Skip to main content

சொர்க்கம் என்கிற உவமைக்கு..

 



சாக்லெட்டை நீட்டும்

அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.


சின்ன சாக்லெட்டை கூட நீட்டாதவன்

இந்த பூமிக்கு அந்நியன்

அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.


நைஸாகப் பேசுபவர்களிடம் 

கவனமாக  இருக்க வேண்டும்.

உம்மனாம் மூஞ்சிகளிடம் கவனமாகத் தானே இருக்க வேண்டும்.


முத்தமிடுவோரிடம் கவனமாக இருக்க வேண்டும்.

முத்தமிட முடியாதோரிடம் கவனமாகவே இருக்க வேண்டும்.


தனியாக இருக்கும் போது

கவனமாக இருக்க வேண்டும்.

கூட்ட நெரிசலில்

கவனமாகத்தானே இருந்தாக வேண்டும்.


வெய்யிலிடம் கவனமாக இருக்க வேண்டும்.

மழையிடமும், பனியிடமும் 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும்


ஐஸ்கிரீமிடம் கவனமாக இருக்க வேண்டும்.

பல் சொத்தையில் கவனம் தேவை.


விளையாடும் போது

கவனமாக இருக்க வேண்டும்.

விளையாடாத பொழுதிலோ

போனிடம்  கவனமாக இருக்க வேண்டும்.


ஸ்கர்ட்டிடமும் காற்றிடமும்

கவனமாக இருக்க வேண்டும்.


அப்பாவின் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அப்பாவே என்றாலும்

'கவனம்' என்று எச்சரிக்கின்றன

சில க்ரைம் ஸ்டோரிகள்.


தன் அம்மா அல்லாத 

பிற அம்மாக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

'உனக்குமட்டும்தான்'

'நீ மட்டும்தான்'

என்கிற சொந்த அம்மாக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.


கவனமாக இருந்து கொண்டே

குழந்தையாகவும் இருக்க வேண்டும். 



Comments

அவரவரிடமே (மனம்) கவனமாக இருங்கள்
Dr.Logamadevi said…
கவிஞர்களிடமும் கவனமாக இருக்கவேண்டும்

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...