1 தூங்கிக்கொண்டிருக்கும் சொற்களை
நடுச்சாமத்தில்
தலையால் முட்டிமுட்டி எழுப்புபவர்கள் ஆனந்தன்கள்
2. இன்று வந்திருப்பது அநாதைநிலா
இது அநாதையொளியை
நிலமெங்கும் தளும்பவிடுகிறது.
3. விரிசடை நுனியில்
அசைந்தாடும் நீர்ச்சொட்டு
உன்னை
மேலும் அநாதையாக்குகிறதா ஆனந்தா
4. கிணற்றுக்கு பயந்து
முட்டைபரோட்டாவிற்குள் குதிப்பது
ஆனந்தனின் வழக்கம்
5 போவதற்கு வேறுஇடங்கள் இருப்பவர்கள்
எவ்வளவு எளிதாக
“ குட்பை “ சொல்கிறார்கள்
பார்த்தாயா ஆனந்தா
6 “ எங்க போறதுன்னு தெரியலயே”
என்கிற சினிமா வசனத்திற்கு
கைகொட்டிச் சிரித்தவன் தானே நீ
இன்று
அதையே சொல்லி அழு.
நன்றி : காலச்சுவடு மே -2013
Comments