Skip to main content

மூன்று கவிதைகள்

                                           




                                        1. காவியம்



  இந்த அதிகாலை எப்படி மின்னியது தெரியுமா?
  சொறி முற்றிய நாயொன்றின் பின்னங்கால்களில்
 லாரி ஏறிவிட்டது.
 அதன் வீறிடல் எல்லோர் மனங்களிலும் அதிர,
 கல்லூரி மாணவி ஒருத்தி 
 எஞ்சிய காலிரண்டைப் பற்றி 
அலேக்காக தூக்கி ஓரத்தில் கிடத்தி விட்டாள்.
" குழந்தையிலிருந்தே அவள் வீட்டில் நாய்கள் உண்டு"
  காவியத்திலிருந்து அவளை விலக்கி வைத்தார் நண்பர் 
 “ நாயென்றாலே நான்கு தெருக்கள் தள்ளி நடப்பவள் “ என்று
      நானவளை காவியத்துள் அமுக்கிப் போட்டேன்.


                                       2.  பிறகு




கடவுளே! நீர் முதலில்
மனைவிகளின் கன்னங்களிலிருந்து
வழுவழுப்பைச் சுரண்டி விடுகிறீர்
பிறகு
கணவர்களை கூண்டிலேற்றி
முதுகுத் தோலை உரித்தெடுக்கிறீர்

கடவுளே! நீர் முதலில்
கணவர்களின் சொற்களிலிருந்து
நறுமணத்தை விரட்டியடிக்கிறீர்
பிறகு
சத்தியம் செய்யச் சொல்லி
மனைவியரைத் துன்புறுத்துகிறீர்


                                   3. ஸ்டுபிட்ஸ்

அவ்வளவு பிரதானமான சாலையில்
அத்தனை ஆழமான பள்ளம் ஆகாதுதான்.
பேராசிரியர் நிலைகுலைந்து சரியப் பார்த்தார்
சுதாரித்துக் கடந்த பிறகு 
காலூன்றி நின்று
சாலையைத் திரும்பிப் பார்த்தார்.
அதிகாரிகளைப் பார்த்தார்..
அரசைப் பார்த்தார்..
 அமைச்சரைப் பார்த்தார்..
முதலமைச்சரை, பிரதமரைப் பார்த்தார்.
ரோடு காண்ட்ராக்டரை பார்த்தார்
அந்தப் பள்ளத்துள்
யார் யாரையெல்லாம் பார்க்க முடியுமோ
அத்தனை பேரையும்  பார்த்தார்.



                                   நன்றி : காலச்சுவடு - ஜனவரி -18

                                     
     

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கண் கண்ட தெய்வம்

  “பங்கமர் குயில்”  என்று   சக்தியைப் புகழ்கிறான் ஒரு புலவன் வாசிக்க வாசிக்கவே வாசலில் கேட்டது  ஒரு கூவல் உச்சிக் கிளையில் அமர்ந்துளதா? இலைப்புதரில் மறைந்துளதா? மண்ணில் அமுது செய் மாயம் அது எங்குளது? இனிது தவிர  இன்னொன்றறியாய் ! எங்குளாய் நீ? பங்கமர் குயிலே …! பங்கமர் குயிலே …! இம்மரத்திலிருந்து அம்மரத்திற்கு  மாறி அமர்கையில் கண்டேன் உமையை கண் கண்ட தெய்வத்தை.