Skip to main content

நான்கு கவிதைகள்

மர்ம மலர்
தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.
விடாது தொடுத்த 11 வது அழைப்பால்
தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.
அவன் ” ம்” கொட்டுகிறான்.
உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறை
தலைவி தன் தலை கொண்டு மோதி
அதையும் உடைக்கிறாள்.
கண்ணீரில் உடைந்த குரலிற்கென்று ஒரு தனி மதுரமுண்டு.
தலைவன் அதை முன்பறியா பாலகன்.
அம்மதுரம்
ஊடலின் கழுத்தைத் திருகி
குப்பை மேட்டில் எறிகிறது.
விட்ட கதைகளை பேசித் தீர்த்தபின்
அவன் தன் உள்ளாடையில்
ஒரு சின்ன ஈரத்தை உணர்ந்தான்.
அது கண்டு திகைத்தான்.
குழம்பினான்.
வருந்தினான்.
பிறகு
வெற்றுத் தரையில்
நிலவின் கீழ் மல்லாந்த படி
தன் முதல் பாடலைக் கட்டினான்.
“உலகின் அழகான விந்துக்கறையே!”

ஒழிக நின் கொற்றம் !

என் பொறாமை
எனக்கு வணக்கம் தெரிவித்தது.
நான் தூரத்து மேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தோள்தொட்டுத் திருப்பி
திரும்பவும் சொன்னது.
முகந்திரிந்து யார் என்பது போல் நோக்கினேன்.
பேர் சொன்னது
ஊர் சொன்னது
ஒன்றாகப் படித்த பள்ளியைச் சொன்னது.
இருவருக்கும் பொதுவான நண்பர்களைச் சொன்னது.
எந்தெந்த மரத்திலேறி
எந்தெந்த ஆற்றில் குதித்தோம்
என்று சொன்னது.
அடிவயிற்றில் உதைபட்டு
கும்மிருட்டில் கிடந்து விசும்பிய நாளை
நினைவு படுத்தியது.
பழங்கதைகள் இப்படி பலபல பேசியது.
கடைசியில்
ஒரு ஒடுங்கிய அலுமினியப் பாத்திரத்தை
தலையிலேற்றி
குரங்கைப் போல் குட்டிக்கரணம் அடித்துக் காட்டியது.
“தெரியவே தெரியாது” என்று
உறுதியாக மறுத்துவிட்டேன்.

பேசிக் மாடலுக்குத் திரும்புதல்
தன் ஆண்ட்ராய்டை தரையில் அடித்து
உடைத்து விட்டு
பேசிக் மாடலுக்குத் திரும்புகிறான் ஒருவன்.
பேசிக் மாடலுக்குத் திரும்புவதென்பது
மாட்டு வண்டிக்குத் திரும்புவது
நிலா சோற்றுக்குத் திரும்புவது
அணிலாடும் முன்றிலுக்குத் திரும்புவது
P.b. ஸ்ரீனிவாஸிற்குத் திரும்புவது
மீதியை வெண்திரையில் காண்க என்கிற
பாட்டுப் புத்தகத்திற்குத் திரும்புவது
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு
சூர்யா டி.விக்குத் திரும்புவது
“I love you” என்கிற ஆகப் பெரும் குழப்பத்திலிருந்து
“நான் உன்னைப் புணர விரும்புகிறேன்” என்கிற
தெள்ளத் தெளிவிற்குத் திரும்புவது.



அவ்வளவு
நீ ஏன்
அவ்வளவு தூரத்திலிருக்கிறாய்?
சென்று
காணுமளவுக்கு.

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.