Skip to main content

மூதேவி அருளியவை

                                    



    மூதேவியால் அருளப்பட்ட எல்லா சொற்களுக்கும்
    சரஸ்வதியின் பூரண நல்லாசியுண்டு.

                                              இசை  : 0:00

                உண்மையில் எனக்கு முன்னுரையில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை.என் கவிதையை திறந்து கொள்ள திறவுகோல் ஒன்றை வாசகர்களுக்கு வழங்கலாம்.ஆனால் அது வலிய ராட்சதர்கள் காவல் புரியும் அதீத மர்மங்களால் மூடிய குகையல்ல. எனவே அது அவசியமற்றது.இக்கவிதைகள் எழுதப்பட்ட சூழலைப் பற்றிப் பேசலாம். கவிதைகளையும் எழுதி விட்டு பிறகு அதைப் பற்றியும் எழுதுவது அலுப்பாக இருக்கிறது.இக்கட்டுரையின் தலைப்பொன்றே போதும் என்று தோன்றுகிறது.அது கூட கொஞ்சம் அதிகமாகத் தான் பேசி விட்டது என்று தோன்றுகிறது. ”கவிதை என்பது “ என்று துவங்கி எதாவது சொல்லலாம். உங்களுக்கு போர் அடிக்கும். நீங்கள் தான் எத்தனை ”கவிதை என்பது” வை கேட்டு விட்டீர்கள்.எத்தனை எத்தனையோ பேர் என்னென்னவோ சொன்ன பிறகும் இன்னும் சொல்ல ஏதேனும் மிச்சமிருப்பது தான் கவிதையின் அழகா?

          தாடி மண்டிய லும்பனாகவோ, மீசை வழித்த சீலனாகவோ இல்லாமல் இருப்பது எவ்வளவு தவறு என்று ஒரு முன்னுரை எழுதும் போது தான் உரைக்கிறது.ஒரு அரைவேக்காட்டிற்கு சொல்ல அரைகுரையாகத் தான் ஏதோ இருக்கிறது. எனவே நீங்களும் அரைகுரையாக டி.வி பார்த்துக் கொண்டோ , குழந்தைகளுக்கு வீட்டு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டோ இதைப் படிக்கலாம்.

                            நான் பூக்கோவையும் சாத்தரையும் படித்ததில்லை.
எனவே எனக்கு அவ்வளவு அறிவில்லை.அறிவில்லாததால் ஒரே குழப்பமாக இருக்கிறது. என் திருக்குறள் புத்தகத்தில் பிறர்மனை நோக்கா பேராண்மையை கோரும் குறளிற்கு அடுத்து சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என்கிற குறளை எவனோ ஒருவன் திருட்டுத் தனமாக சொருகி வைத்திருக்கிறான். நித்யானந்தரின் வீடியோ காட்சிகள் பொய் என்றார்கள். உண்மை என்றார்கள். பொய் என்றார்கள். உண்மை என்றார்கள். நான் இரண்டையும் மாறி மாறி உன்னிப்பாக கவனித்து வந்தேன்.இப்போது ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.என்றாலும் ரஞ்சிதா எனக்கு
பிடித்த நடிகை. இந்த வகையில் நானும் சுவாமியும் ஒரே அலைவரிசையில் இருப்பது மகிழ்ச்சியே. இதற்கு மேல் இதைப் பேசுவது அநாகரீகம். இவ்வளவு பேசியது அநாகரீகமில்லையா? என்கிற எதிர்க்குரலை சவுக்குக் கட்டையால்ஓங்கி அடிக்கிறேன்.


                  இப்படி எல்லாம் குழப்பமாகத் தான் இருக்கிறது.
இருப்பதிலேயே பெரிய குழப்பம் கவிதை எழுதுவது தான். ”உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம் “ என்கிற கண்ணதாசனின் வைர வரிகளுக்கு முன்னால் முத்துகுமார், செங்கொடி என்கிற இரண்டு கருகிய உணர்ச்சிகள் கிடத்தப்பட்டிருக்கின்றன. கவி.. மகாகவி.. கவியரசு.. கவிப்பேரரசு . மனம்.. கவிமனம்..உச்சபட்ச கவிமனம்... கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது. ஈழத்தில் போர் முற்றிய நிலையில் சிவராசண்ணன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு செத்துப் போனார். சிவராசண்ணன் எவ்வளவு நல்லவர் என்பது எங்கள் ஊருக்கே தெரியும்.தன் அரைவை மிஸினில் மிளகாய் அரைக்க வரும் பெண்கள் செய்யும் பித்தலாட்டங்களை தெரியாதவர் போல் இருந்துவிட்டு அவர்கள் போன பிறகு “ நம்மள ஏமாத்தறாங்களாமா..”என்று சிரித்துக் கொண்டே சொல்பவர்.அவர் தலைக்குப் பின்னால் பிரபாகரன் தான் சிரித்துக் கொண்டிருப்பார். அவ்வளவு நல்லவர்க்கு நல்லவராக இருந்தவர் உண்மையில் நல்லவரில்லை என்கிறார்கள்...எல்லாம் குழப்பமாகத்தான் இருக்கிறது.

           அன்னா நல்லவர் தான் என்கிறார் ஜெயமோகன். ஆனால் காந்தி படத்துக்கு கீழே 27 டாக்டர்களுடன் அவர் வீற்றிருப்பது என்னவோ ஒட்டமாட்டேன் என்கிறது. ஆனால் மேதாபட்கர் வேறு உடன் இருக்கிறார்.
மேதாபட்கரோடு இருப்பவர் நல்லவராகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அருந்த்தி அவர் நல்லவர் இல்லை என்கிறார். குழப்பமாகத் தான் இருக்கிறது.குழப்பமே இல்லாமல் வாய்விட்டு அழுது விடும் ஒரு சூழல் வந்தால் கவனம்.. அம்மணமாக இழுத்து வரப் பட்டு பின்மண்டையில் சுடப்படுபவன் தமிழனே இல்லை.. சுடுபவன் சிங்களனுமல்ல.. என்கிறான் ஒருவன்.  சரி விடு.. எவனோ ஒரு மனிதன் என்றால் , முட்டாள்.. சுடப்படுபவன் ஒரு மனிதனேயல்ல.. சுடுபனும் ஒரு மனிதனல்ல என்கிறான் அவன்.  இப்படி மூளைக்குண்டர்களுக்கு மத்தியில் நாம் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.


            காலையிலும் மாலையிலும் பேப்பர் படிக்கிறேன். தமிழில் தான் படிக்கிறேன். நான் எம்.ஏ தமிழ்.. ஆனாலும் ஒன்றும் புரியமாட்டேன் என்கிறது. ஒழுக்கம் என்கிறார்கள்? கருணை என்கிறார்கள்? அறம் என்கிறார்கள்? கட்டுடைத்தல் என்கிறார்கள்? அறத்தின் அறமின்மை என்கிறார்கள்?நீதி என்கிறார்கள்? தர்மம் என்கிறார்கள்? மகாதர்மம் என்றும் சொல்கிறார்கள்? யாருக்கும் பேட்டரி செல் வாங்கித் தராதே என்று பயமுறுத்துகிறான் அய்யப்பன். புரட்சி என்கிறார்கள்? ட்விட்டர் புரட்சி என்கிறார்கள்? ரொம்ப நேரம் ஆடாமல் அசையாமல் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தால் மூலம் வந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள் ? ஆன்மிகம் என்கிறார்கள்? மதமற்ற ஆன்மீகம் என்கிறார்கள்? அபத்தம் என்கிறார்கள் ? பேரபத்தம் என்கிறார்கள் ? நல்லதொரு குடும்பம் என்கிறார்கள்? குடும்பத்தை உடைக்க வேண்டும் என்கிறார்கள் ? அன்பு என்கிறார்கள்? காதல் என்கிறார்கள் ? இந்த ”ஓருடல் ஈருயிரை” சுடுவதென்றால் எத்தனை முறை சுட வேண்டும், குத்துவதென்றால் எத்தனை முறை குத்த வேண்டும் ?


      எம்.கே.டி “ சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமண்ய சுவாமி உனை மறந்தார்” என்று பாடியிருக்கலாம் அல்லது ” மூன்று உலகிலும் மன்மதலீலையை வென்றார் உண்டோ “ என்று பாடியிருக்கலாம். ஏன் எம்.கே.டி இப்படி இரண்டையும் அவ்வளவு உண்மையாக பாடித் தொலைத்தாய் ? இப்போது சிக்கிக் கொண்டு சீக்கியடிப்பது யார் ?

 சரி.... என் கவிதைகளுக்கு வருவோம்.. “ அப்படியென்றால் இத்தனை நேரம்   நீ பேசியதற்கும் உன் கவிதைகளுக்கும் சம்பந்தமில்லையா”?

   அந்த சவுக்குக் கட்டையை எடுங்கள்...

  •                                                                            


           முகமறியா காலத்தில் இருந்து என் கவிதைகளின் மேல் ப்ரியம் கொண்டிருக்கும் கரிகாலன், கெட்டவார்தைகளில் திட்டி சில கவிதைகளை தொகுப்பில் சேர்க்க வைத்த நண்பன் திருச்செந்தாழை, பள்ளிப் பருவத்தில் இருந்து உடன் இருக்கும் நண்பர்கள் தங்கவேல், கார்த்திகேயன், தனிமையை பொறுத்துக் கொள்ளும் மனைவி அமுதா ஆகியோரை இத்தொகுப்பு உருக்கொள்ளும் தருணத்தில் நினைவில் கொள்கிறேன்.



   ”உறுமீன்களற்ற நதி” யில் இடம்பெற்ற ஒரு கவிதையின் நிமித்தம் சரவணகணேஸ், ஜான் சுந்தர் என்கிற இரு வேறு நண்பர்கள் இரு வேறு காலங்களில் இரண்டு ஃபிளம் கேக்குகளைப் பரிசளித்து என்னை சந்தோசத்திற்குள் தூக்கி வீசினார்கள். சிவாஜிகணேசனுக்கும் அப்படி இருவர் கிடைக்காமலா போய் விடுவார்கள்? அவருக்குத் தான் எத்தனை லடசம் இரசிகர்கள்?



இசை

இருகூர்

03/09/2011  ( சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பில் உள்ள முன்னுரை)

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம