Skip to main content

என் முதல் சிறுகதை

இளமஞ்சள் நதி


தன் பத்தொன்பதாவது வயதில் அப்பாவிடம் இருந்து முதல் அரையை வாங்கிக்கொண்டு கொஞ்சமும் பதற்றமற்று நின்று கொண்டிருந்தான் பிரபு. அப்பாவிடம்அவனுக்கு எப்போதும் பயமிருந்ததில்லை. தோளிற்கு மேல் வளர்ந்த பிறகல்லகாலிற்கு கீழ் நிற்கும் போதே தோழனாகி விட்டவன் அவன். தன் முடிவில்உறுதியாகவே இருப்பதாகவும், குடும்ப மானம் போய் விடுமென்றால் குடும்பத்திலிருந்து போய் விடுவதாகவும் சொன்னான். கூப்பாடு போட வாய்திறந்த சரஸ்வதியை “ஊரக் கூட்டதடி கழுத முண்ட” என்று காலைத் தூக்கிக்கொண்டு உதைக்கப் போனார் கணேசன். அவள் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். பிரபு பீரோவைத் திறந்து தன் ஆடைகளை எடுக்கத் துவங்கினான்.






“தூக்கத்திலிருந்த மனைவி கழுத்தை நெறித்துக் கொலை; கணவருக்கு போலீஸ் வலை வீச்சு” ... உறக்கம் வராது உலாத்தும் எல்லா ராத்திரிகளிலும் கணேசனுக்கு இந்த செய்தி நினைவில்வரும். போலீஸ் மட்டும் வலைவீசாமல் இருக்குமானால் ஒருவேளை இந்நேரம் அது நடந்து முடிந்திருக்கலாம்.அந்தராத்திரிகளில் அவர் சிகரெட்டுகளை கொன்றுபோட்டு மிதித்தார்.கணேசனுக்கும் சரஸ்வதிக்கும் திருமணத்திற்கு முன்பே ஒருவருக்கொருவர்பிடிக்கவில்லை. அதற்காக திருமணம் செய்யாமல் இருக்க முடியாது. பெரியோர்கள் நிச்சயித்து விட்டார்கள் .நிச்சயித்து விட்டு வேறு திருமணத்தை நிச்சயிக்க போய் விட்டார்கள் மாசாணியம்மன் கோயிலின் அரச மரத்தடியில் நின்று கொண்டிருந்த சிவந்துவளர்ந்த பையனோடு அரைமணி நேரத்திற்குமதிகமாய் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் என்கிற செய்தி சரஸ்வதியின் வீட்டை எட்டிய அடுத்தஇரண்டு நாட்களில் அவள் யாரோடு சிரித்துப் பேசவேண்டும் என்று அவள் அப்பா முடிவுசெய்து விட்டார்.

பிடித்ததோ இல்லையோ வாரத்தின் இரண்டு ராத்திரிகளில் இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டனர். அதன் காரணமாக பிரபு பிறந்தான். அவனைக் காலையில் அம்மாவும் மாலையில் அப்பாவும் வளர்த்தனர். அவர் தன் மனைவியை காதலிக்க எவ்வளவோ முயன்று பார்த்தார். உடனுறை தேவியை காதலித்தாகவேண்டியதன் அவசியத்தை தன் மனதிற்கு சொல்லிக் கொடுத்துப்பார்த்தார். குறைந்தபட்சம் புணர்ச்சியின் போதாவது – அந்த உடலையாவது – காதலிக்க வேண்டியிருந்தது.ஆனால் அவரின் எல்லா புணர்ச்சிகளிலும் லலிதாவே உடனிருந்தாள். அவர் சரஸ்வதியின் உடலால் எப்போதும் லலிதாவைப் புணர்ந்து கொண்டிருந்தார்.

எடுத்துக் கொள்ள சொல்லி அவள் எவ்வளவோ சமிக்ஞைகள் தந்திருக்கிறாள்.ஏக்கம் வழிந்த கண்களால், குறிப்புணர்த்தும் சொற்களால், தனித்திருந்தவேளைகளின் எதேச்சையானதே போன்ற தொடுதல்களால். நாம் தான் தயங்கி தயங்கிநின்று விட்டோம். நெஞ்சே! நீ மட்டும் கொஞ்சம் துணிந்திருந்தால் அவள் இடையில் ததும்பிநின்ற இளமஞ்சள் நதியில் குதித்து இச்ஜென்மத்தை கரையேற்றியிருக்கலாம். இன்பத்தின் வாயில்கள் திறந்திருக்கும் போதிலும் கோழைகளால் அதில் ஒரு போதும் பிரவேசிக்க முடிவதில்லை.



ஒரு காம்பவுண்ட் குடியிருப்பில் கணேசனின் வீட்டிற்குப் பக்கத்தில் லலிதா குடிவரும் பொழுது அவளுக்கு ஒரு கைக்குழந்தையும், கருத்து உருண்ட ஒரு கணவரும் இருந்தனர். அவ்வளவு வளைவு நெளிவான ஒரு உடலை அவன் சினிமாவின் டூயட்காட்சிகளில் மட்டுமே பார்த்திருந்தான். பொதுவாசல், பொதுக்கழிப்பிடம் என நெருக்கிக் கட்டப்பட்டிருக்கும் காம்பவுண்ட் வீடுகளின்அன்யோன்யம் தவிர்க்க இயலாதது. கறிக்குழம்பு மணம் பக்கத்து வீட்டுக்குப் போயே தீரும். அதன் குழந்தைகள் நண்பர்களாகியே தீர வேண்டும்.



குழந்தைப் பேற்றைக் கருதி கணேசன் ஒரு முறை லலிதாவை அக்கா என்று அழைத்தான்.

“உங்களுக்கு என்ன வயசு?

”பத்தொன்பது நடக்குது”

”எனக்கும் அவ்வளவுதான்..கொழந்தை பெத்துட்டா உடனே கெழவியா” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

“டேய்! அவளுக்கு நீ அக்கானு கூப்பிடறது பிடிக்கலைனா வேலை சுலபம்டா” என்றுஅவன் நண்பர்கள் தெம்பூட்டிய போதும் அவள் அங்கு குடியிருந்த ஒரு வருடகாலமும் ஒரு வேலையும் நடக்கவில்லை. லலிதாவின் கணவரோடு கணேசன் நன்றாகத்தான் பழகினான். ஜோக்குகளை பகிர்ந்து கொண்டான். வாய்பிருக்கும்போது இருவரும் மாலை நடைநடந்து போய் ஐயர் கடையில் தேங்காய்ப்பால் அருந்திவந்தார்கள். அங்கு காசு கொடுக்க முண்டியடிக்கவும் செய்தார்கள். என்றாலும் கணேசன் அவருக்கு கருமாண்டி என்று பெயர் வைத்திருந்தான். இரவு ஒன்பது மணிவரை லலிதாவின் வீட்டில் மூவரும் சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்தாலும் ஒன்பது மணி அடித்ததும் ”நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொல்லி இவனை வெளியே தள்ளி தாழிட்டு விடுகிறான் என்றால் அப்புறம் திட்டாமல் என்ன செய்ய?



காம்பவுண்டே காலியாக கிடந்த ஒரு தனித்த மதியத்தில் கணேசனை “காது சுண்டி”

என்று அழைத்து விட்டு வீட்டிற்குள் ஓடினாள் லலிதா. யாராவது தன்னை கேலிசெய்து விட்டு ஓடினால் பின்னே துரத்திச்சென்று பிடிக்கவேண்டும் என்கிற நல்லறிவு அப்போது அவனுக்கு சட்டென்று வேலை செய்தது. அவன் அவளை துரத்திக் கொண்டு ஓடினான். ஓடியவள், படுக்கையறையாய் இருக்கிற முன்னறையின் இரும்பு கட்டிலின் மேல் ஏறிக்கொண்டாள். இவன் பிடிக்க வரவும், எட்டிக் குதித்து சமையலறக்குள் ஓடினாள். இனி ஓட ஒரு இடமில்லை.சமயலறையின் மூலையில் மாட்டிக்கொண்டவளை இவன் கொட்டுவது போல கொட்டினான். அவன் கொட்டக்கொட்ட அவள் திரும்ப திரும்ப காதுசுண்டி காதுசுண்டி என்று முனகிக்கொண்டே கைகளை குறுக்கே வைத்து அவனைத் துடுத்தாள். அப்போது கிணுகிணுத்த வளையலோசை அவன் காதைப் புணர்ந்து மயக்கியது. அவளின் பூரித்த கன்னங்களிலும்,கருஞ்சிவப்பு இதழ்களிலும் அவன் மெய் மறந்த நின்ற கணத்தில் அவள் தப்பிக்கொண்டு மீண்டும் வராண்டாவிற்கு ஓடிவிட்டாள். காது சுண்டி என்ற பெயர் அவனுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தேயிருக்கிறது. அந்தக் காது அவனை என்னதான் செய்யுமோ, அடிக்கொருதரம் அதை ஒரு முறை சுண்டிவிட்டு அதன் மடலை இரண்டுமுறை தேய்த்துவிடுவான்.



கருமாண்டிக்கு நைட் ஷிப்ட் என்றால் கணேசனுக்கும்தான் நைட் ஷிப்ட். மங்கிய வெளிச்சத்தில் கோரைப்பாயில் மல்லாந்து படுத்தபடியே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு –விட்டத்தில் லலிதாவைப் பார்த்துக் கொண்டு- கொட்டக் கொட்டவிழித்திருந்தான். அவளும் அந்த மங்கிய வெளிச்சத்தில் படுத்துக் கொண்டு தன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றுதான் இவன் நினைத்துக் கொண்டான்.லலிதா பக்கதில்தான் படுத்திருக்கிறாள் இடையே ஒரு அட்டைத்தடுப்பு இருக்கிறது அவ்வளவுதான். சில இரவுகளில் அட்டையின் பூச்சிஓட்டைகளில் கண்செலுத்திப் பார்ப்பான். அப்போது கருமாண்டியின் அழுக்கு பனியனோ, தண்ணீர் சொம்போ தெரியும். அப்போது ஒரு பல்லியோ, கரப்பானோ இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டிற்கு சாவகாசமாக ஊர்ந்து சென்று இவனிடம் இழிச்சொல்லால் வசை வாங்கும். என்னதான் ஏங்கிஏங்கி புரண்டுபுரண்டு தவித்தாலும் இவன் பல்லியோ கரப்பானோ அல்லவே. கடைசியில் போர்வையை இறுக்கிப் போர்த்திக் கொள்வான். அட்டைத்தட்டி மறைந்து போகும்.



லலிதா போய் விட்ட சில நாட்களிலேயே கணேசனுக்குப் பக்கத்தில் படுத்துக் கொள்ள சரஸ்வதி வந்து விட்டாள். இடையே அட்டைத் தடுப்பு ஒன்றுமில்லை என்றபோதும் பல நாட்கள் இவன் விட்டத்தையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தான். முதலிரவில் அவசர அவசரமாக அவள் இடையை விலக்கி அதில் அந்த இள மஞ்சள் நதியைத் தேடினான். குதிக்க முடியாத படி அது வறண்டிருந்தது. என்றாலும் அவள் அழைக்கும் பொழுது இவன் போக வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் லலிதாதான் இவன் ஆண்மைக்கு இழுக்கு வராதபடி காப்பாற்றி வந்தாள். சரஸ்வதி கணேசனை அழைக்கும் போதெல்லாம் கணேசன் லலிதாவை அழைத்தான்.




*************


பீரோவைப் பார்த்து நின்றிருந்த பிரபுவின் முடியை பற்றியிழுத்து சுவற்றில் முட்டப் போனார் கணேசன். முட்டாது சட்டையை இறுகப்பற்றிஇழுத்தார். இரண்டு உடல்களும் நிர்வாணமாக கட்டிலில் புரளும் காட்சி ஒருகணம் அவருள் தோன்றிமறைந்தது. “ அவ ஒரு அரைக்கெழவிடா நாயே.. அந்த அரைக்கெழடு உனக்கு பத்துநாள்ல சலிச்சிரும் போ” என்று சபித்துவிட்டு மூர்க்கத்தோடு அவனை பின்னே தள்ளி விட்டார்.ஆனால்அது ஒரு சபிக்கும் பாவனையிலான கெஞ்சலைப் போன்றுதான் இருந்தது. அவன் அருகேயிருந்த டி.வி டேபிளின் மேல் சரிந்து விழுந்தான்.


கிராமங்களில் மனிதர்களுக்கு மட்டுமல்ல சில வீடுகளுக்கும் பட்டப்பெயர்கள் இருக்கும். அப்படி சொல்வதென்றால் பிரபுவின் வீட்டை சச்சின்டெண்டுல்கர் வீடென்று சொல்லலாம். வீட்டின் சுவற்றில், கதவில், மின்விசிறியில், பீரோவில், கொடியில் தொங்கும் பிரபுவின் பனியன்களில், அவன் ஓட்டிச்செல்லும் இருசக்கர வாகனத்தின் முகத்தில் என்று சச்சின்எங்கெங்கும் நிறைந்திருந்தார். இப்படி அவன் நினைவும் கனவுமாக இருந்த கிரிக்கெட்தான் அவனை அவன் ஊழ்நோக்கிக் கூட்டிப் போனது. வெள்ளலூரில் மேட்ச் விளையாடப் போகும் வழியில் பந்து வாங்குவதற்காக ஒரு அண்ணாச்சி கடைக்கு போனான் பிரபு. அங்குதான் லலிதா வறுத்த சேமியாவும், தயிர்பாக்கெட்டும் கேட்டு நின்று கொண்டிருந்தாள். பார்த்த முதல் நாளே அவள்வீடு வரை போனான். இரண்டொரு நாளில் வீட்டிற்குள் போனான்.ஆறு நெறுங்க நெறுங்க ஆடைகளை களைந்தபடியே ஓடி வந்து தாவிக்குதிக்கும் கிராமத்துச் சிறுவர்களைப் போல அவன் அந்த இளமஞ்சள் நதிக்குள் பாய்ந்து விழுந்தான்.

ஓடிப்போதல் என்பதே மரபுக்கு எதிரானதுதான். ஆனால் பிரபு செய்ய இருப்பது மரபார்ந்த ஓடிப்போதலுக்கு எதிரானது. தன்னை விடப் பெரியவளுடன் ஓடுவது.பெரியவள் என்றாள் கிட்டத்தட்ட இருபது வருடம் பெரியவள். ஆங்காங்கே ஊறத்துவங்கி விட்ட வெண்நரைக் கற்றைகளை கருஞ்சாந்து பூசி மறைத்திருக்கிற பெரியவள். ஊரின் வாயிற்கு மென்று தீராத அவல்.

கணேசணின் ஆத்திரம் இப்போது அழுகையாகி வழிந்து கொண்டிருக்கிறது. அவரின் முறுக்கிய மீசையிலும், அடர்ந்த தாடியிலும் கண்ணீர்த்துளிகள் சிக்கி நின்றன. அவர் தன் ஒரே ஒரு பிள்ளையின் முன்னே கைகூப்பி கும்பிட்டு நின்றார்.

“ தயவு செஞ்சு ஊர்கண்ணுக்கு சிக்காம எங்கயாவது தூராமா கூட்டிடு போய்டுடா...”


அப்போது தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த சரஸ்வதி அலறியபடியே அவன் கால்களை நோக்கித் தவழ்ந்து வந்தாள்.அவன் காலை வேகமாக இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். வாசலில் அமர்ந்து ஷு மாட்டிக் கொண்டிருந்தவனையே இமைக்காது வெறித்துக்கொண்டிருந்தார் கணேசன். அப்போது முதல்முறையாக அவனுக்கு காது என்னவோ செய்தது. அவன் தன் காதை ஒரு முறை சுண்டிவிட்டு அதன் மடலை இரண்டு முறை தேய்த்து விட்டான்.


நன்றி - தூரன் குணா , இளங்கோ கிருஷ்ணன்

Comments

உங்கள் நடை வித்தியாசமாக இருக்கிறது இசை. கதையின் நடையைச் சொன்னேன்.. ரொம்ப யதார்த்தமாகவும் இருக்கு.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம