Skip to main content

நந்தவனம்


நோயுற்றவனை
நந்தவனத்தை நோக்கும்படி
படுக்கவைக்காதிருப்பது நல்லது
புலரியின் இளங்கதிர்கள்
அவன் கண்களில் எரியும்.
வீசு தென்றலுக்கும், வீங்கிள வேனிலுக்கும்
அவன் தலை வெடித்துவிடும்.
சடசடக்கும் மழை நடனம்
அவன் ஊனத்தைப் பெருச் செய்யும்.
கீச்சொலியின் கூரலகு
அவன் நெஞ்சத்தில் துளையிடும்.
விளக்கை அணைத்து விட வேண்டும்
கதவை நன்றாகத் தாளிட வேண்டும்.
கம்பிகளுக்கிடையே நாக்கை நீட்டி
இந்த வாழ்வை நக்கிவிடாத படிக்கு
சாளரத்தை அடித்துச் சாத்தி விட வேண்டும்.

நோயுற்றவனை
நந்தவனத்தை நோக்கும்படி
படுக்கவைப்பது நல்லது.
புலரியின் இளங்கதிர்கள்
அவனை
மடியில் ஏந்தித் தலைநீவும்.
தென்றலும், வேனிலும்
அறையை வெளியாக்கும்.
கொட்டுமழை
அவனது
நனையாத இடத்தையெல்லாம் நனைத்துவிடும்.
கீச்சொலிகள்
இந்த வாழ்வு ஒரு பாடல் என்று
அவனுக்கு உறுதி சொல்லும்.
மைனாவைக் கண்டு கண்டு
மைனாபோலாகி
மைனாவாகி விடலாம்.
நோயின் வாயிலிருந்து
ஒரு மைனா பறந்து செல்வதை
நாம் கண் ஆரக் காணலாம்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை