Skip to main content

கண் - கடைக்கண்



டவுள் மனிதனுக்கு 

முதலில் கண்களைப் படைத்தான் 

பிறக்கப் பிறக்கவே

அகலத் திறந்து கொண்டன கண்கள்.

மனிதன் மகிழ்ச்சியில் கூவினான்.

நன்றிப் பெருக்கால் மண்டியிட்டான்.

"கடவுளே!

நீர் எமக்கு கண்களை அருளியதன் வழியே

எம்மையும் உன்னைப் போல் ஒரு கடவுளாக்கினீர்!"

கடவுள் ஒரு சிரி சிரித்து விட்டு

பிறகு படைத்தான்

கடைக்கண்ணை.


*


விஷயம் 

மிக மிக எளிது

ஒரு மனிதன் 

இன்னொரு மனிதனை

ஓரக்கண்ணால் பார்க்காமல் இருந்து விட்டால் போதும்.


   

*


தம்பி!

இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்!

மேலும்

இரண்டு கண்களை வாடகைக்கு வாங்கி

எவ்வளவு முடியுமோ அவ்வளவு பார்த்து விடு!

பார்த்துப் பார்த்து பழசாக்கு!

பார்த்துப் பார்த்துப் பாழாக்கு!


*


காதலுக்குக் கண் இல்லை. 

ஆனால்

கடைக்கண் உண்டு.

காதலர் கடைக்கண்ணிலிருந்து

கண்களுக்குத் திரும்புவதுதான்

"காதலின் ஆவியாதல்" 

என்றழைக்கப்படுகிறது


*


கனக சுப்பு ரத்தினா!

காணாமல்

கண்டு கண்டு

கடுகை மலையாக்குவதில்

சமர்த்தன் உன் குமரன்.

அவனை நம்பி

நீ

"மாமலையைக்  கடுகாக்குவேன்" என்று

சைக்கிள்  செயினைச் சுற்றாதே!


 *


கூற்றம்  ! 

கூற்றம் ! 

கூற்றம் !

என்று அலறிக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.


கூற்றம் ! 

கூற்றம்!

கூற்றம்! 

என்ற படி

பார்த்துக் கொண்டே இருக்கிறான் வள்ளுவன்.


பார்வையைத் திருப்பிக் கொண்டால்

பாட்டிற்கு எங்கு போவான் பாவம்?


 *


"கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்; கண்ணே சகல நோய்க்கும் காரணம்" 

என்கிற தட்டையான வரியை 

கவிதை என்றான் சுகுமாரன்.

நான் இரண்டு கண்களாலும் வாசித்து

அவ்வரியை 

கவிதைப் புத்தகத்திலிருந்து வெட்டியெடுத்து

கண் மருத்துவமனையின்

"cash counter" க்குப் பக்கத்தில்  ஒட்டினேன். 

பிறகு 

ஓரக்கண்ணால் வாசித்துவிட்டு

ஆயிரம் கண் வைத்து அழுதேன்.


 *


"நீ விரும்பியது உன் உடல் முழுதும் ஆகுக!"

என்பதோடு கதை முடிந்து விட்டதா என்ன?

அதன் பின்

இந்திரன் அழுதான் என்பதற்கு 

ஆதாரம் உண்டா ஏதும்?


 *


குருடன் ஒருவன்

தடவித் தவறி

தவறித் தடவி

கைப்பற்றிவிட்டான் தடமுலையை.

விறைத்து நீண்ட காம்பை

நுனி நாவால் தீண்டுகையில்

அவன் குருடு நீங்கி ஒளி மின்னியது.

இதோ....

கண்ணுடைக் காதலன் எவனாலும்

காண முடியாக் காட்சி ஒன்று!


*


மின்னுவதெல்லாம் பொன் அல்ல

மின்னுவதெல்லாம் பொன் அல்ல

மின்னுவதெல்லாம் பொன் அல்ல


*


நெற்றிக்குள் உள்ளொடுங்கி

இமைகளைப் போர்த்திக் கொண்டு

நடுங்கும் நாய்க்குட்டிகள் போல்

என்ன ஒரு நடிப்பு!

என்ன ஒரு நடிப்பு?


*


“முதலில் 

மெதுவாகக் கண்களை மூடுங்கள்!”

என்றார் குரு

ஒவ்வொரு கண்ணாய் 

மூடி முடிப்பதற்குள்

மணி ஒலித்து விட்டது


       

நன்றி; காலச்சுவடு நவம்பர்- இதழ்


Comments

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...