Skip to main content

நூல் வெளியீடு - கவிஞர் கலாப்ரியா உரை

ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனின் இனிய முத்தம்
_________________________________________

இசையின் நான்காவது கவிதைத் தொகுப்பு அந்தக் காலம் மலயேறிப்போனது’. பன்னிரெண்டு வருட கால கட்டத்தில் சராசரியாக மூன்று வருடத்திற்கு ஒரு தொகுப்பு என்ற கணக்கு. நான்கு தொகுப்புகளின் கவிதைத் தரத்தை சேர்த்துப் பார்த்தால் இது ஒரு சாதனையான நிகழ்வு, என்று தைரியமாகச் சொல்ல்லாம். (சுகுமாரன் சொல்வது போல்) எப்போதுமே கவிதையாட்டத்தில் அ...பாயகரமான ஆனால் வீரேந்திர ஷேவாக் போல தன் இயல்பான,ஆட்டத்தை வெளிப்படுத்தும் இசை, நான்கு இன்னிங்ஸிலும் தொடர்ந்து நல்ல ஸ்கோரை எட்டுவது என்பது ஆச்சரியமான விஷயம்தான். தவிரவும் இசை, சுடலையப்பனான, எங்க பாஷையில் சரியான சொள்ள மாடனான கிரிஷ் கெயிலுக்குப் பந்து வீசவும் செய்யும் ஆல் ரவுண்டர். இந்த ஒப்புமை இத்தொகுப்பின் அவரது கவிதையிலிருந்தே உருவானது.

அந்தக் கவிதை. .க்ரிஷ் கெயிலுக்குப் பந்து வீசுதல்,
நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை/ சொல்லப்போனால் ஒருபார்வையாளனாகக் கூட இல்லை/ மைதானத்திற்குள் தரதரவென இழுத்து வரப்பட்டு/பந்து வீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்/எதிரே கிரிஷ்கெயில் நின்று கொண்டிருக்கிறார்/அணித்தலைவர் ஓடி வந்து/பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று/ மறுபடியும் வலப்பக்கம் சுழன்று/ விழுமாறு வீசச்சொல்கிறார்./ நான் அவரது முகத்தையே பார்த்தேன் / அவர் திரும்பி ஓடி விட்டார்/ எதிரே க்ரிஷ் கெயில் நின்று கொண்டிருக்கிறார்./ அவரின் சடாமுடி ருத்ர தாண்டவனைக் குறித்து நிற்கிறது/
அடேய் சுடலையப்பா /இந்தப் பந்தை வானத்திற்கு அடி /திரும்பி வரவே வராதபடிக்கு/ வானத்திற்கு அடி.

இவ்வளவுக்கும் இசை அந்த ஆட்டத்திலேயே தான் இல்லையென்கிறார். தான் இல்லாத ஆட்டத்தில், அரூபமாக வாசக உருவை எடுத்துக் கொண்டு விளாசு விளாசென்று விளாசுவதுதான் அவரது கவிதைகள் என்பதே உண்மை. இசையின் கவிதைகளைப் போலவே அவரது முன்னுரைகளும் கெட்ட ஆட்டம் போடுபவை.இந்தத் தொகுப்பின் முன்னுரையில் அவர் சொல்லியிருப்பது போல, “எந்தப்பாரவையையும்,அல்லது எதையும் தராத தன் பஸ்ஸில் வரும் பயணியான ஒரு பெண்ணுக்கு அதன் கண்டக்டர் டிக்கெட் கேட்காதது போல, இசை தானும் கவிதையிடம் அது எதையும் தராத போதிலும் அதனிடம் டிக்கெட் கேட்பதில்லை என்கிறார்

எனக்குத் தெரிந்து, தன் படைப்பிடம் எதையும் கோராதவனே ஒரு நல்ல கலைஞன் என்று நினைக்கிறேன். படைப்புக்கான உந்துதல், படைத்தலின் மீதான Passion என்பதே அதனிடம் எதையும் கோராதிருப்பதே. அதனலேயே அவரால் தொடர்ந்து இயல்பான கவிதைகளைத் தர முடிகிறது. இசையைப் பொறுத்து, பொழுதுகளையும் நிகழ்வுகளையும் ஒரு வளர்ப்பு மிருகத்தின் மீதான அன்போடு பேணுகிறார்.அதனாலேயே அவர் அவற்றை எங்கே விட்டு வந்தாலும் அவர் கவிதை வாசலில், ஊர்ச் சகதியையெல்லாம் உடம்பில் பூசிக் கொண்டு வந்து வாலாட்டியபடி நிற்கின்றன அவை.

அப்படி ஒரு வளர்ப்பு மிருகம் ’ஞாயிற்றுக்கிழமை’. இசைக்கு விடுமுறை மீதும் விடுமுறைப் பொழுதுகள் மீதும் கவித்துவமான காதல் இருக்கிறது. சென்ற தொகுப்பில் அவை நிறைய வந்தன. இதில் கொஞ்சம் விடுமுறை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதில், அவரே சொல்வது போல, அவரது பல கவிதைகள் தன் உடைவாளையும் கவசங்களையும் கழற்றி வைத்து விட்டு வாசகனோடு ஒன் பை டூ டீ அருந்துபவைதான். பொதுவாகவே இசையின் சிறப்புத் தன்மையாக, சமீபத்திய கவிஞர்களிடையே அவரை முக்கியமானவராக நிறுவுவது இந்த மனப்போங்குடைய கவிதைகளும் அவரும்தான். ஆனால் என்ன, நான்கு பேரல் சாராயத்தை தன்னுடன் வைத்துக் கொண்டு ஊறுகாய் மட்டையை திருவனந்தபுரத்தில் வைத்து விடுகிறார். அது ஒரு புறமென்றால் வாழ்வின் அவலங்களை ஒரு போதும் கை விடுபவரில்லை அவர்.

“ஒரு கழிவிரக்க்க்கவிதை’என்று ஒருகவிதை,

ஒருகழிவிரக்க்க் கவிதை/ கண்ணை கசக்கிக்கொண்டு/என் முன்னே வந்து நிற்கிறது/ அதன் மேனியெங்கும் கந்தலின் துர்நாற்றம்/ ஊசிப் போன வடையை தின்று வாழும் அதை/கண்டாலே எரிச்சலெனக்கு/ ’போய்த்த் தொலை சனியனே...கண்ணெதிரே இருக்காதே”// கடுஞ்சொல்லால் விரட்டினேன்/ காலைத் தூக்கிக் கொண்டு உதைக்கப் போனேன்/அது தெருமுக்கில் நின்று கொண்டு/ ஒருமுறை திரும்பிப் பார்த்தது/ நான் ஓடோடிப்போய் கட்டிக் கொண்டேன்.
கழிவிரக்கத்தை ஓடிப் போய் கட்டிக் கொள்கிறார் இசை. அலைக்கழிகிறவனே நல்ல கலைஞனாக இருக்க முடியும். கழிவிரக்கம் கொள்கிறவனே மனிதனை எழுத முடியும்
நினைவில் காடுள்ள மிருகம் என்ற (ச்ச்சிதானந்தனின்) பிரபல வரிகளை மாற்றி நினைவில் வீடுள்ள மனுஷனென்று வாழ்க்கையைப் பகடி செய்யும் கவிதையொன்று சுவாரஸ்யமானது. இந்தத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான லக்‌ஷ்மிராய் கவிதை,
’நளினக்கிளி’
அந்த சிமெண்ட் லாரிக்கு வழி வேண்டும்
டிரைவரின் கீழ்ப் படியும் ‘கிளி’
தன் ஒற்றைக் கையை வெளியே நீட்டுகிறது
விரைத்து நீண்ட ஒரு உலக்கையைப்போல அல்ல
அய்யா .....அவசரம்......என்று கெஞ்சுகிற பாவனையில் அல்ல....
அது கையை நீட்டியதும்
அதன் மணிக்கட்டில் உதித்த சாம்பல் நிறப் பறவை
அலையலையாய் நீந்துகிறது
நான் காண்கிறேன்
இம் மீப் பெருஞ்சாலையின் அந்தரத்தில்
ஒரு அற்புத நடன முத்திரை.
இதன் நளினத்தின் முன்னே
உலகே நீ வழி விட்டு ஒதுங்கு.

பிரபஞ்சனுக்குப் பிடித்த வாணி ஸ்ரீ கவிதைகள் உட்பட்ட, இசையின் எல்லாக் கவிதைகளுமே சுவாரஸ்யமான நட்சத்திரக் கவிதைகள்தான். அதன் மொழி,எந்த மெனக்கெடலுமற்ற மிக மிக ஆதாரமான புழங்குமொழி. மிகச் சாதாரணமாக அடுக்கப் பெறுகிற
சாதராண வர்த்தைகளின் உச்சமாக, ஒரே ஒரு வரி மட்டும் சற்றே செவ்வியல் ஒழுங்குடன் ஒலித்து உன்னதமான கவிதையாக்கி விடும். ‘இப்பிறப்பு’ என்கிற கவிதை இதற்கு ஒரு உதாரணம். பொதுவாக இசையின் எல்லாக் கவிதைகளும் ஆவியில் எளிமையும் பொருளில் பாக்கியமும் கொண்ட கவிதைகள். அவை டாஸ்மாக்கின் பக்கத்து மேசைக்காரனுடன் ஒரு நாளும் சண்டை போடுகிறவையில்லை. சண்டையோ சமாதனாமோ சங்கீதமோ, முத்தமோ எல்லாம் தங்கள் மேஜைக்குள்ளேயே. ஆனால் அவர் கவிதைக்கு யாரும் தர மறுக்க மாட்டார்கள் முத்தத்தை.
இசை, சபையறிய இதோ ஒரு எம்.ஜி.ஆர் ரசிகனின் இனிய முத்தம் உனக்கு
(இசையின் கவிதை நூலை வெளியிட்டு வாசித்த வந்தனோபசாரக் கட்டுரை-வந்தனம் நண்பர்களே)
 

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான