Skip to main content

இசை கவிதைகள் - அகழ்





ல்லதங்கா



கழிவறைக் கதவை
இழுத்துச் சாத்திக் கொள்வது
வசதியானது


தண்ணீர் குழாயை
திறந்து விடுவது
மேலும்
வசதியானது


ஆனால்
வெட்ட வெளியின் மத்தியில்
அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி


பெண்களின் கண்ணீர் என்பது
ஒரு தனியூத்து


இங்கு நான் காண்பது
அதன் சில துளிகள்


ஒருத்தி அழத்துவங்கியவுடன்
அபலை ஆகிவிடுகிறாள்


அங்கு அப்போதே
முளைத்து விடுகிறது ஒரு கிணறு


“ தொப்” சத்தமே
அப்பாலே போ!


காதலரே… காய்பவரே…


முறுக்கிப் பிழியப்பட்டு
பலகாரக் கடையில் அடுக்கப்பட்டுள்ள
ஜிலேபித் துண்டு போல் ஆகிவிட்டேன் திடீரென்று


யாரும் எடுத்து
விண்டு விழுங்கலாம்


எந்தத் தொண்டையிலும்
நழுவி விழுவேன்
குளு குளுவென


ம்…
சீக்கிரம்…


இந்தச் சலுகை
எத்தனை மணித்துளிகளுக்கென்று
எனக்கே தெரியாது


ஆகட்டும்..


சீக்கிரம்..

சீக்கிரம்…


ணி செய்து கிடத்தல்


துப்புரவுப் பணியாளர்கள்
பணி முடித்து
ஓய்வில் இருக்கிறார்கள்


ஒருவர்
கடைவாய் ஒழுக
வெற்றிலை
மென்று கொண்டிருக்கிறார்


ஒருவர்
போனில்
சத்தமாகச் சிரித்த படியிருக்கிறார்


அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக
ஒருவரையொருவர்
துரத்தி விளையாடுகிறார்கள்

இளம் பெண்கள்


இதை ஓய்வென்று நம்பவில்லை நான்


இப்போது
உலகின் ஏதோ ஒரு மூலை
துப்புரவாகிக் கொண்டிருக்கிறது


எங்கென்றுதான்
எனக்குச் சொல்லத் தெரியவில்லை.



Comments

வண்ணைசிவா said…
அருமையான கவிதைகள்.

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.