அது அழுக்கும் காற்றோட்டமற்றதுமான
வகுப்பறை.அதன் பின்னால் மனோகரமான பள்ளத்தாக்குகள் இல்லை. அதை ஒட்டி ஓடைகள்
சலசலப்பதில்லை. ஆனாலும் அதனுள்ளிருந்து ஒரு கிறங்கடிக்கும் நறுமணம் கசிந்து வரும்.
அது இதயத்தின் தசைநார்களை இன்பத்தின் வலியால் துடிதுடிக்கச் செய்யும்.வினோதம்
என்னவெனில், இப்படி ஒரு அறை இருப்பதே முக்கால்வாசி மனித குலத்திற்குத் தெரியாது.
சிலருக்கு தெரிந்திருந்த போதிலும் அவர்களது நாசிகளுக்கும் அந்த நறுமணத்திற்குமிடையே ஊடுருவமுடியாத தடை
இருந்தது.
என்ன வண்ணம் ? என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாத,
பொத்தானுக்குப் பதிலாக பின்னூசி குத்தப்பட்ட
சட்டையும், பொத்தல்களால் “ தபால் பெட்டி “ என்று கேலி செய்யப்பட்ட டவுசரும் அணிந்திருந்த எங்களால் அந்த நறுமணத்தை
உணர முடிந்தது. நாங்கள் பரவசம் கொப்பளிக்க வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டோம்.
அப்போது கருணையற்ற கண்களை தடித்த கண்ணாடியால் மூடியிருந்த , கடுத்த முகமும் , கொண்டைப்
பிரம்பும் கொண்ட ஒரு ஆசிரியர் எங்களை நோக்கி ஓடிவந்தார்.. “காம்யூவைப் பார்த்தாயா?
” “ காப்காவைத் தெரியுமா ? ” என்று சீறிய
படியே, வினோத மிருகமென, தன் பிளந்த வாயிலிருந்து நெருப்பை ஊதிவிட்டார்.
பின்னூசி
குத்தப்பட்ட சட்டையும், தபால் பெட்டி
டவுசரும் அணிந்திருந்த நாங்கள், தலை
திருகப்பட்ட பறவையென, அவமானத்தின் கண்ணீரை
மறைத்தபடி, தொங்கிய தலைகளுடன் வகுப்பறைகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டோம்.
அப்போது அந்த வழியே கொஞ்சம் புஷ்டியான, வழுக்கையும் , கனிவும் கொண்ட மனிதரொருவர் வந்தார். எங்களிடம் விசாரித்தது விட்டு எல்லோரையும் ஒரு பன்னீர்
மரத்தடிக்கு அழைத்துச் சென்றார். “ நிஜமாகவே உங்களுக்கு காப்காவைத் தெரியாதா ? “
என்று கேட்டார். “ வேறு யாரையும் விட எங்களுக்கு அவனை நன்றாகவே தெரியுமென்று
நம்புகிறோம் சார்... ஆனால் அவன் மொழி எங்களுக்குப் புரியவில்லை... “ என்று
கலங்கினோம். அவர் அதைப் புரியச் செய்தார். ஆழ்ந்த கவலையில் விழுந்து கிடக்கும்
ஒருவனின் நெஞ்சில் பெருக்கெடுத்து வரும் விசித்திர எண்ணங்களின் உலகம் மெதுவாகக் துலங்கி வரக் கண்டோம். தோள்களை
தட்டித் தந்து “ நறுமணத்துள் கிடப்பீர்கள் ! “ என்று ஆசீர்வதித்தார்.
சரிந்து விழும் டவுசரை அரை நாண் கயிற்றில் இறுக்கிக் கொண்டு, வகுப்பறையை நோக்கி நடந்தோம். கடுத்த முகமும், கொண்டைப் பிரம்பும் கொண்ட , அந்த வெறி முற்றிய ஆசிரியர் இப்போதும் வாசலுக்கு ஓடோடி வந்தார். “காப்காவைத் தெரியுமா? “ என்று கத்தினார். இம்முறை அவர் கண்களை நேர்நோக்கி, நெஞ்சைத் தூக்கி “ தெரியும் “ என்று சொன்னோம்.
( தக்கை நிகழ்த்திய ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த அரங்கில் அவரை வரவேற்று நிகழ்த்திய உரை }
Comments