பிள்ளைவரம் வேண்டி
அரசமரம் ஆலமரம்
அந்தமரம் இந்தமரம்
கண்டமரம் சுற்றிக்களைத்த கடைசியில்
இரங்கி வந்தது இறை…
“ தற்போதைய கையிருப்பு இரண்டு ஆண்மகவுகள்…
ஒரு குழந்தை “ சச்சின் டெண்டுல்கர் “ என்று
நாமகரணம் சூட்டப்படும்.
16 வயதில் மட்டையைத் தூக்கிக்கொண்டு உலகத்தின் முன் வருவான்
தன் கதாவீச்சால் சாதனைகளின் நெஞ்சைப்பிளப்பான்
ரூபாய், டாலர் , யென் என எல்லாவற்றிலும் சம்பாதிப்பான்.
இவன் துய்த்தெறிந்த பொருட்கள் லட்சங்களில் ஏலம் பெறும்.
இவனுக்கு ஏக்கமே இராது
அதன் விளைவாக கனவும் வாராது.
புகழ் வீங்கி முற்றியதோர் கட்டத்தில்
“ கடவுள் “ என்றே அழைக்கப்படுவான்
நீ கடவுளின் தாயாக இருப்பாய்
இன்னொருவன் பெயர் ”சத்தியமூர்த்தி”
லேசாக நா நடுங்கும்
அவ்வப்போது உடல் கிடந்து உதறும்
அவசரவசரமாக மீசை அரும்பி
அக்காக்கள் குளிக்கையில் படலைப் பிரிப்பான்
பகல் முழக்க தூக்கம்
இரா முழக்க ஆட்டம்
என்றலைந்து திரிவான்.
அப்பாவை விழுங்கிவிட்டு
உன்னை வைத்து வைத்து தின்பான்.
குலப்புகழின் தொடைச்சொறி..
மலக்குழம்பில் நெளிபுழு….
நின் கண்ணீரில் கரைந்தே கதை முழுக்க சொன்னோம்
இருவரில் ஒருவர்
யார் வேண்டும் சொல் மகளே ! “
என் தாயவள்
மாசற்ற மாணிக்கம் …
மாற்றுகுறையா தங்கம்…
”சத்தி” தான் வேண்டுமென்று
ஆடாது அசையாது
உறுதி காத்து நின்றதில் பிறந்து வந்த குழந்தை நான்
அன்னை ! அன்னை ! அருட்பெருஞ்சோதி !
அன்னை ! அன்னை ! தனிப்பெருங்கருணை !
Comments
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.
Pinthik kidaiththa Peru varam.
Saththi, saththi
Munthich sellum vazhith thunai.