Skip to main content

ஆட்டுதி அமுதே !





இந்த அதிகாலை பயணிகள் இரயிலில்
சுண்டல் வாடையொடு கலந்து
துயரவாடை வீசிக்கொண்டிருக்கிறது.
குழந்தையான சிறுவனொருவன்
என்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.
இடுப்புக்கு கீழே இரண்டு குச்சிகள்
ஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.
சுண்டுவிரலைப் போன்றதான
கட்டைவிரல் வாயைப் போன்றதான ஓட்டைக்குள்
அழுந்திக்கிடக்க
நிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.
புதிதாய் வந்தமரும் ஒரு இளைஞன்
தன் ஸ்மார்ட் ஃபோனை  முடுக்கி விடுகிறான்.
“டங்காமாரியான ஊதாரிஎங்கள் பெட்டிக்குள்
வந்து குதித்தான்.
நான் அந்த இளைஞனை
அவன் ஃபோனை
அந்தக் காலத்தை முறைத்துக்கொண்டிருந்தேன்.
பார்க்கவே கூடாது என்று
முகம் திருப்பியிருந்த படியால்
பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
நாசூக்காய் ஓரக்கண் ஓட்டுகையில்
கண்டேன்
அந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்…
அப்படி.... ! அப்படி... !
விளங்காத காலே ஆயினும்
அதை அப்படி ஆட்டு
என் செல்லமே!

                     நன்றி : ஆனந்த விகடன்

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.