இந்தத் தனியறைக்குள் கொஞ்சம் கோப்பையை நிரப்பி ஆண்ட்ராய்டு போனோடு ச்யர்ஸ் சொல்கையில் செத்து மிதக்கிறது நம் மது. நமது ஏகாந்தங்கள் களியாட்டங்கள் தாறுமாறான பாடல்கள் கண்ணீரில் ஊறிய சோபா செட்கள் திடீர் திருப்பங்களில் நிகழும் அடிதடிகள் எல்லாவற்றையும் எவனோ ஒருவன் துவரப் பெருக்கி பூமிக்கு வெளியே தள்ளிவிட்டான். நமது அறையிலிருந்து கோபித்துக் கொண்டு கிளம்பும் ஒருவனைப் போல மகிழ்ச்சி ஆவேசமாக படியிறங்கிப் போவதைப் பார்! இப்போதே புரிகிறது போதை உனது கோப்பையிலிருந்துதான் எனது தலைக்கு ஏறியிருக்கிறது. உண்மையில் நாம் மதுவை காய்ச்சித்தான் குடித்திருக்கிறோம் நண்பா! (மிஷ்கினுக்கும், சாம்ராஜிற்கும்) |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments