ஏன் வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மனிதர்களைப் போலே இந்த ப்ளூ லைக் இங்கே வாழ்ந்து வருகிறது. கனவான்கள் கொஞ்ச நாட்கள் கைக்கொண்டுவிட்டு கனவானாகவே நீடிக்க முடியாத ஆத்திரத்தில் அவர்களும் அதை கைவிட்டு விட்டார்கள். அதை யாரும் காண விரும்புவதில்லை அதனோடு இரண்டு வார்த்தை பேச நாதியில்லை. கல்யாணங் காச்சிக்கு அழைப்பதில்லை. நீலத்தில் ராசிக்கல் வைத்து மோதிரம் அணியும் மாந்தர்க்குக் கூட அது நல்ல சகுனமில்லை. உலகின் முன்னணி மூளைகள் இணைந்து உருவாக்கிய ஒன்றை "உயிரற்ற சடம்" என்று நேற்றொருவள் ஏசக் கேட்டேன். எல்லோரும் சிவந்த இதயத்தால் அன்பு செய்து கொள்கிறார்கள். சிவந்த இதயத்தால் "காலை வணக்கம் "சொல்லி அதனாலேயே "இரவு வணக்க"மும் சொல்கிறார்கள் இரத்த வேட்கை அலையடிக்கும் சிவப்பால் இறுக அணைத்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள் இரண்டு சிவந்த இதயங்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் சில ருதுவாகி அமர்ந்திருக்கின்றன இப்போது. 'ஆலோலம் பாடி' யில் வரும் அநாதைச் சிறுவனின் முகத்தோடு இந்த ப்ளூ லைக் இங்கு என்னதான் செய்து கொண்டிருக்கிறது? ஆதரவாய்க் கைபற்றி அதை இந்த ஊருக்கு வெளியே விடப் போகையில் துளிர்த்த கண்ணீரில் நமட்டுச் சிரிப்பு கலந்து அது என்னிடம் சொன்னதை நான் உங்களிடம் சொல்லிவிடவே கூடாது என்று எண்ணியிருந்தேன் ஆயினும் உண்மை என்றேனும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரத்தானே வேண்டும்? "அந்த சிவந்த இதயமும் நான்தான் என்பதை அறிய நேரும் போது நீங்கள் என்ன ஆவீர்கள்?" |
Comments