நினைவில் வீடுள்ள மனிதன்
மொரிஷியஸ் தீவிற்கு புறப்படுகிறான்.
கிளம்புகையில்
தன் வீட்டை அடியோடு பெயர்த்துக் கொண்டு போய்
கப்பலில் ஏற்றுகிறான்
பாவம், அது தள்ளாடுகிறது
சென்ற வாரம் அவன் ஒரு சினிமாவிற்குப் போனான்.
சொல்பேச்சு கேளாமல்
அதிவேகத்தில் பைக்கோட்டித் திரியும் தன் இளையமகன்
ஒரு லாரிச்சக்கரத்தில் சிக்கி
உருச்சிதைந்து போவதை அவனதில் பார்த்தான்.
நினைவில் வீடுள்ள மனிதன்
பூங்காக்களின் புதர்மறைவில் தன் மகளையே
காண்கிறான்
நினைவில் வீடுள்ள மனிதனுக்கு
இருபத்தியேழாம் வாய்ப்பாடு
மனப்பாடமாக தெரிந்திருக்கிறது
நினைவில் வீடுள்ள மனிதனின்
கேஸ் சிலிண்டர் தானாகவே திறந்து கொள்கிறது
அவன் அலுவலகம் போனதும்
அது “ டும்” என்று வெடிக்கிறது.
நினைவில் வீடுள்ள மனிதனின்
தலைக்கு மேலே ஒரு புகைப்போக்கி நீண்டிருக்கிறது
அவனது நெஞ்சத்தில்
ஏதோ ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.
நினைவில் வீடுள்ள மனிதன்
கடல் வழியே போய்
கடல் வழியே திரும்பினானென்றாலும்
துளிநீலமும் கண்டானில்லை.
நன்றி :
ஆனந்தவிகடன்; தீபாவளி சிறப்பிதழ்
Comments