ஒரு தேசத்தில் 4 அழகிகளும்
நாற்பதாயிரம் இளைஞர்களும் வாழ்ந்து வந்தனர்.
அந்த நாற்பதாயிரம் இளைஞர்களும் காதலில் துடிதுடித்தபடி இருந்தனர்.
இளைஞர்கள் எனில் அத்தனை ஆண்களும் தான்
4 : 40,0000 என்கிற ஆகக் கொடூரமான வாய்ப்பாட்டால்
அங்கு பூசல்கள் மூண்டன.
கலவரங்கள் வெடித்தன.
முதுகில் குத்த காலஅவகாசம் போதவில்லை
ஆகவே நேருக்கு நேராக நெஞ்சில் குத்திக்கொண்டனர்.
வீதிகளில் பிணங்கள் கிடந்தன
வெறிநாய்கள் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டன.
அரசனுக்கு துக்கம் மண்டையை அடைத்தது.
“ ரிஷியொருவன் தன் பத்தினியல்லாத ஒருத்தியுடன்
கலக்குங்காலையில் நம் தேசத்து அற்பனொருவன்
எட்டிப் பார்த்ததால் விளைந்த வினை..”
முன்வரலாறு சொன்னார் குலகுரு.
உடனே
யாககுண்டத்தில் தீ வளர்த்து
கண்ணீர் வார்த்து
ரிஷியை வரவழைத்தனர்.
செக்கச்சிவந்த வீதிகளைக் கண்டதும்
அவருக்கு கண் கலங்கி விட்டது.
மனம் இரங்கி விட்டது.
32000 : 32000 என்று
அழகின் சமன்குலைவை நீக்கியருளினார்.
தேசத்தில் அமைதி திரும்பியது.
ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர்.
விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும் பரிசுப்பொருட்களையும்
பரிமாறிக் கொண்டனர்.
மாரிமூன்றும் பொய்க்காது பொழிந்தன.
நீதிநெறிகள் தழைத்தோங்கின.
கலைகள் செழித்து வளர்ந்தன.
அத்தேசத்தின் கொடியிலிருந்து
“தலையில்லாத முண்டம்”
அகற்றப்பட்டு
” முத்தமிடப்படும் கன்னம் “ பொறிக்கப்பட்டது.
பாருங்கள்...
இப்போது அது பட்டொளி வீசிப் பறக்கிறது !
நன்றி : மலைகள்.காம்
Comments