Skip to main content

சமயவேல் கவிதை


அழகென்னும் அபாயம்

ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில்
ஊர்தி எந்திரம் நிறுத்தி
சாலையோரம் கொஞ்சம் நடந்து
ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி
சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன்
நுணா மரப் புதரொன்றில்
ஒரு சிறு பறவை
இறகுகள் அடர் சிவப்பு
கழுத்து மயில் நீலம்
உருண்டை வயிறு சாம்பல் நிறம்
கொண்டை மஞ்சள் நிறம்
கண்கள் என்ன நிறம்?
கால்கள் பசுமஞ்சள் நிறம்
விரல்கள் அரக்கு நிறம்
நிற்கிற மரமோ மர நிறம்
அந்த இத்தினியூண்டு பறவை
கொண்டையை ஆட்டி
ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது
என் பெரு நகர ஆத்மாவின் தலை
வெட்டுண்டு உருண்டது
மரணத்தின் விளிம்பை
ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல்
கூவல் முடித்து பறவை
விருட்டென்று பறந்தோடியதும்
உயிர் மீட்டு
ஓர் குழந்தையாக நின்றேன்

Comments

சமயவேல் அழகு! அவர் கவிதை அழகு!!
இரண்டுக்குமிடையில் ஊசலாடிக் கொண்டிருப்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். திடுக்கென்று தோன்றி மறைகிறது உயிர்ப்பு. சமயவேலின் புதிய தொகுப்பு வாங்கியிருக்கிறேன்.இனிமேல்தான் படிக்க வேண்டும்.

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

அதிர்ச்சி ரிப்போர்ட்

க டைசியில் அவன் அறிந்து கொண்டான் அவள் இல்லாத போதுதான் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்கிற உண்மையை அதனினும் கடைசியாக அவன்  திடுக்கிட்டு அறிந்ததுவோ... மகிழ்ச்சியாக இருப்பதில்தான் என்னவோ  சிக்கல் அவனுக்கு

வெண்டை விரல்களுக்கெதிரான விடுதலைப்பாட்டு

  பி யானோ வகுப்பில் இன்று புதிய பாடம் என் மாஸ்டர் அதிகம் பேசமாட்டார் அவ்வப்போது முறைப்பார் இன்றோ மூன்றுமுறை முறைத்துவிட்டார் கடைசியில் என் கை பாடிவிட்டது  சமதளத்திலிருந்து சற்றே நீண்டு ‘ஷர்ப்’ பைத் தீண்டுகையில் என் விரல்களை நான் கண்டேன். ஆஹா…! என்னுடையதோ இவை… இத்தனை  ஜ்வலிப்போ இதற்கு… நீந்து மீனோ.. தாவு அணிலோ.. தெய்வம் என்று பெயர் பெற்ற மூடமே! என்னுடை விரல்களை என்னுடை  கண்களில் காட்ட 47 ஆண்டுகள்  வேண்டுமோ உமக்கு?