அவசரத்தில் இருக்கும் இளம் பெண் ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயே மாகாளியம்மனின் வாசலில் காலூன்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு அவசரமுமின்றி ஆடி அசைந்து வெளிவரும் ஒரு மூதாட்டி தன் கைக்குழியை ஒற்றி எடுத்து பூசி விடுகிறாள் அவளுக்கு. பிசிறை கண் மறைத்து ஊதியும் விட்டாள் அந்த ஊதலில் வந்த இசை தூரத்தில் இருந்த ஒருவனுக்குத் தெளிவாகக் கேட்டது. யாரோ யாருக்கோ தீற்றி விடும் திருநீரில் யாரோ ஒருவனின் ஏதோ ஒன்று குணமடைகிறது தன் கை ஒன்றுமில்லாத இந்தக் காரியத்தைக் காணும் தேவியின் வதனத்தில் ஒரு பூரித்த புன்னகை. |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments