Skip to main content

தெரியும்



                     





     அது அழுக்கும் காற்றோட்டமற்றதுமான வகுப்பறை.அதன் பின்னால் மனோகரமான பள்ளத்தாக்குகள் இல்லை. அதை ஒட்டி ஓடைகள் சலசலப்பதில்லை. ஆனாலும் அதனுள்ளிருந்து ஒரு கிறங்கடிக்கும் நறுமணம் கசிந்து வரும். அது இதயத்தின் தசைநார்களை இன்பத்தின் வலியால் துடிதுடிக்கச் செய்யும்.வினோதம் என்னவெனில், இப்படி ஒரு அறை இருப்பதே முக்கால்வாசி மனித குலத்திற்குத் தெரியாது. சிலருக்கு தெரிந்திருந்த போதிலும் அவர்களது நாசிகளுக்கும்   அந்த நறுமணத்திற்குமிடையே ஊடுருவமுடியாத தடை இருந்தது.
  
 என்ன வண்ணம்  ? என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாத, பொத்தானுக்குப் பதிலாக பின்னூசி குத்தப்பட்ட  சட்டையும், பொத்தல்களால் “ தபால் பெட்டி “ என்று கேலி செய்யப்பட்ட  டவுசரும் அணிந்திருந்த எங்களால் அந்த நறுமணத்தை உணர முடிந்தது. நாங்கள் பரவசம் கொப்பளிக்க வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டோம். அப்போது கருணையற்ற கண்களை தடித்த கண்ணாடியால் மூடியிருந்த , கடுத்த முகமும் , கொண்டைப் பிரம்பும் கொண்ட ஒரு ஆசிரியர் எங்களை நோக்கி ஓடிவந்தார்.. “காம்யூவைப் பார்த்தாயா? ”  “ காப்காவைத் தெரியுமா ? ” என்று சீறிய படியே, வினோத மிருகமென, தன் பிளந்த வாயிலிருந்து நெருப்பை ஊதிவிட்டார்.
  
   பின்னூசி குத்தப்பட்ட  சட்டையும், தபால் பெட்டி டவுசரும்  அணிந்திருந்த நாங்கள், தலை திருகப்பட்ட  பறவையென, அவமானத்தின் கண்ணீரை மறைத்தபடி, தொங்கிய தலைகளுடன் வகுப்பறைகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டோம். அப்போது அந்த வழியே கொஞ்சம் புஷ்டியான, வழுக்கையும் , கனிவும் கொண்ட  மனிதரொருவர் வந்தார். எங்களிடம்  விசாரித்தது விட்டு எல்லோரையும் ஒரு பன்னீர் மரத்தடிக்கு அழைத்துச் சென்றார். “ நிஜமாகவே உங்களுக்கு காப்காவைத் தெரியாதா ? “ என்று கேட்டார். “ வேறு யாரையும் விட எங்களுக்கு அவனை நன்றாகவே தெரியுமென்று நம்புகிறோம் சார்... ஆனால் அவன் மொழி எங்களுக்குப் புரியவில்லை... “ என்று கலங்கினோம். அவர் அதைப் புரியச் செய்தார். ஆழ்ந்த கவலையில் விழுந்து கிடக்கும் ஒருவனின் நெஞ்சில் பெருக்கெடுத்து வரும் விசித்திர எண்ணங்களின் உலகம்  மெதுவாகக் துலங்கி வரக் கண்டோம். தோள்களை தட்டித் தந்து “ நறுமணத்துள் கிடப்பீர்கள் ! “ என்று ஆசீர்வதித்தார்.  
   
       சரிந்து விழும் டவுசரை அரை நாண்  கயிற்றில் இறுக்கிக் கொண்டு, வகுப்பறையை நோக்கி நடந்தோம். கடுத்த முகமும், கொண்டைப் பிரம்பும் கொண்ட ,  அந்த வெறி முற்றிய ஆசிரியர் இப்போதும் வாசலுக்கு ஓடோடி வந்தார். “காப்காவைத் தெரியுமா? “ என்று கத்தினார். இம்முறை அவர் கண்களை நேர்நோக்கி, நெஞ்சைத் தூக்கி “ தெரியும் “ என்று சொன்னோம்.


                (  தக்கை நிகழ்த்திய ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த அரங்கில் அவரை வரவேற்று நிகழ்த்திய உரை }

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...