முற்றத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது
சாக்குருவிக் கூட்டம்.
நான் நெருங்க நெருங்க
ஒவ்வொன்றாக
எழுந்து பறந்தது.
ஒரு குருவி...
ஒரேயொரு பட்டுக்குருவி...
அது மட்டும்
என் காலடியில் தத்தித் கொண்டிருக்கிறது.
அதற்கு மனிதனைத் தெரியும்.
அவன் வலைகளைத் தெரியும்.
வாணலியின் கொதிகொதிப்பு
அதன் மூளையில் பொதிந்துள்ளது.
இருந்தும்
தத்திக் கொண்டுதான் இருக்கிறது இன்னும்.
"வந்துவிடு..." " வந்துவிடு..." என்று
கத்துகின்றன தூரத்துச் சுற்றம்.
முத்தாய்ப்பாக
அது தன் துளியூண்டு அலகை
என் சுண்டுவிரலில்
வைத்துத் தேய்த்த போது
நான்
முற்றாக மறைந்து போனேன்.
Comments