பனிபூத்த இந்த மார்கழிப் பொழுதில் வீட்டின் முன் கோலம் கொண்டிருக்கிறாள். அமர்ந்த கோலமோ குனிந்த கோலமோ அன்று இது தனிக்கோலம். ஒன்றில் ஆழ்ந்து கரைகையில் கொள்ளும் திருக்கோலம். ஈரக் கூந்தலினின்று சொட்டுச் சொட்டாய் நழுவிவிழும் நீர்த் துளிகள் அழிப்பதற்குப் பதிலே ஆக்கி ஆக்கி அளிக்கின்றன. உலகை ஆசிர்வதித்தபடி கொஞ்சமாய் உந்தி வளையும் குதிகால்பிறை சிருஷ்டியின் பூரிப்பு அவள் தன்னுள்ளே சிதறிக் கிடக்கும் புள்ளிகளை ஒன்றிணைத்து ஒரு கோடிழுக்கிறாள் வாசலில் உதிக்கிறது புத்தம்புது கோலமொன்று. |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments