Skip to main content

Posts

Showing posts from May, 2012

இரண்டு கவிதைகள்

1.நம் பூனைக்குட்டியைப் பார்த்தேன் கோடாக இளைத்து மேலெல்லாம் புண்ணாக முடைவீசும் குப்பைமேட்டில் எதையோ மோந்துபார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியை பார்த்தேன் அதற்கு என் உதட்டிற்கும் உன் கழுத்திற்குமான முனகலில் பிறந்ததின் அதே சாயல் என் பழைய பூனைக்குட்டியே.. பழைய ப்புச்சுக்குட்டியே.. பழைய வெல்லக்கட்டியே.. பழைய மொசக்குட்டியே.. 2. ரிசல்ட் பயாப்ஸி டெஸ்டுக்கான முடிவுகள் வந்துவிட்டன மருத்துவர் மூக்கு கண்ணாடியை கழற்றிவிட்டு கருணையின் கண்களைக் காட்டினார் தோளைத் தட்டித் தந்து தைரியமாக இருக்கச்சொன்னார் நான் காதியில் ஒரு நீலக்கலர் சால்வை வாங்கிப் போத்திக்கொண்டேன்.

உனக்கு நீயே தான்

உனக்கு நீயே தான் சொக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் மிஸ்டுகாலில் விளையாடிக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் வாழ்த்து தெரிவித்துக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் மறந்த பொருட்களை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும் உனக்கு நீயே தான் பின்னால் வந்து கட்டிக் கொள்ள வேண்டும் உனக்கு நீயே தான் நிலா காட்டிக் கொள்ள வேண்டும் நீயே தான் உன் காதில் கிசுகிசுத்துக் கொள்ளவேண்டும் நாலாவது ரெளண்டில் உனக்கு நீயே தான் கண்டித்துக் கொள்ளவேண்டும் உன் கண்ணில் நீர் வழிந்து உன் நெஞ்சிலேயே தான் உதிரமும் கொட்டவேண்டும் உன் தலையை அரிந்து உன் மடியில் போட்டுக் கொண்டு நீயே தான் கோதிவிட வேண்டும்.

வாளோடும் வயலினோடும் அலைபவன்....

லிபி ஆரண்யாவின் “ தப்புகிறவன் குறித்த பாடல்’ --- - சாம்ராஜ்- தமிழில் அரசியல் கவிதை எழுதுபவர்கள் மிக குறைவு. இங்கு இயங்கும் “கவிதையின் அரசியல்” அரசியல் கவிதைகளுக்கு எதிரானது. இடதுசாரிகளிடமே எப்பொழுதும் ”அரசியல் கவிதை” எழுதும் பேதமைமிக்க பொறுப்பு ஓப்படைக்கபடும். அவர்களும் கோஷங்களின் பிரேத குழியில் வார்தைகளின் சவங்களை அள்ளி அள்ளி புதைப்பார்கள். பிறகு பிறகென்ன சவங்களில் முளைத்த சொற்கள் மயானமெங்கும் மரத்தில் தொங்கும் விக்கிரமாதித்யன் வேதாளமாய் மிக அரிதாக அந்த காட்டில் மலர் பூப்பதுண்டு. என்பதுகளின் நடுபகுதியில் நக்சல்பாரி இயக்கங்களின் வெகுசன பத்திரிக்கைகளில் அப்படி மலர்கள் பூத்தன. உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் கலைநேச பிரபு, புதிய ஜிவா, பாரதிபுத்திரன், நிஷா என. இவர்களில் மிக முக்கியமானவர் பாரதிபுத்திரன். ”மாரிக்கால இரவுகள்” என்று ஓரு தொகுப்பு மாத்திரமே அவருக்குண்டு. அதுவும் 95 பிறகு மறுபதிப்பு வராத தொகுப்பு. மிக அரிதான குரல் பாரதி புத்திரனுடையது. கோஷங்கள் இல்லா