இந்தத் தனியறைக்குள் கொஞ்சம் கோப்பையை நிரப்பி ஆண்ட்ராய்டு போனோடு ச்யர்ஸ் சொல்கையில் செத்து மிதக்கிறது நம் மது. நமது ஏகாந்தங்கள் களியாட்டங்கள் தாறுமாறான பாடல்கள் கண்ணீரில் ஊறிய சோபா செட்கள் திடீர் திருப்பங்களில் நிகழும் அடிதடிகள் எல்லாவற்றையும் எவனோ ஒருவன் துவரப் பெருக்கி பூமிக்கு வெளியே தள்ளிவிட்டான். நமது அறையிலிருந்து கோபித்துக் கொண்டு கிளம்பும் ஒருவனைப் போல மகிழ்ச்சி ஆவேசமாக படியிறங்கிப் போவதைப் பார்! இப்போதே புரிகிறது போதை உனது கோப்பையிலிருந்துதான் எனது தலைக்கு ஏறியிருக்கிறது. உண்மையில் நாம் மதுவை காய்ச்சித்தான் குடித்திருக்கிறோம் நண்பா! (மிஷ்கினுக்கும், சாம்ராஜிற்கும்) |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments