Skip to main content

ஒரு ப்ரவுன்கலர் ஜட்டியைப் பார்த்தீர்களா ?




“மேகம்” கட்டிலுக்கடியில் தவழ்ந்து போகையில்
அவரது தொந்தி நிலத்தில்தேய்ந்து மோசமாக மூச்சுமுட்டியது
ஏழாவதுமுறையாக
குளியலைறைக்குச் சென்று சல்லடை போட்டார்
தன் சகஎழுத்தாளர் தேநீர் குடிக்க அழைக்கையில்
” பழக்கம் இல்லை” என்று சொல்லி அனுப்பிவிட்டு
அவரது பையையும் பரிசோதித்துவிட்டார்.
ஜன்னல் கம்பியில் காயப்போட்டதாகத்தான் நினைவு.
காற்று இந்த மூன்றாவது மாடியிலிருந்து
அதை கீழே தள்ளி விட்டிருக்கலாம்.
கண்களைப்பிடுங்கி கீழே வீசி பொறுமையாகத் துழாவினார்.
பிறகு கண்களை நம்பாமல் அவரே இறங்கிப் போனார்.
அவர் ஒன்றும் தரித்திர கலைஞர் அல்ல
அவரிடம் இப்போது கூட சுளையாக 500 ரூபாய் இருக்கிறது.
ஆயிரம் ஜட்டிகள் வாங்கினாலும்
இடதுபுற எலாஸ்டிக் பட்டையில்
அது போலவே நூல்பிரித்து விட உறுதியாக அவருக்கு தெரியாது.
நாம் அசட்டை செய்வது போலவோ
கிண்டலடிப்பது போலவோ
அது ஒன்றும் சாதாரண ஜட்டி இல்லை.
அவரது இல்லத்து அரசி
அந்த ப்ரவுன் கலர் ஜட்டிக்கு
பொறுப்புணர்வு என்று பெயர் சூட்டி அனுப்பியிருக்கிறார்.

                               நன்றி : காலச்சுவடு மே இதழ்

Comments

wonderful poem Isai. Enjoyed reading it.The same lighter stream of human passes across your lines.
பிரவுன் கலர் ஜட்டி வைத்திருப்பவர்கள் சிலரை எனக்குத் தெரியும். எப்போதோ அவர்களைப் பார்த்துச் சிரித்தது இப்போது சில நேரம் உறுத்துகிறது.

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை