Skip to main content

பரட்டைத்தலை அன்பு

                                           
 



தெருமுக்கில் குந்தி 
பீடி வலிக்கும் பரட்டைத்தலை என் அன்பு
நீ பார்க்கும் போது
அது பீடியைக் கீழே எறிவதில்லை
நீ காணும் போது எறிய வேண்டும் 
என்பதற்காகவே
அதைப் பற்ற வைப்பதுமில்லை


ஒரு நிமிடம் முன்புதான்
அது ஒரு குருட்டுப்பிச்சைக்காரனுக்கு
சாலையைக் கடக்க உதவியது
அதற்குத் தெரியும் ஒரு நிமிடத்தில்
நீ வந்து விடுவாயென.
அதற்குத் தெரியாததோ
ஒரு நிமிடம் அவனைத் தாமதிக்க வைக்கும் லாவகம்


அது பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறும் முன்பே
கண்டு கண்டு சலூன் கண்ணாடிகளை உடைக்கும் முன்பே
கிளிப்பசையிலிருந்து  மென்கட்டச் சட்டைகளுக்கு மாறும் முன்பே
அதை கால்சட்டைக்குள் செருகி விட்டுக் கொள்ளும் முன்பே
கிச்சுக்குள் நறுமண தைலங்களை பூசிக்கொள்ளும் முன்பே
பிறவியிலிருந்தே சாய்ந்திருக்கும் நடையை வெட்டிச் சீராக்கும் முன்பே
அவசர அவசரமாக 
அதற்கு அன்பு வந்து விட்டது


நேர்த்தியற்ற அன்பு
உன்னை முத்தமிடுகிறது
அது இந்த உலகத்தில்
இது வரை யாராலும் இடப்படாத ஒரு முத்தம்
ஆனாலும் என்ன,
கடைவாயில் கொஞ்சமாக  சல்லொழுகி விட்டது
சல்லொழுக்கும் நேர்ந்தே  அதன் முத்தம்.


                                          நன்றி  : குங்குமம்  வாரஇதழ்









Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான