Skip to main content

சொர்க்கம் என்கிற உவமைக்கு..

 



சாக்லெட்டை நீட்டும்

அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.


சின்ன சாக்லெட்டை கூட நீட்டாதவன்

இந்த பூமிக்கு அந்நியன்

அவனிடம் கவனமாக இருக்க வேண்டும்.


நைஸாகப் பேசுபவர்களிடம் 

கவனமாக  இருக்க வேண்டும்.

உம்மனாம் மூஞ்சிகளிடம் கவனமாகத் தானே இருக்க வேண்டும்.


முத்தமிடுவோரிடம் கவனமாக இருக்க வேண்டும்.

முத்தமிட முடியாதோரிடம் கவனமாகவே இருக்க வேண்டும்.


தனியாக இருக்கும் போது

கவனமாக இருக்க வேண்டும்.

கூட்ட நெரிசலில்

கவனமாகத்தானே இருந்தாக வேண்டும்.


வெய்யிலிடம் கவனமாக இருக்க வேண்டும்.

மழையிடமும், பனியிடமும் 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும்


ஐஸ்கிரீமிடம் கவனமாக இருக்க வேண்டும்.

பல் சொத்தையில் கவனம் தேவை.


விளையாடும் போது

கவனமாக இருக்க வேண்டும்.

விளையாடாத பொழுதிலோ

போனிடம்  கவனமாக இருக்க வேண்டும்.


ஸ்கர்ட்டிடமும் காற்றிடமும்

கவனமாக இருக்க வேண்டும்.


அப்பாவின் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அப்பாவே என்றாலும்

'கவனம்' என்று எச்சரிக்கின்றன

சில க்ரைம் ஸ்டோரிகள்.


தன் அம்மா அல்லாத 

பிற அம்மாக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

'உனக்குமட்டும்தான்'

'நீ மட்டும்தான்'

என்கிற சொந்த அம்மாக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.


கவனமாக இருந்து கொண்டே

குழந்தையாகவும் இருக்க வேண்டும். 



Comments

அவரவரிடமே (மனம்) கவனமாக இருங்கள்
Dr.Logamadevi said…
கவிஞர்களிடமும் கவனமாக இருக்கவேண்டும்

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.