“நீங்கள் CCTV யால் கண்காணிக்கப்படுகிறீர்கள் “ இந்த வாசகம் இப்போது பரவலாகக் காணக்கிடைக்கிறது. பெரு நகர வீதி முதல் சிறு வணிகக் கூடம் வரை இதற்கென்று ஒரு இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. CCTV- க்கு முன்பே கண்காணிப்பு பிறந்து விட்டது கண்காணிப்பே! நீ இந்த பூமியில் பிறந்த இரண்டாவது மனிதனின் உடன் பிறப்பு தானே? அறிவியல் ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து இங்கு வந்து சேர இவ்வளவு கோடி ஆண்டுகள் ஆகி விட்டன. போலீஷ் என்கிற CCTV முதலாளி என்கிற CCTV நீதியிலிருந்து மனிதன் தப்பிவிட முடியுமா என்ன? எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் கடவுள் CCTV - யைப் போல ஒருவனுக்கு இன்னொருவன் CCTV அவனை அவனே உற்று நோக்கும் தருணத்தில் அங்கு தோன்றுகிறது ஒரு CCTV பேரன்பு எனில் அது பெரிய CCTV யா என்ன? வீடு வீதி வரை வந்து வழியனுப்பி வைத்துவிடுவதாக எண்ணிக் கொண்டிருப்பது நமது கற்பிதங்களில் ஒன்று நமது வீடுகளின் உச்சியில் கழுத்தை நீட்டிக் கொண்டு ஒரு பலஹீனமான உபகரணம் ஈசனின் தலையில் உடைந்த பிறை போல. |
உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும் அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில் மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு வேறொரு காதல் இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

Comments
உடைந்த பிறை போல. Nalla karpanai 😇