புதன்கிழமைதோறும் என் ஊருக்கு தடுப்பூசி போடவரும் நர்ஸக்கா அம்மாவுக்குச் சிநேகிதம். நாள்முழுதும் உபயோகித்த ஊசிகளின் முனைகளை ஓய்ந்த மாலையில் என் வீட்டுவாசலில் அமர்ந்து வெட்டுவாள். அந்த எலிப்பொறி போன்றதொரு இயந்திரத்தை கண்கொட்டாது பார்த்து நிற்பேன். அவள் ஒவ்வொரு முறை நறுக்கும்போதும் அதிலிருந்து மயிலொன்று அகவும். புதன்கிழமைதோறும் வீட்டுமுற்றத்தில் மயில்கூட்டம். பலநாட்கள் இரகசியம் காத்த மயில்கதையை ஒரு நாள் சொல்லியேவிட்டேன் அவளிடம். அதைக்கேட்டு அழகாக சிரித்தபடியே என் தலைசிலுப்பிச் சொன்னாள்... "ஏதோ ஒரு சின்னக் கோளாறு.. எண்ணெய்விட்டால் சரியாயிடும்..." அக்கா... அக்கா எண்ணெய்விட்டால் மயில் பறந்து போய்விடாதா? |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments