இரைச்சலும் குழப்பமும் நீங்காத சந்தைக்கடைத் தெருவில் அமர்ந்துள்ளது ஒரு நாய் அவ்வளவு அழகாக அவ்வளவு கம்பீரத்தோடு "எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்கிற காவலோடு. நான் அதையே நெடுநேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தேன் அதே நாயின் சாயலில் இன்னொரு நாய் தெரிந்தது. அது பூமிப்பந்தின் முகப்பில் அமர்ந்துள்ளது. அதே பாவனையோடு அதே உறுதிமொழியோடு உள்ளே நாம் மனம் ஓய்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறோம். |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".
Comments