Skip to main content

இசை கவிதைகள்

 




1


மேலோட்டமான உண்மையிலிருந்து இறுதியற்ற உண்மைக்கு


ஒரு உடையிலிருந்து

இன்னொரு உடைக்கு மாறுவது போல் அல்ல

ட்ரவுசருக்கு மாறுவது


ட்ரவுசருக்கு மாறுகையில்

நான் தயாராகிறேன்

எதற்கென்றால்

எல்லாவற்றிற்கும்


உறக்கத்திற்கு

போர்க்களத்திற்கு

எல்லாவற்றிற்கும்


ட்ரவுசர் அணிந்தவுடன்

சிறுவனாகி விடுகிறோம் என்று சொல்பவர்கள்

மேலோட்டமான நம்பிக்கைகளில்

வாழ்ந்து வருபவர்கள்

அவர்களுக்கு லேசான உண்மைகள் போதுமானவை


சுற்றுலா செல்கையில்

ட்ரவுசர் அணிகிறவர்கள் உண்டு

ட்ரவுசர் ஒரு சுற்றுலா

என்பாரும் உண்டு


ட்ரவுசரில் இருக்கையில்

நான் என் காதலி


அதை அளக்க முடியாது

என்பது போலவே

சுருக்கவும் முடியாது


ட்ரவுசரை காற்றோட்டம் என்பது

மூடர் தம் சுருக்கம்



2


அங்கு



கொட்டு கொட்டென்று

கொட்டித் தீர்த்த இசை

சட்டென

நின்று விட்டது



நிசப்தமும் 

முழக்கத்திற்குப் பின்னான நிசப்தமும்

ஒன்றல்ல


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிட்ட பிறகு

உருவாகும் தாளமே!


நீ

அங்கென்னைக் கூட்டிச் செல்!




3


மிழ் மலர்கள்


அது ஒரு சின்னத் தோட்டம்


அதை நேற்றுதான் உருவாக்கியிருந்தார்கள்.


இன்று

புதிதாக

அதற்கொரு பெயர் சூட்டியிருக்கிறார்கள்


“அருமலர் எழிலகம்”


அதில்

இனிமேல்தான் பூக்கள் வர இருக்கின்றன.


அதற்குள்

பூத்துக் குலுங்கிவிட்டன.



4


தேங்கெண்ணெய்


“அம்மா…” என்று கூவியபடி

முதல் முட்டிக் காயத்துடன்

தெருவிலிருந்து

வீட்டுக்குள் ஓடி வந்த போது

மாரோடணைத்துக் கொண்டு

கொஞ்சம் தேங்கெண்ணெய்

பூசி விட்டாள்.


உதடு வெடிப்புக்கும், வயித்துச் சூட்டுக்கும்

அதே தேங்கெண்ணெய்யேதான்


படுக்கையில் சிறுநீர் கழித்ததற்கு

ஞாபக மறதிக்கு

முகப்பருவுக்கும்

அதேதான்


எது குறைந்தாலும்

தேங்கெண்ணெயால்

அவள் அதைக் கூட்டி விடுவாள்


மகன்

வீதியில் வாந்தி மீது விழுந்து கிடந்தமைக்கு

மண்டைச்சூடுதான் காரணம் என்பாள்


உள்ளங்கையில் தேங்கி நிற்கும்

நான்கு சொட்டால்

உலகத்துக் கோணல்களையெல்லாம்

வழித்தெடுத்து விடுவாள்


“ஒரு வாரத்துல சுக்கா காஞ்சிடும்….”என்று

ஒரு கட்டி மீது ஊற்றுகிறாள்

அவளது அருமருந்தை


கட்டி சொன்னது…


“நான் கேன்சர்கட்டி வந்திருக்கிறேன், உன் தேங்கெண்ணெயைக் கொல்வதற்காக…”


5


சிறிதே!


அவ்வளவு பெரிய வானம் என்பது

அதைக் காணும்

சின்னஞ்சிறிய

நீ தான்.




ஓவியம் : சேது வேலுமணி

Comments

Thendral said…
கவிஞனும் இறைவனும் ஒன்றே ....கதையில் எதிர்பார்க்காத திருப்பங்கள்!!!

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

பேய் பங்களா

வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல்,  மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை  வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா  இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில்  ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?