ஒரே மகள்
தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறாள்
விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம்
மாதம் இரண்டாகிறது
இப்போதுதான் நாளுக்கு ஒரு முறையென
விழித்துப் பார்க்கிறாள்
அப்போதும்
எங்கேயோ பார்த்துவிட்டு கண் மூடிக்கொள்கிறாள்
இவள் சவம் போலாகிவிட்டாள்
இரண்டு நாட்கள் பட்டினி கிடந்தாள்
பிறகு
நான்கு இட்லிகளை வாங்கி
அதில் இரண்டரையை சாப்பிட்டாள்.
ஒரு நாள்
நான்கு இட்லிகளுடன் வந்த சர்வரிடம்
” ரவா ரோஸ்ட் “ இருக்கா ? என்று கேட்டாள்
வாங்கி உண்டாள்...
முழுசாக உண்டாள்...
கடைசியில் சுண்டுவிரலைக் கூட சப்பினாள்
கைகழுவும் வேளையில் தான் உணர்ந்தாள்
தீடீரென இப்படி “ ரவா ரோஸ்ட் “ தின்று விட்டதை.
உணவகம் ஒலிவீசக் கத்தினாள்.
Comments