புதன்கிழமைதோறும் என் ஊருக்கு தடுப்பூசி போடவரும் நர்ஸக்கா அம்மாவுக்குச் சிநேகிதம். நாள்முழுதும் உபயோகித்த ஊசிகளின் முனைகளை ஓய்ந்த மாலையில் என் வீட்டுவாசலில் அமர்ந்து வெட்டுவாள். அந்த எலிப்பொறி போன்றதொரு இயந்திரத்தை கண்கொட்டாது பார்த்து நிற்பேன். அவள் ஒவ்வொரு முறை நறுக்கும்போதும் அதிலிருந்து மயிலொன்று அகவும். புதன்கிழமைதோறும் வீட்டுமுற்றத்தில் மயில்கூட்டம். பலநாட்கள் இரகசியம் காத்த மயில்கதையை ஒரு நாள் சொல்லியேவிட்டேன் அவளிடம். அதைக்கேட்டு அழகாக சிரித்தபடியே என் தலைசிலுப்பிச் சொன்னாள்... "ஏதோ ஒரு சின்னக் கோளாறு.. எண்ணெய்விட்டால் சரியாயிடும்..." அக்கா... அக்கா எண்ணெய்விட்டால் மயில் பறந்து போய்விடாதா? |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments