நோயுற்றவனை
நந்தவனத்தை நோக்கும்படி
படுக்கவைக்காதிருப்பது நல்லது
புலரியின் இளங்கதிர்கள்
அவன் கண்களில் எரியும்.
வீசு தென்றலுக்கும், வீங்கிள வேனிலுக்கும்
அவன் தலை வெடித்துவிடும்.
சடசடக்கும் மழை நடனம்
அவன் ஊனத்தைப் பெருச் செய்யும்.
கீச்சொலியின் கூரலகு
அவன் நெஞ்சத்தில் துளையிடும்.
விளக்கை அணைத்து விட வேண்டும்
கதவை நன்றாகத் தாளிட வேண்டும்.
கம்பிகளுக்கிடையே நாக்கை நீட்டி
இந்த வாழ்வை நக்கிவிடாத படிக்கு
சாளரத்தை அடித்துச் சாத்தி விட வேண்டும்.
நோயுற்றவனை
நந்தவனத்தை நோக்கும்படி
படுக்கவைப்பது நல்லது.
புலரியின் இளங்கதிர்கள்
அவனை
மடியில் ஏந்தித் தலைநீவும்.
தென்றலும், வேனிலும்
அறையை வெளியாக்கும்.
கொட்டுமழை
அவனது
நனையாத இடத்தையெல்லாம் நனைத்துவிடும்.
கீச்சொலிகள்
இந்த வாழ்வு ஒரு பாடல் என்று
அவனுக்கு உறுதி சொல்லும்.
மைனாவைக் கண்டு கண்டு
மைனாபோலாகி
மைனாவாகி விடலாம்.
நோயின் வாயிலிருந்து
ஒரு மைனா பறந்து செல்வதை
நாம் கண் ஆரக் காணலாம்.
Comments