பிரச்சனை
” சிக்கெனப் பற்றுதலில் “ தான் இருக்கிறது.
நல்லவேளையாக வாதவூரனுக்கு
உடைந்த மதியும், ஊரும் பாம்பும்
கிடைத்து விட்டன.
அவன் அதைப்பற்றிக்கொண்டு கதிமோட்சம் கண்டான்.
கச்சவிழ்ப்பின் வழியே வீட்டுலகம் அடைந்தவர்களை
அவன் அங்கு சந்தித்தான்.
சிக்கெனப்பற்றப்படும் எதுவும்
யாரையும் கைவிட்டு விடுவதில்லை.
எவ்வளவு முயன்றும்
எப்படிப் புரண்டும்
எதையும் பற்றிக்கொள்ள இயலாதவர்கள்
கடைசியாக
தாம்புக் கயிறு வாங்கிவர
வேகமாக கிளம்புகிறார்கள்.
ஆகத்துயரம் என்னவெனில்
அவர்களில் பலருக்கு
அதுவும் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.
Comments