Skip to main content

கணேசகுமாரன் கவிதை

 சாகும்வரை சிரிப்பவன்




அவன் ஆரம்பகால நாடகங்களில்
கதாநாயகனாக நடித்தவன்தான்
கைதட்டி ரசித்த மக்கள்
உச்சந்தலையில் முத்தமிட்டு வாழ்த்தினார்கள்
கலைஞன் வீடு முழுவதும் விருதுகள் குவித்தான்

மேலும் சில நாடகங்களில் வில்லனாக அவனே
விரும்பி நடித்தான்
உணர்ச்சிவசப்பட்ட மக்கள் சபித்தபடி
விருதுகளையும் பரிசுகளையும் அவன் கையில் திணித்தனர்




ஒரு நாளில் நிர்பந்திக்கப்பட்டான்
கோமாளியாக நடிக்கும்படி
சிரிப்பாய் சிரித்தது வாழ்க்கை
அவ்வளவு பெரிதாக
அவ்வளவு வலியாக
அவ்வளவு கொடூரமாக
எல்லோர் துயரங்களையும் விரட்டியபடி
சிரித்துக் கொண்டிருந்தது மேலும் மேலும்


அவனாலும் ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை
சிரித்து சிரித்துக் கண்ணீர் பெருகி ஆறாக ஓடி
மேடையும் மக்களும் மிதக்கத் தொடங்கியபின்னும்
நிறுத்துவதாயில்லை அவன்
அத்தனை அச்சாகப் பொருந்திவிட்டது கோமாளித் தொப்பி
பழைய கிரீடங்களைத் துறந்து ஆட்டம் தொடர்கிறது


இனி மேடையிலிருந்து வீழும் வரை
கோமாளியின் தர்பார்தான்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...