Skip to main content

ஐயோ… இந்தக் கரிப்பு !




எனக்கு எம்ஜியாரை அறவே பிடிக்காது
அதிகாலையிலேயே
அவர் கவுண் உடையில் தோன்றி
ஏதோ சூளூரைத்துக்கொண்டிருந்தார்.
எனவே சேனலை மாற்றினேன்.
மாற்றிய கையோடு  எதேச்சையாய்
கண்ணாடி பார்க்க
அது ரசமிழந்து உளுத்திருந்தது.
அதை மாற்றினேன்.
அழுக்கு அரசாளும் சீப்பை மாற்றினேன்.
இந்த பாத்ரூம் பைப்பை மாற்ற வேண்டுமென்று
பல்லூழிகளாக எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று அதை மாற்றினேன்.
அண்ணாந்து நோக்க
COFFE- யும் , தினசரியுமாக
பால்கணியில் வீற்றிருந்தான் எதிர்வீட்டு சீமான்.
அவனை மாற்றினேன்.
என் மொபட்டை
பள்ளத்துள் ஒதுக்கிவிட்டு பறக்கிறது ஒரு “ SCORPIO”
அதை சைக்கிளாக மாற்றினேன்.
பணிமனையில் பக்கத்துசீட்டில்
எப்போதும்
ஓர் “ அப்போது அலர்ந்த தாமரை “
அதை மாற்றினேன்.

உணவுவேளையில்
சோற்றுப்பொதி திறந்து அமர்ந்தால்
10 வாழ்க்கைகான உப்பை
அள்ளிக் கொட்டியிருந்தாள்  பத்தினி.
அந்த ரிமோட்டை
என் நெற்றிப்பொட்டில் வைத்து
ஒரு அழுத்து அழுத்தினேன்.

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.