Skip to main content

பழமுதிர்சோலையார்


அன்று முழுக்க கடும் மனச்சோர்வில் இருந்தேன். கட்டிலை விட்டு எழக்கூட விரும்பாத  மனச்சோர்வு. வாழ்வு அப்படி அடித்து மூலையில் கிடத்துவது அவ்வப்பொழுது நடப்பதுதான். அடுத்த நாள் அதையும் இதையும் பற்றி கொண்டு மெல்ல எழுந்து நின்றேன். கட்டாயம் போயாக வேண்டிய உறவினரின் சுபகாரியம் ஒன்று இருந்தது. முதல் நாளுக்கும் அடுத்த நாளிற்கும் வாழ்வில் எதுவுமே மாறியிருக்கவில்லை  ஆனால் திடீரென எங்கிருந்தோ ஒரு பாட்டு வந்து நாவில் அமர்ந்தது. ...

"தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு  மகிழ்ச்சியில் திளைத்திட.." 

அந்த அழுகிய நான் எங்கு ஓடி ஒளிந்ததோ   தெரியவில்லை.  பாட்டில் ஏறிப்  பறந்து கொண்டிருந்தேன். 

திடீரென ஒரு மொட்டை உருவம் என் தோள் தொட்டுத் திருப்பி  " நேற்று நீ எப்படி இருந்தாய்... நினைவிருக்கிறதா..?"  என்று சிரித்துக் கொண்டே  கேட்பது போல ஒரு பிரமை  தோன்றி மறைந்தது.  நடு ரோட்டில் கண்ணீர் தாரைகள் வழிந்து இறங்கி மழை நீரில் விழுந்தன். அவசர அவசரமாக ஹெல்மெட் கண்ணாடியை இறக்கிவிட்டேன். மறுபடியும் அந்தப் பாடலை பாட முயன்றேன். வெறும் அழகையாக ஒலித்தது. களிப்பின் கண்ணீர்! 

சிங்காநல்லூர் சிக்னலை பழமுதிர்சோலை ஆக்க உன்னைத் தவிர வேறு ஒரு தேவனாலும் ஆகாது அய்யனே!

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான