Skip to main content

டி.வி-யைப் போடு !

                                         
                                                                                 




நிசப்தம் ஒரு நச்சரவம்
அதன் நீலம் உந்தன்  மூளையைத் தீண்டும் முன்
டி.வி-யைப் போடு!

கொட்டும் அருவியும் ஒழுகும் சுனையும்
வெக்கை அறையைச் சற்றே ஆற்றலாம்
டி.வி-யைப் போடு!

எப்போது திறந்தாலும் செய்திகள் ஓடும்.
விடிய விடிய ஜோக்குகள் வெடிக்கும்
இரண்டில் ஒன்றைப் பார்த்துச் சிரிக்கலாம்
டி.வியைப் போடு!

உயிர்நடுக்கும் கோர விபத்துகள் அடிக்கடி காட்டும்
கடவுளின் கருணையால் நீ அதிலில்லை
டி.வி-யைப் போடு!

முதலையின் வாயிலொரு வரிக்குதிரை...
உனக்கு அந்தக் குதிரையைத் தெரியாது
முதலையையும் தெரியாது
டி.வி- யைப் போடு !

காமுகியொருத்தி 
தன் பரந்த முதுகை உவந்து தருவாள்
 கையது ஒடுக்கி காலது குறுக்கி
நீ அதில் கிடக்க
டி.வி-யைப் போடு!

பக்கத்து வீட்டின் மகிழ்ச்சி வெள்ளம்
பெருக்கெடுத்து வந்துனை
அடித்துப் போகும் முன்
டி.வி-யைப் போடு!


                                                      நன்றி : உயிர்மை - நவம்பர் -2017

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை