Skip to main content

பழுதான ஒன்றிலிருந்து பறந்துவரும் மயில்




புதன்கிழமைதோறும் 
என் ஊருக்கு தடுப்பூசி போடவரும் நர்ஸக்கா
அம்மாவுக்குச் சிநேகிதம்.
நாள்முழுதும் உபயோகித்த ஊசிகளின் முனைகளை
ஓய்ந்த மாலையில்
என் வீட்டுவாசலில் அமர்ந்து வெட்டுவாள்.
அந்த எலிப்பொறி போன்றதொரு இயந்திரத்தை
கண்கொட்டாது பார்த்து நிற்பேன்.
அவள் ஒவ்வொரு முறை நறுக்கும்போதும்
அதிலிருந்து
மயிலொன்று அகவும்.
புதன்கிழமைதோறும்
வீட்டுமுற்றத்தில்
மயில்கூட்டம்.
பலநாட்கள் இரகசியம் காத்த மயில்கதையை 
ஒரு நாள் சொல்லியேவிட்டேன் அவளிடம்.
அதைக்கேட்டு அழகாக சிரித்தபடியே
என் தலைசிலுப்பிச் சொன்னாள்...
"ஏதோ ஒரு சின்னக் கோளாறு.. எண்ணெய்விட்டால் சரியாயிடும்..."
அக்கா... அக்கா
எண்ணெய்விட்டால் மயில் பறந்து போய்விடாதா?

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...