Skip to main content

போலீஸ் நம்மை வீட்டிற்கு அனுப்புகிறது


   


நேற்று மாலை
சுரேஷ்பேக்கரி வாசலில் நின்று
நானும் இளங்கோவும் பேசிக்கொண்டிருந்தோம்.
இளங்கோ எப்போதும் ஒரு தத்துவவாதியை
உடன் அழைத்துவருவது வழக்கம்.
இந்தமுறை யாரோ யக்ஞ வல்கியராம்.

சிறிது நேரத்திலெல்லாம்
சாமும், ஜானும் வந்துவிட்டார்கள்.
“ ஏகாந்த..வேளை..என்று பாடியபடி
ஜானொடு ஜெயராமன்.

எல்லோரும் தென்காசிக்குப் போய்
கலாப்ரியாவை கூட்டி வந்தோம்.
கொஞ்சம் கூட்டம் தான் கூடிவிட்டது.
கலாப்ரியா அடிக்கடி யெயராமனை
கட்டியணைத்து முத்திக்கொண்டிருந்தார்.
அது குறித்து எம்.கே.டி க்கு ஒரு வருத்தமும் இல்லை
அவர் எப்போதும் போல் பூரித்த சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார்.

பணிரெண்டு பேர் கூடி
மணிக்கணக்கில் குடித்துக்கொண்டிருக்கும்
ஒரு குவளை தேநீர்
மதுரம்....அதி மதுரம் 


பக்கத்து பெட்டிக்கடையில் வியாபாரம் தூள் பறக்கிறது.
சுகுமாரன் ஒரு பாக்கெட்டின் கடைசி சிகரெட்டை
புகைத்துக்கொண்டிருக்கையில்
கரகரத்த சத்தத்துடன் கடைகளின் ஷட்டர்கள் கீழிறக்கப்பட்டன.
விளக்குகள் அணைக்கப்பட்டன.
ஆணைகளைப் பிறப்பித்த படியே 
PATROL “  வண்டி   எங்களைக் கடந்து போனது.
இடை நின்ற பேச்சு தொடர்ந்து வளர்ந்தது.
தொ.ப  “ குடிசாமிகளுக்கு தரப்படுகிற இரத்தப் பலி “
குறித்து சொல்லிக்கொண்டிருக்க
போன வண்டி திரும்பி வந்ததை யார் கண்டார் ?
“ டேய்.. “ என்கிற சத்ததிற்கு
 கூட்டம் திசைக்கொன்றாய் சிதறி விட்டது.
 எம்.கே.டி தன் பட்டுஜரிகை வேட்டியை
 தூக்கிக்கட்டிக்கொண்டு ஒரு மூத்திரச் சந்திற்குள் ஓட
 நமது யக்ஞவல்கியர் பெட்டிக்கடை மறைப்பில் ஒளிந்து கொண்டார்.
ஏண்டா .. உங்களுக்கெல்லாம் வீடே கிடையாதா ..
 என்று கேட்கிறது போலீஸ்
 ஐயா , நிஜமாகவே எங்களுக்கென்று ஒரு வீடில்லை.
 வீடு எங்களை போலீஸில் பிடித்து தர
 போலீஸ் எங்களை வீட்டிற்கு பிடித்துக் கொடுக்கிறது.



                                           
                                                                                                                                                                                                    (  ஜானுக்கு ...)


                                                      
                       நன்றி : தி இந்து தீபாவளி மலர்

Comments

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...