முதல் முறை பார்த்த போது ஊரும், பேரும் விசாரித்தேன் என்பது தவிர உறவேதுமில்லை இப்போது ஊர் மட்டும் நினைவிருக்கிறது இடையில் சில மாதங்கள் காணாமல் போய்விட்ட அந்த வளரிளம் சிறுவன் இன்று மீண்டும் தென்படுகிறான் கருத்த வதனத்தின் நெற்றிப் பொட்டில் சந்தனத்தின் பொன் ஊஞ்சல் அன்று போலவே ஆடிக் கொண்டிருக்கிறது என்னை தூரத்தில் கண்டதும் முகம் முழுக்க அரும்பி நெளிந்து குழைந்து நெருங்கி வந்து "சாப்பிட்டீங்களாண்ணே...?" என்றான். நேரம் அப்போது முற்பகல் 11: 30 ஆகவே அது காலை உணவைக் குறிக்காது மதிய உணவைக் குறிக்காது உணவையே குறிக்காது |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments