வருத்தங்களை எண்ணிப்பார்த்தால்
எல்லாம் சரியாக இருக்கிறது.
பிறகு
என்ன எழவிற்கு இந்த மனம்
இப்படி
எம்பி எம்பிக் குதிக்கிறது.
இதன் ”இன்பவெறிக்கூச்சல்” காதைக் கிழிக்கிறது.
ஒரு செடியைப் போல மரத்தை உலுக்கி
பூச்சொரிந்து கொள்கிறது.
தானே பந்து வீசி
தானே மட்டையடித்து
தானே விழுந்து பிடித்து விட்டு
பனியனைக் கழற்றிச் சுற்றுகிறது.
மண்ணிக்கீறி நுழையப் பார்க்கிறது
மலைக்கு மலை தாவப் பார்க்கிறது.
தன் உளுத்த பைக்கின் பிளிறலினூடே
நீளமான கண்டெய்னர் லாரியை
சைடெடுக்க முனைகையில்
எதிர்ப்பட்டு விட்டதொரு பேருந்து.
இரண்டுக்கும் இடையேயான அந்த
நூலிடைச்சந்தில்
அது படுத்து எழுந்து வெளியேறுகையில்
இந்த உலகம்
ஒரு முறை ஜோராக கைதட்டுகிறது.நன்றி : ஆனந்த விகடன்
Comments