Skip to main content

ஆயிரம் ஸ்தோத்ரம்

               
                       
                  


காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில்
மொத்தம் 9 குறுக்குச்சந்துகள் உள்ளன
அதில் மூன்றாவது சந்தில்
கனவுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு மகள்
பள்ளிச்சீருடையில்
நாணிக்கோணிக் காதலித்துக் கொண்டிருக்கிறாள்
அதன் ஐந்தாவது சந்தில்
19 வயதில் இல்லறத்துள் உதைத்துத் தள்ளப்பட்ட
அவள் அன்னை
விட்டதைப் பிடிக்கும் முனைப்புடன் தீவிரமாக காதலித்துக் கொண்டிருக்கிறாள்.


முதல் சந்தில் அமர்ந்திருக்கிறார்
ஒரு அரசமரத்தடி பிள்ளையார்.
அவர்தான் அந்த ஒன்பது சந்துக்களையும்
இழுத்துப் பிடித்துக் காவல் செய்கிறார்.
வாயிலிருந்து விசிலை இறக்காமல்
ஓடியாடி பணியாற்றுகிறார்.
ஒரு கண்டிப்பான போக்குவரத்துக் காவலரைப் போல
அந்தந்த சந்திற்கான வாகனங்களை
மிகச் சரியாக
அதனதன் வழியில் விடுகிறார்.


“privacy “  என்கிற சொல்லால்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிற இருவரும்
ஒருவர் போனை ஒருவர் நோண்டுவதில்லை.
ஒருவர் அறையை இன்னொருவர்
துப்பறிவதில்லை.


நள்ளிரவில் சின்ன சத்தமும் துல்லியமாகிவிடும் என்பதால்
இரண்டு போன்களிலும்
DIAL PAD TUNE “ கள் “ mute “ – இல் இருக்கின்றன.



அன்னையர் தினத்திற்கு
மகள் ஒரு கட்டிமுத்தத்தை பரிசளிக்கிறாள்.
காதலர்தினத்திற்கு
அன்னை
ஒரு பற்தடத்தை
பரிசளிக்கிறாள்.
மூன்றாவது சந்தும் ஐந்தாவது சந்தும்
அதனதன் கதியில் இயங்கிக் கொண்டிருப்பதால்
கட்டிமுத்ததிற்கோ, பற்தடத்திற்கோ
ஒரு குறையும் நேர்வதில்லை.


உமைக்கினிய மைந்தன், கணநாதன்
நம் குடியை வாழ்விப்பான்.
அவனுக்குச் சொல்வோம் ஆயிரம் ஸ்தோத்ரம்.


                     
                    நன்றி : உயிர்மை : ஜூலை -2017

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.