Skip to main content

மைக்ரோஸ்கோப்பில் கண்டறியப்படு்ம் நுண்ணுயுரி ( தூரன் குணாவின் ‘ கடல்நினைவு “ தொகுப்பை முன்வைத்து )






நான் கெட்ட வார்த்தைகள் அர்த்தமற்று புழங்கும் நிலத்திலிருந்து வருகிறேன். அங்கே சும்மாணாச்சிக்கு கோபப்படுவது , நிஜமாகவே சினம் கொள்வது , மண்ணள்ளி தூற்றுவது என் எல்லாவற்றிற்கும் கெட்ட வார்தைகள் தான். அங்கே போலியாக நடிப்பது, காதலாகி கசிவது, நெஞ்சைப் பிளந்து காட்டுவது என எல்லாவற்றிற்கும் கெட்டவார்தைகள் தான். “ தாயோழி ஒரு டீ சொல்லு “ என்பது என் நிலத்தின் ப்ரியம். பழனி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த அரங்கின் மையத்திற்கு வந்த ஒரு முதியவர் கண்களில் தாரைவிட்ட படியே “ தாயோழி மகனே ... என்னமா நடிக்கிற “ என வெடித்து சிதறியது என் நிலத்தின் ஹைலைட். சமீபத்தில் பா. வெங்கடேசனின் ‘ ராஜன் மகள் “ கதையை வாசித்த போது மனம் ஓயாமல் கெட்ட வார்த்தை சொல்லிக் கொண்டே இருந்தது. அசாத்தியமான சொற்கட்டும், ஒரு தேர்ந்த இசைஞனின் லய ஒழுங்கும் கூடி எழுப்பப் பட்டிருக்கிற அந்தக் கதையை சொல் சொல்லாக வாசித்தேன். ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு கெட்டவார்த்தை. தற்போது தூரன் குணாவின் ‘ கடல் நினைவு’ தொகுப்பின் பின்பாதி கவிதைகளின் சிலவரிகள் கெட்ட வார்த்தை சொல்ல வைத்தன.இது முதல் வாசிப்பில் தான். அடுத்தடுத்த வாசிப்ப்புகளில் முன்பாதி கவிதைகளிலும் கெட்டவார்தைக்கு தப்பிய சில வரிகள் ஒளிந்திருப்பதை காணமுடிந்தது..

நான் ஒரு போதும் குணாவைப் போல் கவிதை எழுத விரும்பமாட்டேன். ( கொக்கரக்கோ, ஊழின்பிள்ளை போன்ற கவிதைகள் விதிவிலக்குகள் ). ஆனால் ஒரு கவிதை மாணவனாக நான் எல்லாவித கவிதை போக்குகளுக்கும் மனம் கொடுக்கவே விரும்புகிறேன்.தன் கவிதையைப் போல் அல்லாதவற்றை கவிதையல்ல என்று நிராகரிப்பது ஆக்கப்பூர்வமானதல்ல.வெவ்வேறு வண்ணங்களில், வெவ்வேறு வகைகளில் கவிதைகளைப் பார்க்க மகிழ்ச்சியாகவே இருக்கிறது..

குணாவின் மொழிநடை உணர்வெழுச்சியால் பீடிக்கப்பட்ட கட்டற்ற பாய்சலல்ல. ஆனாலும் பைத்தியத்தினுடையது தான். ஒரு புத்திசாலி பைத்தியத்துடையது என்று சொல்லலாம். இக்கவிதைகளைப் படிக்கும் போது நீங்கள் எங்காவது வாய்விட்டு சிரித்தாலோ, துளியூண்டு அழுதாலோ அது உங்கள் நற்பேறு. குணாவின் மொழிநடை இரும்பாலான சுழல்படிக்கட்டில் ஏறுவது போல் ஒடுக்கமானதும் , அசெளகர்யமானதும் தான். ஆனால் அதில் நாம் ஏறிவிட்டால் வானம் நம் பக்கத்தில் வந்துவிடுகிறது.அங்கு எப்போதும் ராத்திரி. நித்தமும் பெளர்ணமி. தொகுப்பின் அநேக கவிதைகள் நிலவில் ஊறி மிதக்கின்றன. குணா இரவென்று எழுதும் போதே நிலவும் கூடவே உதித்து விடுகிறது. ”பொங்கி நகரும் பூரண சோபையின் முன் ஏதுமற்று கிடக்கும் ஒரு மனம் “ என்னை வெகுவாக கவர்ந்தது. நிலவை பார்க்கச் சொல்லி சில நேரங்களில் அவன் என்னை தொலைபேசியில் அழைத்திருக்கிறான். அவன் அன்று சொன்ன நிலாக்களை நான் வெகு தாமதமாக இந்த தொகுப்பில் பார்க்கிறேன்.

சில கவிதைகளின் தனிவரிகள் முழுக்கவிதையும் சேர்ந்தளிக்கும் கவிதாஅனுபத்தை விட அசாத்தியமான அனுபவங்களை சாத்தியமாக்குகின்றன. ”தனிமைப்பாலை “ என்றொரு கவிதை..

‘ அந்திமகால ஒட்டகங்கள்
மூப்பின் துர்வாசனையோடு
காட்சிப் பொருளாய் நடக்கும்
நகரத்தின் சிமெண்ட் தெருக்களில்
மங்கைகள் இறகுப் பந்து விளையாடுகிறார்கள் “

இந்த 5 வரியை முன்வைத்து குணாவின் கவிதைகளில் துளியூண்டும் அழுவதற்கு இடமில்லை என்கிற என் முந்தைய வரியை ஒரு வாசகன் நிராகரிப்பானானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.இந்த ஆயுளின் அநேக இரவுகளை நனைக்க இந்த 5 வரி போதுமானது தான்.ஆனால் இந்த வரிகளுக்கு பின் குணா பிதற்றுவது ஏதும் இந்த அனுபவத்தை தாண்டியதாகவோ , தக்கவைத்துக் கொள்வதாகவோ இல்லை. தன் புத்திசாலித்தனத்தின் பாறாங்கல்லை போட்டு அவ்வனுபவத்தை உருத்தெரியாமல் நசுக்கி விடப் பார்க்கிறார். நிறுத்தற் குறிகளற்ற 11 வரிகளாலான ஒரு அதிநீள வாக்கியம் , உறுத்தலான பின்னொட்டாகவே தோன்றுகிறது. இது போல் நிறுத்தற்குறியோ , முற்றுப்புள்ளியோ இல்லாமல் தான் எல்லா கவிதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.அபூர்வமாக சில கவிதைகளை இது அழுகாக்கியிருக்கிறது எனுப் போதும், ஒரு வாசகன் குணாவின் கவிதைகளில் சோர்வடைந்து விலகிச்செல்லும் புள்ளியும் இது தான் என்று தோன்றுகிறது.அர்ததப்பெருக்கத்திற்கு வாய்ப்பில்லை எனும் போது கவிதைக்குள் குறிகளை இடுவது பஞ்சமா பாதகமில்லை என்பது என் கருத்து. இனி வருவது அந்தக் கவிதையின் பின்னொட்டு..

‘ நீண்ட பால்கனிகளின்
கைப்பிடி சுவர்களெங்கும்
உறைந்துவிட்ட வெயிலின் மீது
மேகங்கள் விதைக்கும்
சிறுநிழற் தானியங்களை
பொறுக்கும்
தனிமையின் கண்கள் அறிந்துவிட்ட
ஒட்டக நினைவின்
பாலையில் அலையடிக்கும்
பெருங்குளத்தில்தான்
மீன்களே இல்லை.

இப்படி மூச்சுவிடாமல் பேச வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. இந்த அதிநீள வாக்கிய அமைப்பு அழகுபடுத்திய கவிதை என்று ” நடுமதியத்தில் “ (பக்;24) கவிதையை குறிப்பிடலாம். இதைப் போலவே பல தனிவரிகள் நெடுநாள் மனதில் தங்கிப்போகும் இயல்புடையன.

1. ‘ துயரார்ந்தவர்களே../ யாரும் இரவின் மீது/ பியர் பாட்டிலை வீச வேண்டாம்

2. ஓவியத்தில் நிலைபெற்றுவிட்ட/ வசந்தபருவத்தில்/ மலர்கள் உதிரப்போவதில்லை

3. கழிவறையில் குந்திக்கொண்டு/ நெஞ்சடைக்கும் ஒன்றை/ வெளியேற்ற முயல்கிறது

4.நமது ஏக்கம்/ ஒரு வாடாத/ அழகிய மலராக / இருக்கிறது.

5. எறும்பின் / இன்னொரு மடங்கு எடையில்/ அது வணங்கும் ஒரு கடவுள்

6. அள்ளி அணைக்க யாரேனும்/ இருக்கும் இடத்தின் பெயரெல்லாம்/ வீடென்று ஆகுக

7. பாதி உரிக்கபட்ட / வாழைப்பழத்தோலைப்போல்/ எல்லா உன்னதத்திலிருந்தும்/ மயக்கம் தொங்குகிறது.

8. பரஸ்பரம் ஆரத்தழுவி/ பிதற்றும்/ அர்த்தங்களற்ற மொழியில்/ பூக்கிறது/ கிளுகிளுப்பின் மலர்


போன்ற வரிகள் எனக்கானவை. உங்களுக்கு வேறு வரிகள் கிடைக்கலாம்.


நிலம் என்பது ஆகாயமும் சேர்ந்ததே என்னும் எளிய உண்மை இக்கவிதைகளைப் படிக்கையில் வலுவாக உறைக்கிறது. குணா தன் நிலத்தை ஒளியோடும், நிழலோடும், நிலவோடும் தான் சொல்கிறான். பொதுவான ஆகாயத்தையும், பொதுவான மேகங்களையும் தன்னுடைய நிலத்தினுடைய ஒரு கூறாக மாற்றிக் கொள்கிறான். நிலவின் தண்ணொளி ஓயாமல் குணாவின் நிலத்தில் விழந்தபடியே இருக்கிறது.

“ ஊரின் ஆகாசம்/ நீலம் பாரிக்கும் மதியங்களில்/ ஊரின் ஆகாசம்
செந்நிறமாகும் அந்தியில் .. என எழுதிப் போகிறான்.

எனவே ,


‘ கிணற்றுள் குளிக்க/ இறங்கிய மேகங்களுக்கு/ சுவர்ப் பூக்கள் தம்மை பரிசளிக்க”


என்றெழதும் போதும் அது ஒரு தட்டையான இயற்கை வர்ணனையாக அல்லாமல், தன் நிலத்தில் தோய்ந்த ஒரு மனத்தின் நினைவாகவே மாறிவிடுகிறது.


” திரு x ன் வேட்டை நாய்” என்றொரு கவிதை இருக்கிறது. எளிமையும். வசீகரமும் கொண்ட இக்கவிதையின் புதிய சொல்லல் முறையை நாம் சீக்கரத்திலேயே எழுதி எழுதி பழசாக்கி விட்டோம்.
ஒன்று புதிதாக வரவரவே அதை அவசர அவசரமாக பழசாக்கி விடுவதில் நாம் சமத்தர்கள்.

குணா போகிற போக்கில் சில பிரமாதமான வரிகளை உதிர்த்து விட்டு போகிறான். ஒரு பிரமாதமான வரியை கவிதையில் எங்கு வைப்பதென்று அவன் திட்டமிடுவதில்லை அல்லது தெரிவதில்லை என்றும் சொல்லலாம். ஒரு இசைக்குறிப்பு மெலிதாகத் துவங்கி, உருவாக மாறி உச்சம் பெறுவதைப்போல் அவன் எழுதுவதில்லை.சில கவிதைகள் பாதியிலேயே உச்சம் பெற்று விடுகின்றன. சில கவிதைகள் துவக்கத்திலேயே உச்சம் பெற்று விடுகின்றன.பின்பு அவை மெதுமெதுவாய் மங்கிமறைகின்றன. இப்படிப்பட்ட இசையும் உண்டல்லவா?


அபத்தத்தை கண்ணாற கண்டவர்கள் உத்தரத்தில் தூக்கிட்டு தொங்குகிறார்கள். புல்லட் ரயிலை நேருக்கு நேராக சந்திக்கிறார்கள். சுவாசிக்க கூட முடியாத பூச்சிக்கொல்லி மருந்தை கண்ணைத் திறந்துகொண்டு குடிக்கிறார்கள்.ஆனால் இத்தொகுப்பின் ஒரு கவிதையான “ அபத்தத்தின் இலைகள்
பொன்னிறமாக ஒளிர்கின்றன “ என்கிற கவிதை இதே அபத்தத்தை முன்னிருத்தி தற்கொலையில் இருந்து தப்பிக் கொள்கிறது.


” அபத்தத்தின் இலைகள்
மலைச்சரிவின் இருளிடையே
பொன்னிறமாக ஒளிர்கின்றன
அவை தற்கொலையை மறக்க வைக்கும்
ஒருவித வாசனையை
இரவின் திசைவழிகளில் வெளியேற்றுகின்றன
இப்படித்தான்
ஒவ்வொரு நாள் காலையிலும்
உயிரோடு கண்விழிக்கிறேன் நான் “


இப்படிப் பட்ட நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் கவிதைகள் பல இத்தொகுப்பில்
உள்ளன. ஆனால் அவை வாசக பங்களிப்பை அதிகமும் கோருபவை. திரும்ப திரும்ப வாசித்துத் தான் நாம் இக்கவிதைகளை சென்று தொட முடிகிறது. எவ்வளவு முறை வாசித்தாலும் முறுக்கி கொண்டு நிற்கும் கவிதைகளென்று எனக்கு சில உள்ளன. உங்கள் வாசிப்பனுபவத்திற்கு, உங்கள் வாழ்பனுபவத்திற்கு அவை எளிதில் திறந்து கொள்ள கூடியதாக கூட இருக்கலாம். “ கொக்கரக்கோ”, ஊழின்பிள்ளை, எறும்பின் பசி, அங்கே அணைகிறது ரத்தம், தட்டையான உலகத்தில் அழகு, நிழலின் காலடியோசை போன்ற கவிதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும்.


”கூகிள் எர்த்” என்றொரு கவிதை, பெரு நகரத்தில் பணிபுரியும் ஒருவன் தன் கணினியில் கூகுள் எர்த்தை இயக்கி தன் கிராமத்தை பார்ப்பதாகச் சொல்லும் இக்கவிதை, இப்படி துவங்குகிறது...

‘ குதிரையில் பயணித்தால்/ ஒரு இரவு/ ஒரு பகல்/ நீளும்/ அங்கே / என் உயிர்க் கூடு இருக்கிறது.”

குதிரைகள் இங்கும் இருக்கின்றன. தழிழ் புராணங்கள், சாகச கதைகள் எல்லாவற்றிலும் குதிரைகள் ஓயாமல் கனைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.என் வீட்டிற்கு 5 வீடு தள்ளி கூட ஒரு செம்பட்டைக் குதிரை நிற்கிறது. ஆனால் எனக்கென்னவோ குணாவின் குதிரை “ அயல் நாட்டு நல்லறிஞர் சாஸ்த்திரத்திலி்ருந்து ஓடி வந்தததாகவே தோன்றுகிறது.” குணாவை போர்ஹேவும், பாமுக்கும் இரட்சிப்பார்களா என்றெனக்குத் தெரியாது.ஆனால், அறுப்பு முடிந்த வயலில் குறும்பாடு மெய்த்தவாறே கழுத்துயரக் கவையில் முகம் தாங்கியிருக்கிற கிழவரும், கூச்சலிட்டு ஓடிவந்து ரயிலுக்கு கைகாட்டும் சீருடை களைந்திராத சிறுவனும் ஆசீர்வதிக்கவே செய்கிறார்கள். ( பக்; 50)

இவ்வளவு நுட்பமான கவிதைகளை எழுதியிருக்கும் குணா, கசியும் என்பதை க
சி
யு
ம்என்றெழுதினால்

அது கசிந்துவிடும் என்றும், தொங்குவது என்பதை தொ
ங்
கு

து என்றெழுதினால் அது தொங்கிவிடும் என்றும் நம்பியிருப்பது வினோத முரணாக இருக்கிறது.

பூலேகங்களில் இல்லை/ கீலோகங்களில் இல்லை/ மேலோகங்களில் இல்லை/ என்பதை
பூ
கி
மே
லோகங்களில் இல்லை என்று எழுதுகிறார். இந்த செப்பிடு விதைகளுக்கும் கவிதைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது என் எண்ணம்.

தீராவே தீராத காமமும், ஆகச் சிக்கலான் நீதியுணர்வும் தொகுப்பில் திரும்ப திரும்ப பேசப்பட்டிருக்கிறது.அறவுணர்வின் சுமை தாளாத ஒரு தருணத்தில் நம் எலலோரையும் தாஸ்தாவெஸ்கியின் நண்பர்களாக்கி, பகலின் சிற்றிரைச்சல் மிகுந்த குடிசாலைக்கு அனுப்பி விடுகிறான். நம்மில் ஒருவனாக அவனும் கூடவே வருகிறான். அங்கே நாமும் அவனுமாக சேர்ந்து அறவுணர்வின் மண்ணாங்கட்டியை நிலத்தில் போட்டு உடைக்கிறோம். அது அவ்வளவு எளிதில் உடையாது என்று தெரிந்திருந்தும், போதையின் கள்வெறியில் ‘ உடைத்து விட்டோம்’ ’உடைத்துவிட்டோம்’ என்று கண்கள் சிவக்க கத்துகிறோம்.

எல்லா கவிகளையும் போல குணாவும் சில குறிப்பிட்ட விஷயங்களின் மேல் மட்டும் சிறப்பு கவனம் கொள்கிறான். இது இயல்பானதே.நமக்கான ஒரு பொதுவாழ்வு உண்டெங்கிற போதிலும், நம் ஒவ்வொருவர் வாழ்வும் அவ்வளவு தனித்தனியானதே.ஒவ்வொரு தனிமனித இருப்பும் அவ்வளவு பொருட்படுத்தக் கூடியதே. இந்த உலகில் ஒருகோடியே நூற்றியெட்டு துயரங்கள் இருக்கின்றன.

                                   - இசை- 

Comments

சிவாஜி கணேசனின் முத்தங்கள் முன்னுரை, தூரன் குணாவின் தொகுப்பிற்கான விமர்சனம் இதையெல்லாம் முன்வைத்து ஒரு விஷயம்.... இவ்வளவு உற்சாகமான எழுத்தை வைத்துக்கொண்டு உரைநடையில் கணிசமான பங்களிப்பது குறித்து நீ ஏன் நண்பா யோசிக்கக் கூடாது!

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம