Skip to main content

வதனப் புத்தகம்

 



ன் வாழ்கிறோம்

என்றே தெரியாமல்

வாழ்ந்து வரும்

கோடிக்கணக்கான மனிதர்களைப் போலே

இந்த  ப்ளூ லைக் 

இங்கே வாழ்ந்து வருகிறது.


கனவான்கள் கொஞ்ச நாட்கள் 

கைக்கொண்டுவிட்டு

கனவானாகவே நீடிக்க முடியாத ஆத்திரத்தில்

அவர்களும் அதை கைவிட்டு விட்டார்கள்.


அதை யாரும் காண விரும்புவதில்லை


அதனோடு இரண்டு வார்த்தை பேச நாதியில்லை.


கல்யாணங் காச்சிக்கு அழைப்பதில்லை.


நீலத்தில் ராசிக்கல் வைத்து 

மோதிரம் அணியும் மாந்தர்க்குக்  கூட

அது நல்ல சகுனமில்லை.


உலகின் முன்னணி மூளைகள்

இணைந்து உருவாக்கிய ஒன்றை

"உயிரற்ற சடம்"  என்று

நேற்றொருவள்  ஏசக் கேட்டேன்.


எல்லோரும்

சிவந்த இதயத்தால் அன்பு செய்து கொள்கிறார்கள்.


சிவந்த இதயத்தால் 

"காலை வணக்கம் "சொல்லி

அதனாலேயே  "இரவு வணக்க"மும்

சொல்கிறார்கள்


இரத்த வேட்கை அலையடிக்கும் சிவப்பால்

இறுக அணைத்து  முத்தமிட்டுக் கொள்கிறார்கள்


இரண்டு சிவந்த இதயங்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் சில

ருதுவாகி அமர்ந்திருக்கின்றன 

இப்போது.


'ஆலோலம் பாடி' யில் வரும்

அநாதைச் சிறுவனின் முகத்தோடு

இந்த ப்ளூ லைக்

இங்கு 

என்னதான் செய்து கொண்டிருக்கிறது?


ஆதரவாய்க் கைபற்றி  அதை

இந்த ஊருக்கு வெளியே விடப் போகையில்

துளிர்த்த கண்ணீரில் நமட்டுச் சிரிப்பு கலந்து

அது என்னிடம் சொன்னதை

நான் உங்களிடம் 

சொல்லிவிடவே கூடாது என்று எண்ணியிருந்தேன்


ஆயினும்

உண்மை என்றேனும் ஒரு நாள்

வெளிச்சத்திற்கு வரத்தானே வேண்டும்?


"அந்த சிவந்த இதயமும் நான்தான் என்பதை அறிய நேரும் போது 

நீங்கள் என்ன ஆவீர்கள்?"




Comments

This comment has been removed by the author.

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.