பனிபூத்த இந்த மார்கழிப் பொழுதில் வீட்டின் முன் கோலம் கொண்டிருக்கிறாள். அமர்ந்த கோலமோ குனிந்த கோலமோ அன்று இது தனிக்கோலம். ஒன்றில் ஆழ்ந்து கரைகையில் கொள்ளும் திருக்கோலம். ஈரக் கூந்தலினின்று சொட்டுச் சொட்டாய் நழுவிவிழும் நீர்த் துளிகள் அழிப்பதற்குப் பதிலே ஆக்கி ஆக்கி அளிக்கின்றன. உலகை ஆசிர்வதித்தபடி கொஞ்சமாய் உந்தி வளையும் குதிகால்பிறை சிருஷ்டியின் பூரிப்பு அவள் தன்னுள்ளே சிதறிக் கிடக்கும் புள்ளிகளை ஒன்றிணைத்து ஒரு கோடிழுக்கிறாள் வாசலில் உதிக்கிறது புத்தம்புது கோலமொன்று. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments