Skip to main content

தெரியும்



                     





     அது அழுக்கும் காற்றோட்டமற்றதுமான வகுப்பறை.அதன் பின்னால் மனோகரமான பள்ளத்தாக்குகள் இல்லை. அதை ஒட்டி ஓடைகள் சலசலப்பதில்லை. ஆனாலும் அதனுள்ளிருந்து ஒரு கிறங்கடிக்கும் நறுமணம் கசிந்து வரும். அது இதயத்தின் தசைநார்களை இன்பத்தின் வலியால் துடிதுடிக்கச் செய்யும்.வினோதம் என்னவெனில், இப்படி ஒரு அறை இருப்பதே முக்கால்வாசி மனித குலத்திற்குத் தெரியாது. சிலருக்கு தெரிந்திருந்த போதிலும் அவர்களது நாசிகளுக்கும்   அந்த நறுமணத்திற்குமிடையே ஊடுருவமுடியாத தடை இருந்தது.
  
 என்ன வண்ணம்  ? என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாத, பொத்தானுக்குப் பதிலாக பின்னூசி குத்தப்பட்ட  சட்டையும், பொத்தல்களால் “ தபால் பெட்டி “ என்று கேலி செய்யப்பட்ட  டவுசரும் அணிந்திருந்த எங்களால் அந்த நறுமணத்தை உணர முடிந்தது. நாங்கள் பரவசம் கொப்பளிக்க வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டோம். அப்போது கருணையற்ற கண்களை தடித்த கண்ணாடியால் மூடியிருந்த , கடுத்த முகமும் , கொண்டைப் பிரம்பும் கொண்ட ஒரு ஆசிரியர் எங்களை நோக்கி ஓடிவந்தார்.. “காம்யூவைப் பார்த்தாயா? ”  “ காப்காவைத் தெரியுமா ? ” என்று சீறிய படியே, வினோத மிருகமென, தன் பிளந்த வாயிலிருந்து நெருப்பை ஊதிவிட்டார்.
  
   பின்னூசி குத்தப்பட்ட  சட்டையும், தபால் பெட்டி டவுசரும்  அணிந்திருந்த நாங்கள், தலை திருகப்பட்ட  பறவையென, அவமானத்தின் கண்ணீரை மறைத்தபடி, தொங்கிய தலைகளுடன் வகுப்பறைகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டோம். அப்போது அந்த வழியே கொஞ்சம் புஷ்டியான, வழுக்கையும் , கனிவும் கொண்ட  மனிதரொருவர் வந்தார். எங்களிடம்  விசாரித்தது விட்டு எல்லோரையும் ஒரு பன்னீர் மரத்தடிக்கு அழைத்துச் சென்றார். “ நிஜமாகவே உங்களுக்கு காப்காவைத் தெரியாதா ? “ என்று கேட்டார். “ வேறு யாரையும் விட எங்களுக்கு அவனை நன்றாகவே தெரியுமென்று நம்புகிறோம் சார்... ஆனால் அவன் மொழி எங்களுக்குப் புரியவில்லை... “ என்று கலங்கினோம். அவர் அதைப் புரியச் செய்தார். ஆழ்ந்த கவலையில் விழுந்து கிடக்கும் ஒருவனின் நெஞ்சில் பெருக்கெடுத்து வரும் விசித்திர எண்ணங்களின் உலகம்  மெதுவாகக் துலங்கி வரக் கண்டோம். தோள்களை தட்டித் தந்து “ நறுமணத்துள் கிடப்பீர்கள் ! “ என்று ஆசீர்வதித்தார்.  
   
       சரிந்து விழும் டவுசரை அரை நாண்  கயிற்றில் இறுக்கிக் கொண்டு, வகுப்பறையை நோக்கி நடந்தோம். கடுத்த முகமும், கொண்டைப் பிரம்பும் கொண்ட ,  அந்த வெறி முற்றிய ஆசிரியர் இப்போதும் வாசலுக்கு ஓடோடி வந்தார். “காப்காவைத் தெரியுமா? “ என்று கத்தினார். இம்முறை அவர் கண்களை நேர்நோக்கி, நெஞ்சைத் தூக்கி “ தெரியும் “ என்று சொன்னோம்.


                (  தக்கை நிகழ்த்திய ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த அரங்கில் அவரை வரவேற்று நிகழ்த்திய உரை }

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம