Skip to main content

அந்தப் பசி நன்கு வறுக்கப்பட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது


கையில் ஒரு அலுமினியத் தட்டில்லை
உடைகளில் கிழிசலேதுமில்லை
ஆனாலும் அந்தக் கண்கள் ..
அது நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்குரியவை

அவன் உணவு
தேக்கு மரக்கதவுகளாலும்
சுற்றி நிற்கும் காம்பவுண்டு சுவர்களாலும்
இரண்டு கொழுத்த நாய்களாலும்
தாளிட்டுக் கொண்டு ஒரு மாளிகைக்குள்
வாழ்கிறது.

அந்த வீதியில் எத்தனையோ
வீடுகள் திறந்திருக்கும் போதிலும்
பன்னெடுங்காலமாக
அவன் அந்த இரும்பு கிராதிக்கு
கீழே தான் நின்றுகொண்டிருக்கிறான்.

காம்பவுண்டு சுவரை எகிறிக் குதித்து,
நாய்களை கொன்று வீசி விட்டு
தேக்குமரக்கதவுகளை
உதைத்து உதைத்து திறக்கும் நாயக பாவத்தில்
அவன் புனையும் பாடல்கள்
அவனைப் போலவே
இரும்பு கேட்டுக்கு கீழே கிடக்கின்றன.
அவன் அப்பாடல்களை தின்று வாழ்கிறான்
அல்லது அந்தப் பசியை.
அது நன்கு வறுக்கபட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது.
அது வாழட்டும்
காணவே காணாத அந்தப் பிச்சை
அதுவும் வாழட்டும்
அந்த நாய்கள்
அவை வாழ்வாங்கு வாழட்டும்.

Comments

ramalingam said…
நல்ல கவிதை. நல்ல புகைப்படம். நல்ல தலைப்பு. புனைப் பெயர்தான் நன்கு வறுக்கப்படாத கோழி போல் இடிக்கிறது.
இப்படி தன்னெழுச்சியான சுதந்திர வரிகளை இசை மட்டுமே எழுத முடியும். சபாஷ்!

சமயவேல்
இசை, நான் உங்கள் கவிதைகளின் விசிறியாகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.:)))

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?