காலிடைச் சந்தில் புகுந்தாடி
அப்பாவின் நெற்றியில் இரத்தம் பெருக்கடித்த
பூனைக்குட்டிகளை
எங்காவது கொண்டு போய் தொலைத்துவிட்டு வரச்சொன்னாள் அம்மா.
ஒரு சிமெண்டு பையில் திணித்துக் கட்டினேன்.
அவிழ்த்தெறிந்தேன்
ஊர்க்கோடி வெளிக்காட்டில்.
ஓடிவந்து ஆளுக்கொரு காலாய் கட்டிக்கொண்டன.
பற்றி பற்றி மேலேறப் பார்த்தன.
உதறி வீசினேன்
விழுந்தெழுந்த பிறகு
அவற்றுக்கு எல்லாம் விளங்கி விட்டது.
எத்தனையோ முறை
கடவுளை நம்பிநம்பி ஏமாந்தவன் என்பதால்
இந்த முறை வானத்தை அண்ணாந்து பார்க்கவில்லை.
இரும்புருளிக் குண்டுகள் உருண்டோடும்
தண்டவாளத்திடம் சொல்லி விட்டு வந்தேன்
“ என் செல்வங்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்.....”
Comments