Skip to main content

அழகு போர் அடிக்காதிருக்கட்டும் !


           




ஒரு தேசத்தில் 4 அழகிகளும்
நாற்பதாயிரம் இளைஞர்களும் வாழ்ந்து வந்தனர்.
அந்த நாற்பதாயிரம் இளைஞர்களும் காதலில் துடிதுடித்தபடி இருந்தனர்.
இளைஞர்கள் எனில் அத்தனை ஆண்களும் தான்
4 : 40,0000 என்கிற ஆகக் கொடூரமான வாய்ப்பாட்டால்
அங்கு பூசல்கள் மூண்டன.
கலவரங்கள் வெடித்தன.
முதுகில் குத்த காலஅவகாசம் போதவில்லை
ஆகவே நேருக்கு நேராக நெஞ்சில் குத்திக்கொண்டனர்.
வீதிகளில் பிணங்கள் கிடந்தன
வெறிநாய்கள் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டன.
அரசனுக்கு துக்கம் மண்டையை அடைத்தது.
ரிஷியொருவன் தன் பத்தினியல்லாத ஒருத்தியுடன்
கலக்குங்காலையில் நம் தேசத்து அற்பனொருவன்
எட்டிப் பார்த்ததால் விளைந்த வினை..
முன்வரலாறு சொன்னார் குலகுரு.
உடனே
யாககுண்டத்தில் தீ வளர்த்து
கண்ணீர் வார்த்து
ரிஷியை வரவழைத்தனர்.
செக்கச்சிவந்த வீதிகளைக் கண்டதும்
அவருக்கு கண் கலங்கி விட்டது.
மனம் இரங்கி விட்டது.
32000 : 32000 என்று
அழகின் சமன்குலைவை நீக்கியருளினார்.
தேசத்தில் அமைதி திரும்பியது.
ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர்.
விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும் பரிசுப்பொருட்களையும்
பரிமாறிக் கொண்டனர்.
மாரிமூன்றும் பொய்க்காது பொழிந்தன.
நீதிநெறிகள் தழைத்தோங்கின.
கலைகள் செழித்து வளர்ந்தன.
அத்தேசத்தின் கொடியிலிருந்து
“தலையில்லாத முண்டம் அகற்றப்பட்டு
முத்தமிடப்படும் கன்னம் “ பொறிக்கப்பட்டது.
 பாருங்கள்...
 இப்போது அது பட்டொளி வீசிப் பறக்கிறது !


                                                                        நன்றி : மலைகள்.காம்

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.