Skip to main content

சொர்க்கம் என்கிற உவமைக்கு..

 



சாக்லெட்டை நீட்டும்

அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.


சின்ன சாக்லெட்டை கூட நீட்டாதவன்

இந்த பூமிக்கு அந்நியன்

அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.


நைஸாகப் பேசுபவர்களிடம் 

கவனமாக  இருக்க வேண்டும்.

உம்மனாம் மூஞ்சிகளிடம் கவனமாகத் தானே இருக்க வேண்டும்.


முத்தமிடுவோரிடம் கவனமாக இருக்க வேண்டும்.

முத்தமிட முடியாதோரிடம் கவனமாகவே இருக்க வேண்டும்.


தனியாக இருக்கும் போது

கவனமாக இருக்க வேண்டும்.

கூட்ட நெரிசலில்

கவனமாகத்தானே இருந்தாக வேண்டும்.


வெய்யிலிடம் கவனமாக இருக்க வேண்டும்.

மழையிடமும், பனியிடமும் 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும்


ஐஸ்கிரீமிடம் கவனமாக இருக்க வேண்டும்.

பல் சொத்தையில் கவனம் தேவை.


விளையாடும் போது

கவனமாக இருக்க வேண்டும்.

விளையாடாத பொழுதிலோ

போனிடம்  கவனமாக இருக்க வேண்டும்.


ஸ்கர்ட்டிடமும் காற்றிடமும்

கவனமாக இருக்க வேண்டும்.


அப்பாவின் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அப்பாவே என்றாலும்

'கவனம்' என்று எச்சரிக்கின்றன

சில க்ரைம் ஸ்டோரிகள்.


தன் அம்மா அல்லாத 

பிற அம்மாக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

'உனக்குமட்டும்தான்'

'நீ மட்டும்தான்'

என்கிற சொந்த அம்மாக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.


கவனமாக இருந்து கொண்டே

குழந்தையாகவும் இருக்க வேண்டும். 



Comments

அவரவரிடமே (மனம்) கவனமாக இருங்கள்
Dr.Logamadevi said…
கவிஞர்களிடமும் கவனமாக இருக்கவேண்டும்

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...