சாலையின் நடுவே நின்று ஓர் ஆட்டோக்காரர் போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார் தூரத்தில் இருந்து பார்க்கையில் ஏதோ விபத்து போல் தெரிந்தது கிட்ட நெருங்க நெருங்க சாக்கடை உடைசல் என்று சந்தேகித்தேன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இரண்டு கல்வி நிறுவனங்களும் ஒரு வங்கியும் நிறுத்தி வைக்கபட்டிருந்தன. கூடவே சில வீடுகளும் எனக்கும் கைகாட்டி ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நிறுத்தி வைத்தார். அரியவகை பச்சோந்தி ஒன்று தேக்கித் தேக்கி சாலையைக் கடந்து கொண்டிருந்தது அது சென்று மறைந்ததும் "யாவும் இயங்குக!" என்று அறிவித்துவிட்டு ஆட்டோவில் ஏறிப்பறந்தது ஓர் அரிய உயிர். |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments