வீட்டிலிருந்து
இதயங்களிலிருந்து அறிவிலிருந்து ஆலயங்களில் இருந்து போதைகளில் இருந்து பொருட்களிலிருந்து ஒளிந்து கொண்ட ஒவ்வொன்றிலிருந்தும் ஓட ஓட விரட்டப்பட்டேன் தண்டவாளத்தில் ஒளிந்து கொள்ள அவ்வளவு பயம். ஒரு கவி செம்பருத்தியின் குழலைக்காட்டி " இதற்குள் இரு" என்கிறான். இவ்வளவு பெரிய நான் இதற்குள் ஒடுங்க இயலுமா? ஆனால் இது புதிதாக இருக்கிறது. இனிதாக இருக்கிறது. ஒளிந்து கொண்டது போலவே ஆகிவிட்டது. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments