ஒளிப்புள்ளிகள் ஒன்றிணைந்து
அம்மை எழுந்தருளல்
"மகனே ! என்னதான் உன் வேதனை?"
"தனியன்.."
"பொய்"
"நிஜமாகத்தான்.."
" உன்னோடு யாருமே இல்லையா?"
" இருக்கிறார்கள்"
பிறகு?
" இருப்பதுபோல் இருக்கிறார்கள்"
"உறுதியாக இருக்க வை.."
"போய்விடுவார்கள்.."
" கலங்காதிரு மகனே! "
" இதற்கு இது பதிலில்லை."
"வண்டிச்சக்கரம்.. மன்னிக்க .. காலச்சக்கரம்... அது சுழலத்தான் செய்யும்"
" பரவாயில்லை.. வண்டிச்சக்கரமே புதிதாக உள்ளது"
" நன்றி !"
"அது ஏன் சுற்றிக் கொண்டேயிருக்கிறது?"
"சுழன்றால்தானே அது சக்கரம்?"
"நன்றாகச் சுழலட்டும்....ஆனால் அது ஏன் எப்போதும் என் வீட்டு முன்பாகவே சுற்றுகிறது?"
" மகனே ! அது மொத்த உலகிற்கும்தான் சுழல்கிறது... அப்படியே உன் வீட்டுப் பக்கமும் வருகிறது"
"இருக்கலாம். ஆனால் என் வாயிலில் மட்டும் கொஞ்சம் வேகமாகச் சுற்றுகிறது"
" அது உன் மாயை..'
" கடைசி ஆயுதத்தை இவ்வளவு சீக்கிரமாகவே எறிந்து விட்டாயே?"
"மாயையை உண்மையென்றும் சொல்லலாம்.."
"எனில், உண்மையாகவே போய் விடுவார்கள்... அப்படித்தானே?"
"என் மடிக்கு வா!"
" மாட்டேன்.. போர் அடிக்கிறது"
"ஒவ்வொரு முறையும் இந்த ஆறுதலை புதிது போலவே நிகழ்த்த எனக்கும்தான் போர் அடிக்கிறது.."
அப்படியெனில், உறுதியாகப் போய் விடுவார்கள்.. இல்லையா?
"மகனே ! தனிமை நல்லது!"
" ஆம்"
" பிறகென்ன? "
" நல்லதெல்லாம் நல்லதா என்ன?"
அம்மை புகையாகி மறைதல்
Comments