலைப் பார்த்துவிட்டு "ஈ நம்பரிலிருந்து விளிச்சிருந்தல்லே" என அவர் கேட்கும் பொழுது எனக்கு ஆடிப்போகும். எத்தனையோ படங்களில் கேட்ட அவரின் மகத்தான குரல் அது. என்னோடு தமிழில் பேசவே முயற்சிப்பார். "சொல்லுங்கோ" என்பார். சிறுவயதில் மதுரை, ராமேஸ்வரம் எல்லாம் வந்திருப்பதாகச் சொன்னார். தனது இளமைக்கால நாடக அனுபவங்களைப் பற்றி எப்பொழுதேனும் சொல்வார். தன் குரல் தனக்கு மிகப் பெரிய பலம் என்பார். எந்த மொழியானாலும் தன் குரல் இல்லையெனில் தன் நடிப்பில் பாதி போய் விடும் என்பார். சிவாஜியோடு யாத்ரா மொழி படத்தில் நடித்ததை தன் வாழ்நாள் பாக்கியமெனக் கூறுவார்.

AMMA -வோடு (மலையாள திரைப்பட அமைப்பு) முரண்பட்டு, புறக்கணிக்கப்பட்டு படங்களே இல்லாத சமயத்தில் இனியும் தனக்கு இந்நிலை தொடர்ந்தால் கலாச்சாரத் துறை அமைச்சர் எம் ஏ பேபி வீட்டு வாசலில் தற்கொலை செய்துகொள்வேன் என ஆனந்த விகடனில் பேட்டி அளித்தார். ஏன் சார் இப்படி என்று கேட்டேன்! கைப்பாகச் சிரித்தார். ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் " அது ஒரு வால்லாத வேதனையானு " என்றார். அபிநயிக்கானு இல்லாது இருக்கினது தனக்கு ஒருக்கிலும் தாங்காம் பட்டிலா" என்றார். நான் அழைக்கும் பெரும்பாலான சமயங்களில் உடல் நலம் இல்லாதிருந்தார். ஏதாவது சூரணம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்வார். ஒருமுறை அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. நான் போக முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சி என் வாழ் நாளுக்கும் இருக்கும்.

மலையாள சினிமா அவர் மரணத்தை முன் அறிந்தது. போன வருடம் அவர் மீதான தடைகள் நீக்கப்பட்டபோது இயக்குனர் ரஞ்சித் அதற்காகவே காத்திருந்தது போல அவருடைய ஆகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இந்தியன் ருபி திரைப்படத்தை இவருக்காகவே இயக்கினார்.

எந்த கதாநாயகர்களோடு முட்டி மோதினாரோ அவர்களின் படங்களிலும் தடைக்குப் பிறகும் நடித்தார். மோகன்லாலோடு ஸ்பிரிட் படத்தில் நடித்தார். (இருவரும் சந்தித்துக் கொள்வது போல காட்சிகள் இல்லையென்றாலும் கூட).

மம்மூட்டியின் மகனின் இரண்டாவது படமான "உஸ்தாத் ஹோட்டல்" திலகனை மனதில் வைத்தே எழுதப் பட்டது. (மம்மூட்டியே தன் மகனுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கிறார் என்று சொல்கிறார்கள். அவருக்கு திலகன் மைய பாத்திரமாக இருக்கும் படத்தில் தன் மகன் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை).

ஒரு நல்ல நடிகனுக்கு உண்டான கௌரவத்தை சற்று தாமதமாகவேனும் மலையாள சினிமா அவருக்கு அளித்தது. உஸ்தாத் ஹோட்டல் படத்தின் முடிவு (ஏறக்குறைய அவரின் கடைசிப் படங்களில் ஒன்று) அவரது வாழ்விற்கான குறியீட்டு முடிவு போலவே இருக்கும். படத்தின் இறுதியில் எங்கோ சுவடுகளற்று புகை போல் மறைவார். திரைப்படத்தில் அவர் எங்கோ வாழ்வதாக மற்றவர்கள் நம்புவார்கள்.

அந்தத் திங்கள் காலை " திலகன் நம்மிடம் இருந்து விடை வாங்கி" என்று கோவில்பட்டி சரவணனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. சென்னை நகரப் போக்குவரத்து தாறுமாறாக என் முன் பாய்ந்து கொண்டிருக்க, நான் மிகத் தனியனாய் உணர்ந்தேன். நண்பர்களுக்கு எஸ் எம் எஸ்ஸில் செய்தி அனுப்பினேன். மிகத் தனியனாய் உணருகிறேன் என்று ஜெயமோகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். "நானும் அப்படி உணர்கிறேன். எல்லா எழுத்தாளர்களைப் போல என்னிடமும் அவருக்கான கனவுப் பாத்திரங்கள் இருந்தன" என பதில் அனுப்பினார்.

திருவனந்தபுறத்திற்கு போகலாம் என புறப்பாட்டால் அன்று மாலையே அனேகமாக அடக்கம் இருக்கும் என்றார் இயக்குனர் மதுபால். மதுரைத் தோழர் பிரபாகரன் அவர் எண்ணில் கூப்பிட்டுப் பாருங்கள் என்றார். அவர் இல்லாத அவர் எண்ணை அழைப்பது எத்தனைத் துயரம். யாரோ எடுத்து அன்று மாலையே என உறுதிப் படுத்தினார்கள்.

அறையிலும் இருக்க முடியாமல் வெளியிலும் திரிய முடியாமலும் நகரத்தில் அலைந்தேன். அவருடைய போனின் ரிங் டோன் பாடல் வரி இப்படி இருக்கும்,

"சந்த்ர கலபம் சாத்தி உறங்கும் தீரம்,

இந்த்ர தனுசின் தூவல் பொழியும் தீரம்,

ஈ மனோகர தீரத்து தருமோ இனி ஒரு ஜன்மம் கூடி,

எனக்கினி ஒரு ஜன்மமும் கூடி"

செங்கோல் படத்தில் மதுரம் ஜீவாமிர்த பிந்து என்ற பாடலில் "ஏகாந்த யாம வீதியிலே" என்ற வரியின் பொழுது கிராமத்து தெருவில் தள்ளாடியபடி நடந்து போவார் திலகன்.

நானும் அந்த இரவில் ஆதித்யா பாரில் இருந்து வெளியேறி  12 மணிக்கு நாய்கள் குரைக்க தள்ளாடியபடியே நடந்துகொண்டிருந்தேன்.. யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல் இருந்தது. ப்ரியமானவர்களை தொலைபேசியில் அழைத்தேன்.லிபி, இசை, பிரசாத், மாயா.. என. மற்றவர்கள் இரண்டாம் ஜாமத்தில் இருக்க,  லிபி மட்டுமே எடுத்தார்.அவரது சொற்களும் தூக்கத்தில் மிதந்தன. “ தூங்குங்குள் லிபி ..” என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்துக் கொண்டேன்.

              இன்னேரம் திருவனந்தபுரம், தைக்காடு இடுகாட்டில் சாம்பலாகி இருப்பார் என் ஆதர்ஷ நடிகன். சாம்பலில் இருந்து பிரித்தெடுக்க முடியுமோ அக்குரலை..அந்த மகத்தான அபிநயத்தை

                                  "திலகன் அரங்கு ஒழிஞ்சு".

Comments

"சத்ரியன்" படத்தை மறக்க முடியுமா...?
திலகன். பெயருக்கேற்ற மிகச்சிறந்த நடிகர்.இனி அம்மனிதரில்லை என்பது இருப்புகொள்ளாத பதற்றனிலை தொற்றி
கொள்ளதில்லை.

காலம் காத்துக்கொள்ளவேண்டிய கலைஞர்...
மிகமிகத் தாமதமாக இன்றுதான் கட்டுரையை வாசித்தேன். கண்களில் நீர்கோர்த்துக்கொண்டது. வாழ்வில் எதெற்காகவும் யாரோடும் சமரசம் செய்துகொள்ளாத திலகன் அரங்கொழிஞ்சென்னு கேட்டப்போழ் பொட்டிக்கரஞ்சு அழுவதற்கு ஆளில்லாமல் தவித்திருந்தேன். உங்கள் எழுத்து பல கதைகளைக் கிளறுகிறது. திலகன் மறக்கமுடியாத ஆளுமை.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம