Skip to main content

கார் சிறப்பு


                                 


வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
அன்பார்ந்த நடத்துனரே ,
10- லிருந்து  7- கழித்தால் எதுவுமே வாராது
என்கிற உங்கள் கணக்கை
மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறேன்.

வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
வீதியில் கிடக்கும் பூனைக்குட்டி
வீதியைத் தாண்டி
வாசலைத் தாண்டி
படி தாண்டி
என் படுக்கையில் ஏறி  என் மேலும் ஏறலாம்.

வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
போய்விடுவேன்போய்விடுவேன்
என்று மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு  அன்பை
போய்விடு  என்று சொல்லிவிடலாம்.

 வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
அடியேன்  நல்லதொரு  நாட்டுக்கழுதை
எத்தனை  மூட்டையை  ஏற்ற முடியுமோ
அத்தனை  மூட்டையை  ஏற்றலாம்.


வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
சுமாராக பாடும்  ஒரு மனுசனுக்கு
பிரமாதம் என்கிற சொல்லை  வழங்கலாம்.


வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கையில்
யாரையும் முந்தாமல் எங்கேயும் போகாமல்
எங்காவது போகலாம்.

 வானம் கொஞ்சம் கறுப்பாய் இருக்கும் பட்சத்தில்
மொட்டை மாடியில் நிற்கலாம்
பொரி வறுத்துத் தின்னலாம்
டீ, காபி குடிக்கலாம்
மனைவியை  கூட  முத்தமிடலாம்.

                                     நன்றி : அம்ருதா - ஜூன் - 2015

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை